உணவு உரிமையை உறுதிசெய்க! மது, போதை அதிகரிப்பை கட்டுப்படுத்துக! -எஸ்.ராமச்சந்திரன்

இந்திய நாடு முழுவதும், விடுதலை அடைந்தவுடன் முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே மக்களின் உணவு உரிமையை உத்தரவாதப்படுத்தும் முதல் முயற்சியாக பொது விநியோக முறை சீரமைக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் அத்தியாவசிய உணவு கிடைப்பதை உத்தரவாதப்படுத்த, பதுக்கலைத் தவிர்க்க, விலைவாசியைக் கட்டுப்படுத்த உருவானது தான் பொது விநியோக முறை ஆகும்.

ஆனால் புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதுடன், சில சமயங்களில் அரசு மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்தும் மையங்களாகவும் திகழ்ந்தன. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் ரேஷன் பொருட்களுக்குப் பதில் பயனாளிகளின் வங்கி கணக்கில் “பணம் போடுவோம்” என்ற பெயரில் உணவுப் பொருட்கள் அளித்து வந்ததை நிறுத்தினர். வங்கியில் பணம் போடுவதையும் சரிவரப் போடாமல் நிறுத்தினர். நாட்டிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றினர்.

உணவு உரிமை மறுக்கப்பட்ட புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். மொத்த ரேஷன் கார்டுகள் 3,52,382. வறுமைக் கோட்டுக்கு கீழே முன்னுரிமைக் குடும்பங்கள் சிவப்பு அட்டைகள் 160211, வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு மஞ்சள் அட்டைகள் 166142… புதுச்சேரியில் 515 ரேஷன் கடைகள். இதில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆயிரத்திற்கு மேல். இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊதியம் இல்லை. இவர்களின் பலகுடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருக்கின்றன. தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபட்டவர்களும் உண்டு .

உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் பரம ஏழை குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் மாநில அரசின் உணவு வழங்கல் திட்டத்துடன், கூடுதலாக ஒன்றிய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனால் 26000 குடும்பங்கள் பயனடைந்தன. மானிய விலையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை இவற்றுடன் கூடுதல் தானியங்களையும் பெற்று வந்தனர். புதுச்சேரியில் அரிசிக்கு பதில் பணம் என்ற திட்டம் வந்ததால் இவை எதுவும் சரிவர அமல் படுத்தப்படவில்லை. புதுச்சேரி உணவு உரிமை மறுக்கப்பட்ட மாநிலமாக மாறியது.

ஒன்றிய அரசின் சோதனைக் கூடம் புதுச்சேரி

புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வேலையிண்மையால் வறுமை நிலைக்குச் சென்றுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏழை எளிய மக்கள் தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இவர்களின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நிரந்தர வருமானம் இல்லாமல் உழைப்பை நம்பி வாழ்கின்ற மக்கள் அனைவரும் வறுமை நிலையில் உள்ளனர். பழங்குடியின மக்களுக்கு சிவப்பு குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சிவப்பு அட்டைகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியின் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி அரிசிக்குப் பதில் பணம் என்று அறிவித்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஏற்க முடியாது என்று போராட்ட களத்தில் இறங்கியது. அப்போதைய ஆட்சியாளர்களான காங்கிரஸ் திமுக கூட்டணி அரசும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. ஜனநாயக மாதர் சங்கம் இதர பெண்கள் அமைப்புடன் இணைந்து, பல குடும்பங்களைச் சந்தித்து கணக்கெடுப்பு நடத்தி 99 சதவீத “மக்கள் அரிசியே தர வேண்டும்., பணம்

வேண்டாம்” என்ற மக்கள் விருப்பத்தை பதிவு செய்தது. இருப்பினும் ஒன்றிய அரசின் பணம் பட்டுவாடா திட்டம் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே புதுச்சேரியில் தான் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டது.

