அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை காலம் தாழ்த்தாமல் துவங்கிட வேண்டும்-SFI

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி ஒருவார காலம் ஆகிறது.  தற்போது வரை இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து புதுச்சேரிஅரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி முதலே கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் அந்தந்த கல்லூரிகளில் விநியோகிக்கப்படுகிறது.  பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்றும் அறிவித்துவிட்டனர்.  தமிழ்நாட்டை விட மிக குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்ட, புதுச்சேரியில் தற்போது வரை அதற்கான தயாரிப்புகள் ஏதும் செய்யப்பட்டதாக எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும்  சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர் சேர்க்கையில் பல குழப்பங்களை  மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தனியார் கல்லூரிகளை நோக்கி செல்ல வைக்க கூடிய வேலை என்பதை புதுச்சேரிஅரசே ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதை பார்க்க முடிகிறது. இது அரசின் தனியார் கல்வி வியாபாரிகள் மீது கொண்டுள்ள அதீத பாசத்தை வெளிப்படுத்துகிறது‌. அந்த வகையில் இந்த ஆண்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு  மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளனர். மேலும் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராததால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தங்களது பிள்ளைகளை தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி மாணவர்களை சேர்த்து விடும் அவல நிலை தொடர்கிறது. இதில்  பணம் கட்ட முடியாமல் பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றல் என்பதும் சமீபத்திய காலத்தில் அதிகரித்து வருகிறது.  முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை கல்வி ஆண்டின் இறுதி நேரத்தில் சேர்க்கையை அரசு முடிப்பதால் பேராசிரியர்களாலும் பாடத்தை முடிக்க முடியாமல் குறுகிய காலத்தில் மாணவர்கள் பருவத் தேர்வை எதிர்கொள்வதால் பல மாணவர்களால் தேர்ச்சியடைய முடியாத சூழலும் நிலவி வருகிறது.  அரசின் இத்தகைய சரியான திட்டமிடல் இல்லாததால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்த அவல நிலை போக்க ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவினை நனவாக்க புதுச்சேரி அரசும் உயர்கல்வித்துறையும் உடனடியாக சரியான திட்டமிடலுடன்  கல்லூரியில் மாணவர் சேர்க்கையை விரைந்து துவங்கி காலத்தோடு முடிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி மாநில குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply