சட்டப்பேரவை தலைவர் செல்வம் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் ஆர் எஸ் எஸ்,  இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு  எதிராக செயல்பட்டு வருகின்றன. எப்படியாவது மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்டி தங்களது இருப்பை காட்டிக் கொள்வதற்காக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் புதுச்சேரியில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.  கடந்த 20.9.2022 அன்று பெரியார் திராவிட கழகம் சார்பில்  காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும் வகையில் இந்து முன்னணி கும்பல் அங்கே சென்று தகராறில்  ஈடுபட்டு இருக்கின்றது. எப்படி காவல்துறையினர் அவர்களை அனுமதித்தினர் என்பது புரியவில்லை. பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற தைரியத்தில் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் இந்து முன்னணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றது. பெரியார் திராவிட கழகம் போராட்டத்திற்கு எதிராக இந்து முன்னணியினர் கற்களை வீசி உள்ளனர். இதில் ஒரு காவல்துறையினரும் காவல்துறை அதிகாரியும் காயமடைந்துள்ளார். மறுபுறம் , புதுச்சேரி சட்டசபையின் சபாநாயகர் தனது அதிகார வரம்பை மீறி உள்ளார்.

காவல்துறை அதிகாரிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து பெரியார் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது அப்பட்டமான அரசியல் நடவடிக்கையில் சபாநாயகர் ஈடுபட்டிருக்கின்றார் என்பது அம்பலமாகி இருக்கின்றது.

அத்துமீறலில் ஈடுபட்டு கலவரத்தை ஏற்படுத்திய இந்துமுன்னணி கலவரக்காரர்களை நேரில் சந்தித்து   இருப்பது,அவர் வகிக்கும் பதவிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சபாநாயகர் தார்மிக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் மீது வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவன், ஆர்.ராஜாங்கம், செயலாளர்,
சிபிஎம், புதுச்சேரி

Leave a Reply