தோழர் இஎம்எஸ்: ஓர் அபூர்வமான கம்யூனிஸ்ட் – பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் வாழ்வும் பணியும் நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அழிக்கமுடியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளது. ஜூன் 13, 1909இல் பிறந்த தோழர் இ.எம்.எஸ்-இன் குறிப்பிடத் தக்க வாழ்க்கை- நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் இயக்கங்களுடன் பின்னிப்பிணைந்ததாகும்.

மிகவும் சனாதனமான நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்த தோழர் இ.எம்.எஸ். தான் இளம் மாணவனாக இருந்த காலத்திலேயே, சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒளிவிளக்காக மாறியிருந்தார். மாணவனாக இருந்த காலத்திலேயே, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, சிறை சென்றார். 1934-ல் அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியைக் கட்டிய நிறுவனத் தலைவர்களில் இஎம்எஸ்-ஸூம் ஒருவர். கேரளாவின் மலபார் பகுதியில் நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விவசாய இயக்கத்தைக் கட்டுவதில் பிரதான பங்கினை வகித்தார். 1936 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கேரளாவின் முதல் குழுவில் இருந்த ஐவரில் அவரும் ஒருவராவார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவராக மாறியிருந்த இ.எம்.எஸ்.ஸின் வியத்தகு பயணம் இவ்வாறு தொடங்கியது. தோழர் இ.எம்.எஸ். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அளித்திட்ட மாபெரும் பங்களிப்பினையும், மார்க்ஸிய சிந்தனையாளராக அவர் அளித்திட்ட படைப்புகளையும் ஒரு சிறு கட்டுரையில் முழுமையாகக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. ஆயினும் அவரது புரட்சிகர வாழ்க்கையில், குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய விதத்தில் ஐந்து தனிச் சிறப்புக்குரிய அம்சங்கள் இருந்தன.

முதலாவதாக, மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மிகவும் செயலூக்க முறையில் இணைத்திட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் மத்தியில் தோழர் இ.எம்.எஸ். ஒப்புயர்வற்ற நிலையில் இருந்தார். அவரது அபூர்வமான அறிவுத்திறன், மார்க்சியத்தின் சாரத்தைக் கிரகித்துக் கொள்வதிலும், அதனை ஆக்கப்பூர்வமான முறையில் இந்திய நிலைமைகளுக்கேற்ப பிரயோகிப்பதிலும் அவருக்கு அசாத்திய திறமையை அளித்திருந்தது. இத்தகைய அசாதாரணமான அவரது திறமைதான், தோழர் இ.எம்.எஸ்.-ஐ, கேரளாவில் இருந்த சமூக- பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்து, அங்கிருந்து வந்த நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதற்கான சித்தாந்த அடித்தளத்தை வகுத்தளித்திட அவருக்கு உதவியது. தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஈடிணையற்ற வல்லமை யையும் அவர் பெற்றிருந்தார். மலபார் பகுதியிலிருந்த பிராமணர்-நாயர்-நிலப்பிரபுத்துவ முறை குறித்து அவர் அளித்திட்ட ஆய்வுக் கட்டுரையானது, அப்பகுதியில் விவசாய இயக்கத்தைக் கட்டுவதற்கான செய்முறை வழிகாட்டியாக அமைந்தது. விவசாய உறவுகள் குறித்தும், விவசாயப் புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கம் குறித்தும் அவர் அளித்திட்ட விளக்கங்கள் நிலச்சீர்திருத்தத்திற்கான அடிப்படைகளாக அமைந்தன. பின்னர் 1957இல் அமைந்திட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் அவர் முதல்வராக இருந்தபோது, அவற்றை நடைமுறைப்படுத்தினார்.

சமூகம் மற்றும் வரலாறு குறித்த மார்க்சிய ஆய்வினை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும், இ.எம்.எஸ். மலையாளிகள் மற்றும் கேரள சமூகத்தின் மொழிவாரி தேசிய வடிவம் குறித்த தன்னுடைய ஆய்வில் தெளிவுபடுத்தி இருக்கிறார். ‘ஐக்கிய கேரளா’ மற்றும் “கேரளாவில் தேசிய இனப்பிரச்சனை” குறித்த ஆய்வு என்னும் நூல்கள், நாடு சுதந்திரம் அடைந்தபின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான அடிப்படை நூல்களாக மாறின. இந்திய அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் இ.எம்.எஸ். தன்னுடைய கேந்திரமான பங்களிப்பு மூலம் தீர்வு காண வழிவகுத்திருக்கிறார். இதற்கு மார்க்சியத் தத்துவத்தின் மீது அவருக்கிருந்த உறுதியான அடித்தளமே முக்கிய காரணமாகும். அவர் வரலாறு, சமூகம், அரசியல், கலாச்சாரம் அனைத்தையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் மிகவும் துல்லியமான முறையில் ஆய்வு செய்திருக்கிறார். இவ்வாறு இவர் மேற்கொண்ட ஆய்வுகளா னது இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் மட் டுமல்லாது, சமூக அறிவியலாளர்கள் அனை வரின் மத்தியிலுமே செல்வாக்கு செலுத்தியது. முந்தைய காலனியாதிக்க நாடுகளில் அல்லது வளர்முக நாடுகளில் மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதில் இ.எம்.எஸ். அளவிற்குப் பங்களிப்பினைச் செய்திட்ட கம்யூனிஸ்ட் தலைவர் வேறெவரும் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல.

தோழர் இ.எம்.எஸ். ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் என்ற முறையில், உலகத்தில் சோசலிசம் மற்றும் சர்வதேசியத்திற்கான போராட்டத்தில் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டார். ஆயினும், சர்வ தேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிரச் சனைகள், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலைத்தான் கடைப் பிடிக்க வேண்டும் என்று வந்த நிர்ப்பந்தத்தை தோழர் இ.எம்.எஸ்-ஸூம், அவர் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இ.எம்.எஸ்-ஸூம் மற்ற தோழர்களும் மார்க்சிச-லெனினிசத் தின் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான போர்த்தந்திரத்தையும் அதற்கான உத்திகளையும் (strategy and tactics) தங்கள் சொந்த அனுபவத்தின் மூலமாகவே வகுத்திட்டார்கள். இதில் இ.எம்.எஸ். முக்கிய பங்களிப்பினைச் செய்திட்டார்.

தோழர் இ.எம்.எஸ். செய்திட்ட பங்களிப்பில் இரண்டாவது முக்கிய அம்சம், நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பங்குபெறுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சரியான கருத்து மற்றும் அணுகுமுறையைத் தோற்றுவித்ததாகும். அவரே, 1957இல் கேரளாவில் அமைந்திட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் முதல்வராகப் பங்கேற்று, அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பதன் மூலம் மக்களுக்கு என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை வெறும் 28 மாதங்களே ஆட்சியிலிருந்த போதிலும், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், ஜனநாயக முறை யில் அதிகாரங்களைப் பரவலாக்குதல், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகளை நிறைவேற்றுதல் முதலானவற்றில் புதிய பாதையை வகுத்தது. இ.எம்.எஸ். ஜனநாயக முறையில் அதிகாரபரவலாக்கும் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். இ.எம்.எஸ். ஒரு கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஒரு நிர்வாகி என்ற முறையிலும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பெறுவதிலும், மாநில அரசின் அதிகாரங்களை, உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொண்டு செல்வதிலும் கொள்கைகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்துவதிலும் உறுதியாக இருந்தார். மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் இடதுசாரிக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியதில் முதன்மை ஸ்தானத்தில் இருந்தவர் தோழர் இ.எம்.எஸ். அதே போன்று அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கும் சமயத்தில் நாடாளுமன்ற வாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கும் இடம் கொடுக்காது, சரியான நிலைபாட்டை வகுத்துத்தந்ததிலும் இ.எம்.எஸ்.ஸூக்கு முக்கிய பங்கு உண்டு. வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இ.எம்.எஸ்., இதனைப் பார்த்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு உதவக்கூடிய வகையில் கூடுதல் நாடாளுமன்ற பணிகளுடன் இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளி வாக முன்வைத்தார்.

சாதி மற்றும் வர்க்க உறவுகள் தொடர்பாக மார்க்சியப் புரிந்துணர்வு தொடர்பாக, இ.எம். எஸ். அளித்திட்ட பங்களிப்பு மூன்றாவது முக்கிய அம்சமாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் கேரள சமூகத்தில் நிலவிய சாதியக் கட்டமைப்பைப் பகுத்தாய்வு செய்தபின், இ.எம்.எஸ். சாதியப் பிரிவினைக் குள்ளிருந்த வர்க்க உள்ளடக்கத்தை வரை யறுத்து, அதனை கம்யூனிச கண்ணோட்டத்திற்கு வளர்த்தெடுத்ததோடு, தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கருதப்பட்டவர்களின் ஜனநாயக அபிலாசைகளைக் கூர்மைப்படுத்தி, சாதிய எதிர்ப்பு போராட்டங்களை உருவாக்கி, அவற்றை தொழிலாளர் வர்க்க லட்சியத்தை நோக்கி விரிவாக்கியதில், இ.எம். எஸ்.சின் பங்கு மகத்தானதாகும்.

