ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம்

islamiya-penniyamதமிழ்ச் சூழலில் பெண்ணியம் வலுப்பெற்றிருக்கின்ற காலம் இது. படைப்பு ரீதியாகவும், அமைப்புகள் வாயிலாகவும் பெண்ணிய வாதிகள் தொடர்ந்து இயங்கி வந்தது பெண்ணியக் கோட்பாடுகளை வலுவாக நிறுவிக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. பெண் விடுதலை குறித்து உரத்த குரல் எழுப்பத் தேவையுள்ள மாநிலமாகவே தமிழகம் இருந்து வந்திருக்கிறது. எல்லோரும் பெண்ணியம் குறித்து கதைக்க வந்தது துரதிர்ஷ்டவசமானதும் அன்று. கற்பனைப் புராண காலத்தும் அதன் தேவை இருந்திருக்கிறது. சங்க காலத்திலும், பெண்ணியக் குரல்கள் ஒலித்துள்ளன. உலகம் இத்தனை நவீன மயமாக்கப்பட்ட பின்பும், இதன் தேவை தொடர்வதன் பின்னணி குறித்து சிந்திக்கையில் ஆணாதிக்கப் போக்கு எங்கும் வியாபித் திருந்ததன்றி வேறென்ன என்னும் விடை கிடைக்கிறது.

ஒரு குழந்தை ஆண் அல்லது பெண் என நிர்ணயிக்கின்ற பிரதான சக்தியை பெண் பெற்றிருக்கவில்லையென அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.பெண் குரோமோசெம்களான ஓஓ ஆண் குரோமோசெம்களான ஓலு இரண்டும் இணைகையில் ஆணின் ஓ தீவிரமாகுமிடத்து ஓஓ ஆகிப் பெண்ணும், லு வலுப்பெற் றால் ஓலு ஆகி ஆணும் பிரசவிக்கிறது. இது இயற்கையே பெண்ணுக்கு எதிராகச் செய்து வைத்த சதி. இதன் காரணமாகவே பெண்கள் கருப்பையை அறுத்தெறிய வேண்டுமென பெரியார் குரல் கொடுத்தார்.

ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் என்னும் இப்பிரதி புதிய வரவு. வசதிக்காகவும், ஈர்ப்புக்காகவும் இத்தலைப்பு பயன்பட்டாலும் கூட, அர்த்தம் பொதிந்த விவாதத்துக்கு அழைக்கிற தன்மை பெற்றதாகவுமுள்ளது. ஆண்களுக்கு பெண்களின் மேல் அதிகாரம் இருக்கிறது என்கிறது குரான். ஏனெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். மேலும் ஆண்கள் தங்களுடைய பொருட்களிலிருந்து பெண்களுக்காக செலவு செய்கிறார்கள். எனவே, நல்ல பெண்கள் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மறைவான உறுப்புக்களைப் பாதுகாப்பார்கள். பணிந்து நடக்கமாட்டார்கள் என்று நீங்கள் நினைப்பவர்க்கு உபதேசியுங்கள். படுக்கைகளிலிருந்து அவர்களை நீக்கி வையுங்கள், அடியுங்கள் என்று குரான் (4:34) மேலும் தெளிவுபடக் கூறுவதிலிருந்து. ஆண்களையே இஸ்லாம் முதல் நிலையிலும் அதற்கெடுத்த நிலையிலேயே பெண்களையும் நிறுத்தி வைக்கிறது என்பதும், ஒழுக்க விதிகளை முன் வைத்து ஒரு ஆண், பெண் மீது வன்முறை நிகழ்த்த வசதியாக மேற்கண்ட குரான் வசனங்கள் அமைந்திருப்பதாக நாம் அர்த்தம் கொள்ளலாமா?

பெண்கள் மீது உள்ள உரிமைகளைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உண்டு என்றும் குரான் மொழிகின்ற நேரத்தில், ஆயினும் ஆண்களுக்கு அவர்களை விட உயர்வான தகுதி இருக்கிறது என தெளிவாகச் சுட்டுவதிலிருந்து இருபாலரில் எவருக்கு முன்னுரிமை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. குரானை மறையாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமியர்கள் மேற்படி குரானின் கூற்றுப்படியும் இயல்பாகவே பெண் மீது ஆதிக்கம் கொள்பவர்களாக உள்ளனர் என்பதில் இரண்டு விதமான கருத்து கிடையாது.

இஸ்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சமூகம் என்பது போன்ற நிலைப்பாடு சமீப காலமாக கேள்விக் குள்ளாக்கப்பட்டு வருகிறது. திரைக்குப் பின்னால் நடப்பதை அறிந்து கொள்ளுகிற ஆர்வம் எல்லோருக்கும் இருந்தாலும், துணிச்சலுடன் நுழைந்து பார்க்க எவரும் முன்வரவில்லை., அந்த பாட்டையில் நடந்து செல்ல முடியாத அளவு தடைக்கற்களை உருவாக்கி வைத்திருந்ததும் காரணம்.

ஒரு தேவாலயத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. கர்த்தராகிய இயேசு என்று அங்கு தமிழ் வசனங்கள் ஒலிக்கின்றன. சிறுபான்மை சமயங்களில் கிறிஸ்தவம் ஒரு புதிராகத் தோற்றமளிக்கவில்லை. மாறாக பாமரனுக்கு அது உவப்பானதா கவும், நுழைந்து பார்க்க எளிதாகவும், வழிபாடுகளில் கலந்து கொள்ள மொழி வழித் தடையற்றதாகவும், அவன் பின்பற்றவும், ஆராயவும் சுலபமானதொரு மார்க்கமாகவும் இருந்தது. மாறாக, இஸ்லாம் கதவுகளைப் இறுக்கமாகப் பூட்டப்பட்ட பூட்டுக்களை யும் கொண்டதாக இருந்தது. கிராமப்புறங்களில் வாழும் இஸ்லமியர்கள் பிற சமயத்தவர்களுடன் உறவு முறையில் விளித்துக் கொள்ளுமளவு நெருக்கம் பேணிய போதும், வழிபாட்டு கலாச்சாரங்களில் அந்நியப்பட்டே இருந்தனர். தர்கா கலாச்சாரம் மட்டுமே இதை ஓரளவு மாற்றியது. தமிழ் முஸ்லீம்கள் தமிழர்கள் ஓ முஸ்லீம்கள் என்னும் அசட்டுத்தனமான பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் ஒரு தமிழ் முஸ்லீம் தான் தமிழனல்ல என்றும் கூட வாக்குமூலம் தரத் தயாராயிருக்கிறான். இது சர்வதேசிய உணர்வன்று. அடர்த்தியான மதாபிமானமாகும். இவர்களில் பெரும்பான்மையினருக்கு அரேபிய வம்சாவழியினர் என்னும் நினைப்பிருக்கிறது. நாயகத்தின் உம்மத்துகள் என்கிற பொதுவான நிலைப்பாடு வேறு.

தமிழக முஸ்லீம்கள் தங்களை இஸ்லாமானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் உண்டு. இது இஸ்லாம் + ஆனவர்கள் என்னும் பொருள் தருவதாகும். மாறியவர்கள், மாற்றப்பட்டவர்கள் என இரண்டும் கலந்தவர்கள் இவர்கள். தங்களின் வேர்கள் குறித்த பிரக்ஞையற்றவர்களாகவே இன்றளவும் இவர்கள் இருக்கின்றனர். ஆண்களே இத்தகைய அறியாமைகளுடன் உழல்கையில், பெண்களின் நிலை குறித்து நாம் தீவிரமாக கவலைப்பட வேண்டியுள்ளது. ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் குழந்தைப் பருவத்திலிருந்து பெண்கள் சந்திக்கிற மதரீதியிலான பல நிலைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறது. பலதார மணம், தலாக், ஜீவனாம்சம், ஒழுக்க விதிகள், சொத்துப் பங்கீடு போன்ற நேரடி பாதிப்புக்குள்ளாகிற விஷயங்கள் பலவற்றையும் குரானின் குறிப்புகளுடன் ஒப்பிட்டு நோக்கி உண்மையை விளம்புகிறது. இவை காலம் காலமாகப் பலராலும் கேட்க நினைத்து கேட்கப்படாமல் விடப்பட்டவையே எனினும், பெண்ணின் பிரச்சனைகளைப் பேச வந்த பிரதி என்னும் அளவில் இந்நூலுக்கு தமிழில் முக்கியமான இடம் உண்டு.