நீதி மன்றத்தில் உணவு உரிமை

உணவுப் பொருட்களுக்குப் பதில் பணம் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதனை வலியுறுத்தி அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மேல்முறையீட்டினைச் செய்தார்கள். மேல்முறையீட்டில் விசாரணை நடந்த போது ஆட்சி மாறியது. என்.ஆர். காங்கிரஸ்‍ பாஜக கூட்டணி அரசு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதிமொழி அளித்தது. இதை ஏற்று மேல்முறையீடு நீதிமன்றம் வழக்கை முடித்தது. ஆனால் நீதிமன்றத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை வழக்கம்போல் காற்றில் பறக்க விட்டனர். கரோனா பேரிடர் காலத்தில் நாடு முழுவதும் உணவுப் பொருட்கள் பிரதமரின் வாக்குறுதிப்படி ரேஷன் கடைகள் மூலமாய் வழங்கப்பட்டது. அப்போதும் கூட புதுச்சேரி வஞ்சிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை இடைவிடாமல் நடத்தியது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.

2022 நவம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி அவர்கள் பங்கேற்ற மாநில உரிமைச் சிறப்பு மாநாட்டில் ரேஷன் கடைகளை உடனடியாகத் திறக்க வேண்டும். அது புதுச்சேரி மக்களின் உணவு உரிமை என்ற கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டது .

ஜனநாயக மாதர் சங்கம் இதர மகளிர் அமைப்புகளுடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி, ”பணம் வேண்டாம், அரிசி தான் வேண்டும்” என்று 99 சதவீத குடும்பப் பெண்கள் வலியுறுத்தியதை கோரிக்கை மனுவாக உருவாக்கப்பட்டு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களை சந்தித்து வழங்கியது. மேலும் மாதர் சங்கம் குடிமைப் பொருள் வழங்கு துறை அலுவலகத்திற்கு அருகில் மறியல் போராட்டங்கள் நடத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கைதாகினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து தொடர்ச்சியான பிரச்சார இயக்கத்தையும், பல்வேறு கட்ட போராட்டங்களையும் ரேஷன் கடைகளை திறப்பதற்கும், ரேஷன் கடை ஊழியர்களை பாதுகாப்பதற்கும் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு முன்பாக நடத்தியது.

கடந்த 2024, பிப்ரவரி மாத இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரேஷன் கடைகளை திறக்கும் வரை குடிமைப் பொருள் வழங்கு துறை அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தை நடத்தியது. இது புதுச்சேரி மக்கள் மத்தியில் போராட்ட உணர்வுகளை தூண்டியது. இதர அரசியல் கட்சிகளையும் இப் பிரச்சினையில் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காறறியது. இதன் விளைவாக மாண்புமிகு முதல்வர் அவர்கள், “ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் தருவதற்கு ஆவண செய்கிறேன் என்று உறுதி அளித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மறியல் போராட்டத்தை நடத்திக் காத்திருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது .

நீண்ட போராட்டங்களின் விளைவாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆறு மாதச் சம்பளம் உடனடியாக வழங்கப்பட்டது நம்பிக்கையை அளித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது பேசு பொருளாக மாறியது.

மாண்புமிகு முதல்வர் அவர்கள், பிரச்சாரத்திற்குச் செல்லும் பொழுது நேரடியாக மக்கள், “ரேஷன் கடைகளைத் திறக்க வேண்டும்” என்றனர். அது அவருக்கு ஒரு நிர்பந்தத்தை உருவாக்கியது என்பது மிகையல்ல.புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியது.

இதன் விளைவாகத்தான் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தற்காலிக துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள் ரேஷன் கடைகளை திறப்பதற்கு கொள்கையளவில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. திறப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளலாம் என்ற அவரது கருத்தை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிய முடிந்தது. புதுச்சேரி முதல்வரும் அதற்குப் பின்னர்,” ரேஷன் கடைகளை மீண்டும் திறப்போம்” என்று பத்திரிகை வாயிலாக வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். இருந்தும் காலதாமதம் ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. .

திசை திருப்பபட்ட சுற்றுலாப் பயணிகள்

புதுச்சேரியில் அழகான கடற்கரை எழிலான சுண்ணாம்பாற்று படகுத்துறை, குறைந்த செலவில் தங்குவதற்கான அரசு விடுதிகள், புகழ் பெற்ற அரவிந்த ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் மேலும் பாரதி, பாரதிதாசன் நினைவிடங்கள், ரோமன் ரோலண்ட் நூலகம், அரிக்கமேடு, பாகூர் திருவண்டார்கோயில் கல்வெட்டுகள் மத்திய பல்கலைக்கழகம், மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், பிரஞ்சிந்திய ஆய்வு நிறுவனம் இவைகளுக்காக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரிக்கு அதிகம் வருவது எதற்காக…? சுற்றுலா பயணிகள் திசை திருப்பப்பட்டனர்.

வார இறுதி நாட்களில் நள்ளிரவு வரை ரெஸ்ட்ரோபார்கள் என்ற பெயரில் மதுபானக் கடைகள் திறந்தே இருக்கின்றன. மூன்று ஆண்டுகளில் இத்தகைய ரெஸ்ட்டோபர்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டுள்ளது. 2019இல் ‘பார்’களின் எண்ணிக்கை 101. 2024 இல் எண்ணிக்கை 209. இது அனுமதி பெற்ற எண்ணிக்கை. இவை தவிர கணக்கில் வராத ‘பார்கள்’. வார இறுதி நாட்களில் தெருவெங்கும் மதுவின் வெள்ளப்பெருக்கு. இளைஞர்களும் இளைஞிகளும் பெங்களூர், ஹைதராபாத், சென்னை நகரிலிருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கின்றனர்.

மதுவின் விற்பனைக்கு இலக்கு வைக்கும் மக்கள் அரசு…?

புதுவை அரசின் ஆண்டு வருவாய் 25 சதவீதம் கலால் துறையின் மூலம் மது விற்பனையிலிருந்து கிடைத்து வருகிறது. 2018 -19ஆம் ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு வருவாய் 850 கோடி ரூபாய். 5 ஆண்டுகளில். 2022-23ல் 1402 கோடி ரூபாய் 75 சதவீதம். மதுபானங்களால் கிடைக்கும் வருவாய் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இடையில் கொரோனா பேரிடார் இல்லையென்றால் 100 சதவீதத்தை தாண்டி இருக்கும். ஒவ்வொரு புத்தாண்டு நாளன்றும் அரசு, மதுவின் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது விபரீதம்…. மிகப்பெரிய அவலம். அரசு தன் சொந்த மாநில மக்களையும், சுற்றுலா வரும் மக்களையும் மதுபானத்திற்கு அடிமை ஆக்கி அரசின் வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் சமூக விரோதச் செயலுக்கு இலக்கு நிர்ணயிக்கிறது…?

புதுச்சேரி அரசின் மதுபானக் கொள்கை

புதுச்சேரி அரசு கலால்ச் சட்டம் விதிகள் 1970 ன் படி கள்ளுக் கடை, சாராயக்கடை, மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. 1979 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது இந்தியக் குடியரசுத் தலைவர் புதுச்சேரியில் பூரண மதுவிலக்குக்கு உத்தரவிட்டு உடனடியாக

அமலுக்கு வந்தது. ஆனால் மாநில உரிமையில் தலையிடுவதாக புதுச்சேரியில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராடியதாலும், கடும் எதிர்ப்பு நிலவியதாலும் மதுவிலக்குச் சட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரால் மாகி, ஏனாம் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு புதுச்சேரியில் மதுவிலக்கு அமலாக்கப்பட்டது. இதன் விளைவாக கள்ளச் சந்தையில் கலப்பட மதுவும் பெருகி, சாராயம் குடிசைத் தொழிலாக மாறியது.

மீண்டும் 1980ல் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அதிகமான மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்டது. இதனால் 1986 இல் தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது .

மதுக்கூடங்களாக ….. கூட்டுறவு நிறுவனங்கள்

ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதலாலும், அத்துமீறல்களாலும், அதிகாரிகளின் திறமையின்மையினாலும், அநீதி நடவடிக்கைகளுக்கு துணை போனதாலும், கொல்லைப்புற வழிப்பணி நியமனங்களாலும் புதுச்சேரியில் லாபகரமாக இயங்கி வந்த கூட்டுறவு நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி பயணித்தன. வேலை பார்த்த ஊழியர்களுக்கு ஐந்து வருடங்களாக ஊதியம் இல்லை.

இதை லாபகரமாக இயக்குவதற்காக 2002 -2003 ஆம் ஆண்டு மதுக்கடைகளை நடத்திக் கொள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. விவசாயம், கைத்தறி என்று வெவ்வேறு தொழில்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாசிக், பாண் பேப், கான்பெட் போன்ற நிறுவனங்களுக்கு அதனுடைய நோக்கங்கள் சிதறடிக்கப்பட்டு சீரழிவு வேலைகளாக மதுக்கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் இம்முடிவை கடுமையாக எதிர்த்தன. அத்தனையும் புறந்தள்ளப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் ‘பார்’களை திறந்தன. ஆனால் அதையும் நட்டத்தில் நடத்தும் சிறப்பான நிர்வாக அதிகாரிகள்…! மதுபான கடைகளாலும் இந்நிறுவனங்களை காப்பாற்ற முடியவில்லை. மீட்க முடியவில்லை.

நீதிமன்றத்தில் புதுச்சேரி மதுபானக் கடைகள்

1989இல் மதுபானக் கடைகளை தனியார் நடத்துவதற்கு உரிமம் வழங்குவதை தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடையானையை 2010ல் ரத்து செய்து தனியாருக்கு உரிமை வழங்க வழிவகை செய்யும் அரசாணையை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 2010ல் பிறப்பித்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்போதைய செயலாளர் வெ. பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் தனியாருக்கு உரிமம் வழங்க மாட்டோம் என்று உறுதி அளித்ததின் பேரில் வழக்கு முடிவுக்கு வந்தது.1989 இல் இருந்து 34 ஆண்டுகள் புதுச்சேரியில் மதுக்கடைகள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படவில்லை .பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மதுச்சேரியாக மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டனர்.

தள்ளாடும் புதுச்சேரி

புதுச்சேரியில் ஏற்கனவே ஆறு மதுபானத் ழிற்சாலைகள் உள்ள நிலையில், 2022 மே 30 ல் மேலும் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான உரிமம் மற்ற அனுமதி அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. இதற்கான உரிமங்களை வழங்குவதில் கோடிக்கணக்கான ரூபாய்கள் லஞ்சமாக கைமாறின. ஏற்கனவே மாநிலத்தில் ஏழு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவைகளாலும் புதுச்சேரியில் , ரியல் எஸ்டேட் மாபியாக்களாலும், தனியார் கல்வி நிறுவனங்களாலும் நிலத்தடி நீர் சூறையாடப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகிவருகிறது. இவைகளோடு புதிய மதுபான தொழிற்சாலைகளாலும் நிலத்தடி நீர் சூறையாடுவதற்கு வழிவகை செய்தனர்.

தற்போது புதுச்சேரியில் மதுபான மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, ரெஸ்டோபார்கள் என் மூன்று விதமாக விற்பனை நடைபெறுகிறது.

ஆக மொத்தம் புதுச்சேரி மாநிலத்தில் 536 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவை தவிர சாராயக்கடைகள் 110, கள்ளுக்கடைகள் 92 இருக்கின்றன. மேலும் ரெஸ்டோபார்கள் என்ற பெயரில் மதுபானக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு வருகிறது. மக்களின் ஆரோக்கியம் குறித்தோ, இளைஞர்களின் எதிர்காலம் குறித்தோ பாஜக, என்.ஆர்காங். ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. (ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 515, மதுபானக் கடைகள் 536) பெண்களுக்கு மதுபானம் இலவசம் என்று விளம்பரம் செய்து நள்ளிரவு வரை விற்பனை செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு அருகில் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு வருகின்றன.

விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளுக்கு எதிராக மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது, நீதி மன்ற வழக்குகளையும் சந்தித்து வருகிறது. புதுச்சேரியில் பல தலைமுறைகளாக வாழ்வாதாரங்களை அளித்து வந்த மூன்று பஞ்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. கூட்டுறவு, சக்கரை ஆலைகள், பஞ்சாலைகள், இதர நிறுவனங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அரசுத் தொழிற்பேட்டைகள் அவல நிலையில்…. ஆனால் அரசு மதுபானத் தொழிற்சாலைகளையும், ரெஸ்டோபார்களையும் திறந்து கொண்டே இருக்கிறது.

புதுச்சேரி ஆன்மீக நகரம்….

புதுச்சேரியை ஆன்மீக நகரமாக மாற்றுவோம் என்று தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முழங்கினர். ஆனால் புதுச்சேரியை போதை நகரமாக மாற்றி இருக்கிறார்கள்.

“ஸ்பிரிட்சுவல் சிட்டி” என்றனர். ‘ஸ்பிரிட் ‘சிட்டியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் வரை கஞ்சா போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதில் புதுச்சேரி இந்திய அளவில் முதல் இடத்தை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது .இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் புதுச்சேரி தான். காரைக்காலில் 125 குடும்பங்கள் கொண்ட சிறு கிராமத்தில் 65 இளம் விதவைகள் இருக்கிறார்கள்.

மது போதையின் பழக்கத்தால் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஒரு சிறுமி கூட்டு பாலியல் வன்முறைக்கு பலியானார். இக்கொடுமைக்கு எதிராக புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீதியில் இறங்கினர். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வேட்பாளர் ஆனார். 30 சட்டமன்றத் தொகுதிகளில் அவரும்,முதல்வரும் வெற்றி பெற்ற தொகுதி உள்பட 28 தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டார். மக்கள் தக்க பாடங்களை ஆட்சியாளர்களுக்கு ஜனநாயக ரீதியில் வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.

உணவு உரிமைப் பாதுகாப்பு, மது,போதை எதிர்ப்பு மாநாடு

புதுச்சேரியில் மறுக்கப்படும் உணவு உரிமைக்காகவும், மது ,போதை எதிர்ப்புக்காகவும் சிறப்பு மாநாடு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. மாநில செயலாளர் தோழர் ராஜாங்கம் அவர்கள் மாண்புமிகு முதல்வருக்கு அளித்த கோரிக்கை மனுவில், புதுச்சேரி

மக்களின் உணவு உரிமைகளைப் பாதுகாக்க, மூடப்பட்ட ரேஷன் கடைகளை காலதாமதமின்றி உடனடியாக திறக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களது குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

மதுபானங்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு, மேலும் மதுக் கடைகள் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மதுக்கடைகள் எண்ணிக்கை விரிவடையும் போது சமூக குற்றங்கள் பெருகுவதற்கு வாய்ப்பாக இருக்கும். நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அரசின் உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் புதுச்சேரியில் பெருகி வருகிறது. வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் குறையவில்லை. போதையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்கவும், விதிமுறைகளை மீறி செயல்படும் ரெஸ்டோபார்களை கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

இதை வலியுறுத்தி, வருகிற 18.07.2024 அன்று புதுச்சேரியில் நடைபெறும் உணவு உரிமைப் பாதுகாப்பு, மது ,போதை எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி பங்கேற்கிறார். புதுச்சேரி மாநில மக்களின் உணவு உரிமையை பாதுகாக்கவும், மது, போதையில்லா மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும் இம்மாநாட்டில் உறுதி ஏற்போம்.

எஸ் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்,

சி.பி.எம்., புதுச்சேரி.

Sr1

Leave a Reply