மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக் குழு பத்திரிக்கை செய்தி – 23.05.2025

மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

இந்திய விடுதலைக்குப் பின், அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பள்ளிக்கல்வி மாநில அதிகாரத்திற்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டது. இதனால், அந்தந்த மாநில சமூகப் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ற பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. சமூக சமத்துவத்தை நோக்கியப் பயணத்திற்கு கல்வி முக்கிய பங்காற்றும் என்பதால், ஏழைகளுக்கும் கல்வி கிடைத்திட மதிய உணவு திட்டம், இலவச பாடப் புத்தகம் உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் புதுச்சேரியில் பள்ளிக்கல்வி வளர்ச்சி அடைந்தது. மாநில வளர்ச்சி சமூக முன்னேற்றத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது.

 ஒன்றிய அரசு 1990களில், நவீன தாராளமய கொள்கைகளை அமலாக்கிய பின்னணியில், கல்வி வணிகமயமாக்கப்பட்டது. அனைவருக்கும் ஆன கல்வி மறுக்கப்பட்டது.

குளறுபடியான பாடத்திட்டம்

தற்போதைய ஒன்றிய பாஜக அரசு கல்வி வணிகமயமாக்கலை தீவிரப்படுத்துவதுடன், இந்துத்துவ அரசியலை, இந்தி மொழித் திணிப்பை, புதிய கல்விக் கொள்கை வழியாக செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, மாநில என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அனைத்துப் பள்ளிகளிலும் மத்திய இடைநிலை பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ) நடைமுறைப்படுத்தியுள்ளது.

2011-2016ல் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அரசுப் பள்ளியில் புகுத்தியது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்த்தன. தாய்மொழிவழிக் கல்வியையும் மாநில வளர்ச்சிக்கான அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையையும் வலியுறுத்தின.

2021 இல் என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆட்சியில் முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தின் அடிப்படையில், மாநில அரசின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மாநில அரசால் தயாரிக்கப்பட்ட புதுச்சேரியின் வரலாற்றுப் பகுதிகளை இணைத்து வழங்க தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

இந்த பின்னணியில் யார் கொடுத்த அழுத்தம் என்று தெரியவில்லை. 2023-24 பள்ளிக்கல்வி ஆண்டில், திடீரென ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11 வகுப்புகளுக்கு மாநில உரிமைகளை மறுதலித்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் விதிமுறைகளையும் மீறி அமுல்படுத்தப்பட்டது.

2024-25-ல் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் திணிக்கப்பட்டது.

என்ன நிர்பந்தத்தால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை புதுச்சேரியில் முதல்வர் அமல்படுத்தினார். என்ன பேரத்திற்காக புதுச்சேரியின் மாநில  கல்வி உரிமைகள் அடகு வைக்கப்பட்டன. 

புதுச்சேரியின் தனித்தன்மைக்கும், சூழலுக்கும் பொருந்தாத கல்வி திட்டம் என்ற போதிலும், பழக்கப்படாத புதிய கல்வி முறைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். பாடத்திட்டம் குளறுபடியானதற்கு மாநில அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தேர்வுகளிலும், மதிப்பெண்களிலும் குளறுபடி

2024-25 ஆண்டில் பத்தாம் வகுப்பில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 81.25%, அதாவது தேர்வு எழுதிய 5792 மாணவர்களில் 1086 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில் அறிவியல் பாடத்தில் மட்டும் 998 பேர் தோல்வி அடைந்தனர். மேலும், எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 13 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர்களால் வழங்கப்படும் செய்முறை மதிப்பெண் 20ஐ முழுமையாக வழங்கி தேர்ச்சி பெற வைக்க முடியும். இது போலவே 12ஆம் வகுப்பில் எழுத்து தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு 26 பெற்றால் செய்முறை மதிப்பெண்ணின் 20ல் குறைந்தபட்சம் ஏழு மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற முடியும்.

 இந்த வகையில் 12 ஆம் வகுப்பில் தேர்வு எழுதிய 5681 மாணவர்களில் 750 பேர் தோல்வி அடைந்தனர்.

 குறிப்பாக, இவர்கள் அனைவரும் கணிதம் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இந்தத் தேர்வு முறைகளில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி தேர்வு பெற்ற மாணவர்கள், கடந்த வகுப்புகளில் 80-90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள். திடீரென பாடத்திட்ட மாற்றத்தினால் இந்த மாணவர்கள் மனநிலையும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இப்பாடத்திட்டத்தினால் தோல்வியுற்றவர்கள், கல்வியை விட்டும் செந்தில் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு இடைநிற்றலும் அதிகரிக்க வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் அரசுப் பள்ளியை விட்டு தனியார் பள்ளியை நோக்கி செல்லக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. கல்விமுறையில் தோல்வி அடைந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பத்தாம் வகுப்பில் இரண்டு பாடங்கள் தோல்வியடைந்தால், +11, +12 வகுப்பில் ஒரு பாடம் மட்டும் தோல்வி அடைந்தால் இடைத்தேர்வு எழுத வாய்ப்புண்டு. ஆனால், அதற்கு மேல் கூடுதல் பாடங்களில் தோல்வியடைந்தால் அனைத்து பாடத்தையும் அடுத்த கல்வியாண்டில் தான் மறுபடியும் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். முந்தைய நடைமுறை முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

 மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் ஒரு பாடத்திற்கு ரூபாய் 500 கட்ட வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா ரூபாய் 100 செலுத்த வேண்டும்.

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாள் முறை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மேலும், வினாக்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே இருந்துள்ளன. இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ஆனால், கல்வி அமைச்சர் திரு. நமச்சிவாயமும், கல்வித்துறை அதிகாரிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட முறை அமலாக்கிய ஆண்டிலேயே அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக குதுகலிப்பது கவலை அளிக்கிறது. இந்த தேர்ச்சி விகிதம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருத இடமில்லை.

 மாறாக மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாமல், மற்றும் கல்வித் துறையின் சாணக்கியத் தனத்தாலும், சாகசத்தாலும் பெற்ற தேர்ச்சி விகிதம் ஆகும்.

+2ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகவே உள்ளன. நீட் அல்லாத இதர உயர் கல்வி நிறுவனங்களில் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பது மிக அரிதாகவே இருக்கும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கு

ஆகவே, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மாநில அரசு நடப்பு கல்வியாண்டில் 30 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மாநில அரசு இந்துத்துவ சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநில வளர்ச்சி, மாணவர்களின் நலம் கருதி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கைவிட வேண்டும். முந்தைய கல்விமுறையை தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பகுதி மாணவர்கள் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து, தரமான அறிவியல் பூர்வமான கல்வியை உறுதி செய்திட வேண்டும்.

மத அடிப்படை வாதத் தொண்டு நிறுவனமான அட்சய பாத்திர நிறுவனத்துடன் செய்துள்ள மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், தரமான சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இச்செய்தியினை தங்கள் ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

எஸ். ராமச்சந்திரன்,

(மாநில செயலாளர்.)

Leave a Reply