இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தனது நூற்றாண்டில் கால் பதித்துள்ளது. நாட்டில் உள்ள இதர அரசியல் கட்சிகளை போல் மற்றுமொரு அரசியல் கட்சியல்ல கம்யூனிஸ்ட் இயக்கம். சமூக மாற்றத்தை மனதில் கொண்டு சுயநல நோக்கமின்றி மக்களுக்காக பணியாற்றும் ஒரு இயக்கம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அந்நிய ஆட்சியிடமிருந்து இந்தியாவிற்கு “முழுமையான விடுதலை” என்கிற முழக்கத்தை முதல் முதலில் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். 1921ஆம் ஆண்டு மவுகானா ஹஸ்ரத் மொகானி என்கிற கம்யூனிஸ்ட்டுதான் “இந்தியாவிற்கு முழு விடுதலை” என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் அதை காங்கிரசும் காந்தியும் அதை அப்போது ஏற்கவில்லை என்பதுதான் வரலாறு. கம்யூனிஸ்டுகள் முன்வைத்தை முழுமையான சுதந்திரம் என்கிற இந்த தீர்மானத்தை 1929ல் தான் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.
தெளிவான சிந்தனையோடு கம்யூனிஸ்டுகள் முழுமையான சுதந்திரம் என்கிற முழக்கத்தை முன்வைத்ததால்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து பிரிட்டிஷ் அரசால் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது. ஏகப்பட்ட சதி வழக்குகள் கம்யூனிஸ்ட்டுகள் மீது புனையப்பட்டு கடுமையான சிறை தண்டனையும், பழிவாங்குதலும் நடந்தேறியது.
ரஷ்யாவில் “யுகப்புரட்சி”
1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தொழிலாளர்கள் தலைமையில் மகத்தான புரட்சி நடந்தது. அது உலகிற்கு பல செய்திகளை சொன்னது. பணம் படைத்த முதலாளிகளும், நிலப்பிரபுகளும்தான் ஒரு அரசை நடத்தமுடியும் என்ற பிம்பத்தை உடைத்து, கல்வி, வேலை, சுகாதாரம் என எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலான ஒரு அரசை சாமானிய தொழிலாளிகளால்தான் வழங்க முடியும் என்பதை மாமேதை லெனின் வழிகாட்டுதலில் நடந்த அந்த புரட்சி நிருபித்தது. எனவேதான் மகாகவி பாரதி.
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள் புடைத்தார் வானமரர்
பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண் புகைந்து மடிந்தனவாம்
வையகத்தீர் புதுமை காணீர்.”
என்று உளம் மகிழ்ந்து பாடினார்.
மாற்றத்தை விரும்பிய அனைவருக்கும், விடுதலை வேட்கையோடு இருந்த இளம் தலைமுறையினர் மத்தியிலும் ரஷ்ய புரட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் அது ஏற்படுத்திய தாக்கத்தை போல் விடுதலை வேட்கையோடு இருந்த இந்தியாவிலும் அது குறிப்பிட தகுந்த செல்வாக்கை செலுத்தியது. மேலும் அது வெளிப்படையாக இந்திய விடுதலை போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்தது.
தென்னகத்தின் பாரதி உணர்ச்சி பொங்க ரஷ்ய புரட்சியை பாடியது போல், இந்தியாவின் இளம் புரட்சியாளர் பகத்சிங் போன்ற இளைஞர்களிடமும் ஆக்கப்பூர்வமான சித்தாந்த தெளிவை அது ஏற்படுத்தியது.
இப்படியான தாக்கத்திலிருந்து வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு ஒன்று ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் கூடி 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் துவங்கியது தான் இந்தியர்களின் முதல் கம்யூனிஸ்ட் கிளையாகும். இந்த ஏழு பேரில் எம்.பி.டி.ஆச்சாரியா என்கிற தமிழரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1925ஆம் ஆண்டு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒருங்கிணைந்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைப்பு செயல்பட தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் தமிழகத்தை சார்ந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.
அடக்குமுறைகளை கடந்து
தாஷ்கண்டில் கட்சி துவங்கிய காலத்திலிருந்தே அதன் மீதான கண்காணிப்பையும், தாக்குதலையும் பிரிட்டிஷ் அரசு துவங்கிவிட்டது. ஏனெனில் அப்போது இங்கிருந்த பெரிய இயக்கமான காங்கிரசை விட, சிறு குழுவாக இருந்த வீரியம் மிக்க அமைப்பாக கம்யூனிஸ்ட்டுகளே இருப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசு அஞ்சியது.