முந்தையத் தலைமுறையிலிருந்த பல கம்யூனிஸ்ட்டுகளைப் போல், இ.எம்.எஸ். சாதிய அமைப்புமுறையின் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவில்லை. மாறாக அவற்றைத் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை மேலும் விரிவாகக் கட்டுவதற்கும், சமூக மாற்றத்திற்கான உந்துசக்தியாக அதனை மாற்றுவதற்கும் பயன்படுத்திக் கொண்டார். சமூகத்தில் நிலவிய அனைத்து ஒடுக்கு முறைகளையும் துல்லியமாக ஆய்வு செய்து, சமூக மாற்றத்திற்கான கொள்கைகளை வகுத்துத்தந்தார். அதே அளவிற்கு சமூகத்தில் இருந்து வரும் கலாச்சாரத்தின்மீதும் சரியான ஆய்வினை மேற்கொண்டு, ஆளும் வர்க்கத் தின் கலாச்சாரத்திற்கு எதிராக, ஒரு மாற்றுக் கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவவும் வழி கண்டார்.

சமூக சீர்திருத்தத்திற்கான போராட்டங்களைத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, இ.எம்.எஸ். பெண் விடுதலையிலும் ஆழமான முறையில் உறுதி கொண்டிருந்தார். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சமயத்தில், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக, இ.எம்.எஸ். முக்கிய பங்களிப்பினைச் செய்திருக்கிறார்.

இ.எம்.எஸ்.இன் தனித்துவம் வாய்ந்த நான்காவது அம்சம், கட்சியின் சிந்தனைகளையும் அரசியலையும் மக்கள் மத்தியில் விதைப்பதில் அவரது ஈடிணையற்ற பங்களிப்பாகும். எண்ணற்ற கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் மக்கள் மத்தியில் சென்றவர் மாமேதை இ.எம்.எஸ். அவர் அளவிற்கு வேறெந்தத் தலைவரும் பங்களிப்பினைச் செய்ததாகக் கூற முடியாது. கேரளாவில், நாள்தோறும் செய்தித்தாளின் மூலமாக தனக்கும் மக்களுக்கும் இடையே மகத்தானதொரு பிடிப்பினை இ.எம்.எஸ். ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

கட்சியின் எண்ணற்ற வெளியீடுகளுக்கு, இ.எம்.எஸ். ஆசிரியராக இருந்தார். 1935இல் கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான ‘பிரபாதம்’ ஏட்டில் தொடங்கி, அவர் வாழ்நாளின் இறுதியாண்டுகளில் ‘தேசாபிமானி’யின் முதன்மை ஆசிரியராக மீண்டும் மாறுவது வரை அது தொடர்ந்தது. இடைப்பட்ட காலத்தில், ஒன்றுபட்ட கட்சி யின் ஏடுகள் பலவற்றிற்கும், பின்னர் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ மற்றும் ‘தி மார்க்சிஸ்ட்’ ஏடுகளுக்கும் அவர் ஆசிரியராக இருந்தார். மலையாளத்தில் வெளியாகியுள்ள இ.எம்.எஸ்.-இன் தொகுப்பு நூல்கள் நூற்றுக்கும் மேலான தொகுதிகள் வெளிவந் திருக்கின்றன. இவரது எழுத்துக்கள் நாட்டிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இ.எம்.எஸ்.-இன் ஒப்புயர்வான ஐந்தாவது அம்சம், அவர் தனித்துவம் வாய்ந்த ஒரு கம்யூனிஸ்ட் ஆவார். அவர் மாபெரும் அறிவு ஜீவியாக இருந்தபோதிலும்கூட, மிகவும் தன்னடக்கத்துடன் இருந்தார். எவ்விதத் திலும் தன்னகங்காரமோ தற்பெருமையோ அவரிடம் தலைதூக்கியது கிடையாது. மக்கள் மீது அவர் வைத்திருந்த அளப்பரிய அன்பும் பாசமும் எப்போதுமே குறைந்ததில்லை. அவருக்கு பாரம்பரியமாகக் கிடைத்திட்ட சொத்துக்களை முழுமையாகக் கட்சிக்குக் கொடுத் துவிட்டு, மிக மிக எளிய முறையில் வாழ்நாள் முழுவதும் ஞானிபோல் வாழ்ந்தார். தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் கட்சி ஊழியர் கள் வாழ்ந்திடவும் முன்னுதாரணமாக விளங்கினார்.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடதுசாரி இயக்கத்தினருக்கும் தோழர் இ.எம்.எஸ்.இன் தத்துவார்த்த மற்றும் நடைமுறைப் பணிகள் நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ள மகத்தான சொத்துக்களாகும். அதாவது அவர் விட்டுச்சென்றுள்ள சொத்துக்களின் சாரம் என்னவெனில், மார்க்சியத் தத்துவத்தை ஆழமாகக் கற்போம், அதனை இந்திய சமூகத்தின் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில், சரியான முறையில் பிரயோகிப்போம், சோசலிச லட்சியத்திற்காக இறுதிவரை உறுதியுடன் போராடுவோம்.

இ.எம்.எஸ் எழுதிய புத்தகங்கள்
  1. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு
  2. இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாறு
  3. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி
  4. சமூகம் மொழி இலக்கியம்
  5. கேரள இலக்கிய வரலாறு
  6. மார்க்ஸியமும் மலையாள இலக்கியமும்
  7. வேதங்களின் நாடு

Leave a Reply