கியூபாவின் ஜூலை 26 இயக்கம்

நில அமைப்பில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தாலும், கொள்கை அளவில் மிக தொலைவில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமானது கியூபா. இந்த நாட்டில் சோஷலிசம் மலர நடைபெற்ற போராட்டங்களுக்கு வித்திட்ட நாள் ஜூலை 26.

1898ல் ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்த கியூபா 1920ல் குடியரசாக அங்கீகாரம் பெற்றது. தனி நாடாக அங்கீகாரம் பெற்றிருந்தாலும், அமெரிக்காவின் ஆதிக்கம் நிறைந்த நாடாகவே கியூபா இருந்தது.

இதனை எதிர்த்து நடைபெற்ற ராணுவ புரட்சியை தொடர்ந்து பில் பாடிஸ்டா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். எனினும் சர்வாதிகாரி போல அவர் ஆட்சி செய்ததால், அவருக்கு எதிராகப் போராடுவதற்கு ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் கூட்டம் உருவானது.

இந்த படையின் தலைவராக உருவெடுத்தவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ.
கியூபாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இளைஞர்களை திரட்டிய காஸ்ட்ரோ, 1953ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி , சாண்டிகோ டி கியூபா நகரில், பாடிஸ்டாவின் படைகளை தாக்க திட்டமிட்டார்.

அந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தாலும் கைது செய்ப்பட்ட பிடல் காஸ்ட்ரோ, நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கியது.
மனம் தளராத காஸ்ட்ரோ, சிறையில் இருந்து வெளிவந்து, பிற புரட்சிப் படைகளின் ஆதரவைத் திரட்டினர். ஜுலை 26 என்ற நாள், விடுதலை இயக்கத்தின் பெயரானது.
1955ஆம் ஆண்டு புரட்சியாளர் சே குவேராவுடன் சேர்ந்து 82 இளைஞர்களுடன் சர்வாதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கினார் பிடல் காஸ்ட்ரோ.

1956, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி மெக்சிகோவில் இருந்து கியூபாவுக்கு வந்த காஸ்ட்ரோவின் ஆயுதக் குழுவை ராணுவம் கடுமையாக தாக்கியது.
கப்பலில் வந்திறங்கிய 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். காஸ்ட்ரோவின் உறுதி கொஞ்சமும் குறைவில்லை. உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் சியரா மேஸ்ட்ரோ மலைப்பகுதியில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

பின்னர், தனித்தனியாகப் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று புரட்சிக்கு ஆதரவு திரட்டினர். இந்த சமயத்தில் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் சே குவேராவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

எனினும் 2 ஆண்டுகளாக இந்த குழுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு படைகளை தாக்கினர். இதன் விளைவாக, 1959-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாடிஸ்டா நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு புரட்சி வெற்றி கண்டது.

பின்னர் புரட்சிக்கு வித்திட்ட பிடல் காஸ்ட்ரோவின் கைகளுக்கு ஆட்சி மாறியது. மக்களின் வறுமைகள் ஒழிந்து சிறந்த நாடாகவும், உலகிலேயே சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடாகவும் கியூபா உருவெடுத்துள்ளது.

Leave a Reply