1921-1924 ஆம் ஆண்டு காலத்தில் பெஷாவர் சதி வழக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது புனையப்பட்டது. பல கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1924 ஆம் ஆண்டு கான்பூர் சதி வழக்கு புனையப்பட்டது. இந்த வழக்கில் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் கம்யூனிச கருத்துக்களை பத்திரிகைகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்றவர்களை குறிவைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொழிலாளி-விவசாயி பத்திரிக்கையை நடத்தியவரும், 1923 ல் இந்தியாவிலேயே முதன் முதலில் உலக தொழிலாளர் தினமான மே தினத்தை சென்னையில் கொண்டாடியவருமான சிந்தனை சிற்பி சிங்காரவேலரும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நலக் குறைவின் காரணமாக வழக்கிலிருந்து பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
கான்பூர் சதி வழக்கை தொடர்ந்து 1929 ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கு புனையப்பட்டது. மேலும் பல கம்யூனிஸ்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் 1938 முதல் 1942 வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இது சட்டப்பூர்வ தடை. ஏதோ அதுவரை தடையில்லாமல் செயல்படவில்லை. முன்பு சுட்டிக்காட்டிய சதி வழக்குகள் போல் எல்லா மாநிலங்களிலும் சதி வழக்குகள் போடப்பட்டது. தமிழகத்திலும் நெல்லை சதி வழக்கு (1940-41), கோவை சதி வழக்கு (1940-41), மதுரை சதி வழக்கு (1946-47) போன்ற சதி வழக்குகள் போடப்பட்டு பிரிட்டிஷ் அரசால் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டனர்.
சுதந்திர தினத்தை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருந்த போதும் கம்யூனிஸ்டுகள் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். நாம் நன்கு அறிந்த தமிழகத்தின் மூத்த கம்யூனிஸ்டும், விடுதலை போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யாவும் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முதல்நாள் மாலை வரை சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலை போராட்ட தியாகிகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கியபோது, “நாங்கள் நாட்டின் விடுதலைக்காகத்தான் போராடினோமே ஒழிய, இந்த ஓய்வூதியத்திற்காக அல்ல” என்று கூறி மறுத்ததோடு, வேறு பல சலுகைகளையும் வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை பெருமையோடு சொல்லலாம்.
விடுதலை இந்தியாவில் 1948 ல் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி மீது தடைவிதிக்கப்பட்டது.
சீன-இந்திய போரின் போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சொன்னதற்காக மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சி மீது அடக்குமுறை ஏவப்பட்டது. சீன ஏஜென்டுகள் என்று தூற்றப்படடனர். பாகிஸ்தான் – இந்தியா போரின் போதும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. அண்டை நாடுகளுடன் நல்லறவே அவசியம் போர் தீர்வல்ல என்றே தொடர்ந்து முன்வைக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் உதயமானது முதல் 1966 வரை அதன் தலைவர்கள் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர். அவசர நிலை காலத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கி ஒடுக்கப்பட்டனர்.
கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கிய நாள் முதல் அதன் தலைவர்கள் மீது தாக்குதல், சிறைவாசம் என ஆட்சியாளர்களின் ஏகப்பட்ட அடக்குமுறைகளை ஏவினாலும் எல்லாவற்றையும் கடந்து மக்கள் பணியை ஆற்றியுள்ளதை வரலாறு எடுத்துரைக்கும்.
கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு
பிரிட்டிஷ் அரசின் கீழ் செயல்படும் டொமினியன் அந்தஸ்து கொடுங்கள் என்று காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசை கேட்டுக் கொண்டிருந்த போது அதை “பூரண சுயராஜ்யம்” முழுமையான சுதந்திரம் என்ற முழக்கமாக மாற்றியது கம்யூனிஸ்டுகளே. பிரிவினையற்ற ஒன்றுபட்ட இந்தியாவிற்காக கம்யூனிஸ்டுகள் நின்றனர். மதவெறியர்களால் நாடு முழுக்க இந்து முஸ்லீம் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்ட போது மக்களை பாதுகாக்கும் பணியை செய்தனர். வங்காளத்தில் மதவெறி தாக்குதலை தடுக்க காந்தி நவகாளியில் இருந்த போது மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னோடியாக விளங்கிய தோழர் ஜோதிபாசு உள்ளிட்டோர் காந்தியடிகளுடன் மக்கள் ஒற்றுமைக்காக களத்தில் நின்றனர்.
பிரிட்டிசாரிடமிருந்து பெறும் அரசியல் விடுதலை மட்டும் போதுமானதல்ல, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையிலான பொருளாதார விடுதலையும் வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் கம்யூனிஸ்டுகளே. மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களை திரட்டி அவர்களை நாட்டின் உண்மையான விடுதலைக்கும், முழுமையான சமூக மாற்றத்திற்கும் போராட அணி திரட்டும் வேலையை கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளடக்கிய மெட்ராஸ் ராஜ்தானிபோல்தான் மாநிலங்கள் இருந்தன. விடுதலைக்கு பிறகும் வர்த்தக நோக்கோடும், அதிகார மையம் என்கிற சிந்தனையோடும் அவை அப்படியே தொடர்ந்தால் நல்லது என்று காங்கிரஸ் அரசும் கருதியது. மொழி அடிப்படையில்தான் மாநிலங்கள் உருவாக வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்பினர். தமிழ்நாடு, ஐக்கிய கேரளம், விசால ஆந்திரா, சம்யூக்த மாகாராஷ்ட்ரா என்று போராட்டத்தை முன்னெடுத்தனர். அதுவே இந்தியாவில் மொழி வழி மாநிலம் உருவாக்கவும், தமிழ்நாடு என்ற மாநிலம் கிடைக்கவும் வழிவகுத்தது.
தமிழ்நாடு என்பது சென்னை மாநிலம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதை தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை கம்யூனிஸ்டுகள் முழுமையாக ஆதரித்தனர். காங்கிரஸ் உறுப்பினரான தியாகி சங்கரலிஙகனார் இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டத்தை சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயன்றபோது அதை தடுத்து சங்கரலிங்கனாரை கம்யூனிஸ்டுகள் பாதுகாத்தனர். அவர் உண்ணாவிரதப் பந்தலிலே உயிர்நீத்த போது, தனது உடலை கம்யூனிஸ்டுகளிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு என்று தமிழகத்திற்கு பெயர் வைக்க போராடி உயிர்த்தியாகம் செய்த சங்கரலிங்கனாரின் இறுதி நிகழ்ச்சியை கம்யூனிஸ்டுகளே செய்தனர். அண்ணா பின்னர் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றம் செய்தார்.
இளம் விடுதலை இந்தியாவில் பல புதிய தொழிற்சாலைகள் துவக்க முனைந்த போது அமெரிக்க வஞ்சகமாக உதவ மறுத்தது. தமிழகத்தின் முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.ராமமூர்தி உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளின் முன்முயற்சியாலும், ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகளின் உதவியோடு தான் பல பொதுத்துறை நிறுவனங்கள் துவக்கப்பட்டது. தமிழகத்தின் சேலம் உருக்காலையும், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உள்ளிட்டவை அப்படித்தான் நமக்கு கிடைத்தது.
இப்படியாக ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு மத்தியிலும் ஏகாதிபத்தியத்தின், ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள் என எல்லாவற்றையும் கடந்து உறுதியோடு கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இன்று வரை போராடுகின்றனர்.
மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது இன்றைய மத்திய பிஜேபி அரசு. இந்திய நாடு பசி, பட்டினி பட்டியலில் 102வது இடத்தில் உள்ளது. அதே சமயம் இந்திய முதலாளியான அம்பானி, அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வை முடிவுக்கு கொண்டு வரும் வேலையே கம்யூனிஸ்டுகளின் இறுதியான லட்சியமாகும். ஒருவரிடம் இருந்து எடுக்காமல் மற்றவருக்கு கொடுக்க முடியாது என்கிறார் காரல் மார்க்ஸ். அப்படியாக அதானி அம்பானிகளிடமிருந்து இருந்து எடுதது அன்றாடம் காய்சிகளுக்கு எல்லாவற்றையும் வழங்கும் பொறுப்பு உழைக்கும் மக்களுக்கு இருக்கிறது.
மனிதனை மனிதன் சுரண்டும் நிலை மாறும் வரை எங்கள் பணி தொடரும் என்றார் பகத்சிங். அந்த வழியில் சமுதாயத்தில் உள்ள சமூக ரீதியான உயர்வு தாழ்வையும், பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வைவும் தகர்க்கும் வரை கம்யூனிஸ்டுகளின் பணி தொடரும். நூற்றாண்டு என்பது கம்யூனிஸ்டுகளுக்கு கொண்டாடி கழியும் நேரம் மட்டுமல்ல, அனுபவங்கள், படிப்பினைகளிலிருந்து இந்தியாவிலும் பாரதியின் மொழியில் சொல்வதானால் ஆகாவென்றொரு யுகப்புரட்சியை நடத்துவதே நூற்றாண்டு பயணத்தின் லட்சியமாகும். – ச.லெனின்