அடிப்படைக் கல்வி பெறாத நிலை, கோஷா முறை, தலாக் போன்ற பகிரங்க மிரட்டல், பிள்ளைப் பிராயத்திலிருந்தே நிர்பந்திக்கப்படுகிற ஒழுக்க விதிகள் எல்லாம் ஒருங்கிணைந்து இறுக்கும் பொழுது மனரீதியாக பெண் பாதிக்கப்படுகிறாள். தமிழகத்தின் நகர்ப்புறத்தில் எந்த ஒரு பஸ் நிலையத்திலும் தனது புர்கா சுமையுடன் கிராமத்துக்குச் செல்லத் தடுமாறுகிற முஸ்லீம் பெண்களை சுலபமாக அடையாளங் காணலாம். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்குள் வளர்க்கப்படுகிற பெண், மணமாகி குழந்தை பெற்று நேரடியாக வாழ்க்கையை சந்திக்கும் பொழுது திணறிப் போகிறாள். பொது இடங்களில் அவள் தன் அறியாமையைச் சிந்திச் சிதறி விடுகையில் பரிதாபமாகவே உள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே முஸ்லிம் சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கும்முன்பு பல்லாண்டு காலமாக ஒரு முஸ்லிம் பெண் சராசரி ஏழெட்டுக் குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றுத் தள்ளுகிற இயந்திரமாகவே இருந்து வந்திருக்கிறாள்.

தஞ்சாவூர் போன்ற பகுதியிலோ இஸ்லாமியப் பெண்கள் வேறு விதமான பிரச்சனைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இங்குள்ள ஆண்களுக்கு வெளிநாட்டுச் சம்பாத்தியம் என்பது தீராத பெருங்கனவாகவே உள்ளது. பயணம் புறப்படாதவனுக்குப் பெண் தரத் தயங்குகின்றவர்களாகவே பெற்றோர்கள் உள்ளனர். திருமணம் முடிந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே பயணம் புறப்படுகிற இளைஞர்கள் கூட்டம் அதிகம். இந்நிலையில் அவர்களை மணந்து கொண்ட பெண்களின் தாம்பத்ய வாழ்வு கேள்விக்குள்ளாகிறது. மணவாளன் நான்கு ஷப் புகலேனும் சென்று மீளும் வரை சௌகர்யமான வாழ்வு முறைக்காக பெண் தனது பாலியல் தேவைகள் உள்ளிட்ட விஷயங்களை அடக்கியும், ஒடுக்கியும் வைக்க வேண்டியுள்ளது. சொந்த மண்ணில் தொழில் செய்து பிழைப்பதைக் கேவலமாகக் கருதும் மனோபாவத்தை ஆணும், பெண்ணும் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இது போன்ற அவலங்கள் தொடரவே செய்யும். ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் இது போன்ற பல்வேறு சிந்தனைகளைத் தூண்டுகிற பிரதியாகவே உள்ளது.

1986 ல் வெளியான கவிஞர் இன்குலாப்பின் விமர்சன நூலான யுகாக்கினி இவ்வகை (Protest Literature) எதிர்ப்பு இலக்கியத்திற்கு முன்னோடியாக உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இது போன்ற கலகக் குரல்களும், முணுமுணுப்புகளும் அரை நூற்றாண்டு காலமாக ஆங்காங்கே சிறு அளவில் தோன்றி மறைந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. தலாக் போன்ற விஷயங்களில் நேரடியான பாதிப்புக்குள்ளாகிற அநேகப் பெண்களும், பெற்றோரும் இஸ்லாத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிற அளவு விமர்சனங்களை எழுப்பி தங்களுக்குள் ஓய்ந்திருகின்றனர்.

எவ்வளவுதான் புரட்சியும், புதுமையும் பேசினாலும், ஒரு முஸ்லிம் தன் சமூகத்தை தீவிர விமர்சனத்துக்குள்ளாக்கச் சம்மதிக் காதவனாகவே இருந்து வந்திருக்கிறான். ஆயினும் இருபது ஆண்டுகளுக்கு முன் வந்த யுகாக்கினியில் இன்குலாப் பர்தா முறை, தலாக் மற்றும் இஸ்லாத்தில் நிலவி வரும் ஜாதிய வர்க்க முரண் களையும் சாடியுள்ளதை அவதானிக்க முடிகிறது. 1992 ல் வெளியான இவரது பாலையில் ஒரு சுனை சிறுகதைத் தொகுப்பும் கலகக் குரலின் நீட்சியாகவே ஒலித்தது. காலம் காலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்று பேசப்பட்டு வந்த பிரதிகளில் எங்கும் இவ்வகைக் கலக மனோபாவம் வெளிப்பட்டிருக்கக் காணோம். முற்றிலும் அவை மார்க்கத்தை சிலாகிக்கவோ, அறிவுறுத்தவோ செய்தன. இஸ்லாமிய வாழ்க்கை இலக்கியத்தில் செறிவான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்னும் குரல் ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில் புதினம் மற்றும் சிறுகதைப் படைப்பாளர்கள் பலர் அறிமுகமாகி அக்குறையைக் களையத் தொடங்கினர். இவர்களது எழுத்துக்களில் ஒரு மாறுபட்ட அணுகுமுறையும், தீவிரத் தன்மையும் எழுத்துக்கு அடிப்படையான சத்தியமும் தென்பட்டது.

2000 ஆண்டு வெளியான ஹாமீம் முஸ்தபாவின் ஊரு நேச்சை கவிதைகளும், சமகாலத்தில் வெளியான ஹெச்.ஜி. ரசூலின் மைலாஞ்சி கவிதைகளும் சில கருத்துக்களை துணிச்சலாகக் கூறி சர்ச்சைக்குள்ளாயின. தர்கா வழிபாடு மற்றும் மண் சார்ந்த கலாச்சாரத்தை வன்மையாக எதிர்க்கின்ற வஹாபிகள் ஒரு பிரிவாகவும், தர்காக்களுக்கு பெண்கள் செல்வதால் சுதந்திரமான மனநிலையை வாய்க்கப் பெறுகிறார்கள் என்று கருதுபவர்கள் ஒரு பிரிவாகவும் இருந்து, தீவிரமாக விவாதித்துக் கொள்கிற போக்கு சமீபங்களில் வலுப்பெற்றுள்ளது. ஊரு நேச்சையில் ஹாமீம் முஸ்தபா தர்கா கலாச்சாரத்துக்கு ஆதரவாகவும், அரேபிய மனப்பான்மையை எதிர்ப்பவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஹெச்.ஜி. ரசூல் மைலாஞ்சியில் சற்றுத் தீவிரமாகவே சுமையாக்களின் பெண்ணுறுப்பில் அம்பெய்து கொல்லும் அபூஜஹில்கள் படுக்கைகள் தோறும் / இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி என்றும் எழுதி அதிர்வலைகளை உருவாக்கினார். மைலாஞ்சியில் கவிதைகள் வாயிலாக அவர் எழுப்பிய அதே குரல் இஸ்லாமியப் பெண்ணியம் என்னும் இந்த நூலில் உரைநடையாக எளிமை பெற்று உரத்து ஒலிப்பதாகவே படுகிறது.

மைலாஞ்சி வெளியான தருணத்தில் ரசூல் தமிழ் இலக்கியச் சூழலில் கவனிப்புக்குள்ளானதைப் போலவே மதாபினமானிகளால் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார். பொதுவாக கவிதைகள் பரவலான அளவில் பெண்களிடமும், பாமரர்களிடமும் செல்ல வாய்ப்பில்லாத சூழலில் இவ்வகை எளிய விமர்சனக் கட்டுரைகளில் கவிதைகளில் சொல்ல வாய்க்காத பல விஷயங்களையும் சான்றாதரங்களுடன் விளக்க முயன்றிருப்பது வரவேற்கத்தக்கதே. எவ்வகைப் பிரதியும் அது எதைச் சொல்ல முற்பட்டிருப்பினும், சம்பந்தப்பட்ட வர்களைச் சென்றடையும் போதும், அது குறித்த எதிர் வினைகள் கிளம்புகிற சூழலிலும் தான் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அர்த்தம் பெற முடியும். இந்நூலில் ரசூல் மறைக்கப்பட்ட பல விஷயங்களைப் பகிரங்கப்படுத்துகிறார். இஸ்லாமியச் சட்டங்களைத் திரிப்பதும், திருமறை வசனங்களை ஒரு சார்பாகப் பயன்படுத்துவதும், வாழ்வி யல் நிலைபாடுகளில் பாராபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. என்று அவர் தொடங்குவதில் உண்மை உள்ளது. இது உனக்குத் தக்கதாய் விளக்கமளித்து / உண்மை விளம்பியாய் நடித்து / புனிதச் சட்டங்களை வளைத்து முதுகு சொறிந்து கொள்கிறாய். (மைலாஞ்சி பக்கம் 30) என்னும் அவரின் கவிதையிலும் பிரதி பலிப்பதை உணரலாம்.

இஸ்லாத்தில் நடைமுறையிலுள்ளள பலதார மணம் அன்றைய நாயகம் காலத்து அரேபிய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆனால் அன்றைய அரேபியா வில் பெண்கள் பெரிய அளவில் அடக்குமுறைக்குள்ளானதாகத் தெரியவில்லை.  பெண்களின் நிலை உயர்வாகவும், செல்வாக்கு மிகுதியாகவும் இருந்தது. தங்களுககு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இருந்தது. கணவர் வீட்டில் மோசமாக நடத்தப்பட்டாலோ அல்லது விருப்பம் இல்லாவிட்டாலோ அவர்கள் தங்கள் மக்களிடம் திரும்பிச் சென்றுவிட முடியும். சில சந்தர்ப்பங்களில் அவர்களே முன் வந்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். விவாகரத்து உரிமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அடிமையாகவோ, உடைமைப் பொருளாகவோ நடத்தப்படவில்லை. சம உரிமை பெற்றவர்களாகவும், தோழியராகவும் நடத்தப்பட்டனர் (R.A. NICOLSON – A Literary hostory of the Arabs) என்பது போன்ற ஆதாரங்களின் மூலமாகப் பெண்களுக்கான நிலை அன்றைய அரேபியாவில் சுதந்தரமயமானதாகவே இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்தியே இருக்க வேண்டும் என்ற குரானின் குறிப்பு ஆண்களால் வலியுறுத்தப்பட்டது. அதே சமயத்தில் நபியே ஆண்களுக்கு நீர் கூறும். அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ் நோக்கியே வைக்கவும். தங்கள் கற்பையும் ரட்சித்துக் கொள்ளவும் என்று ஆண்களுக்கான குறிப்பும் உள்ளது. ஆண்கள் அதை கவனமாகத் தவிர்த்து விடுவதையும் ரசூல் இந்த நூலில் சுட்டிக்காட்டுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அது ஆண் குழந்தையானால் இரு ஆடுகளும், பெண் குழந்தையாயிருப்பின் ஒரு ஆடும் பலி கொடுக்கிற   அகீகா எனப்படும் அரபு வழிப் பழக்கம் இங்கும் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக, ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் எனும் பேதங்கள் உண்டாவதையும் குழந்தைகள் உலகம் பகுதியில் சொல்கிறார்.

ஹைளு என்னும் மாதவிடாய் காலங்களில் புனித நூலைத் தொடுவதற்கும், தொழுகை செய்வதற்கும் பெண்களுக்குள்ள தடை குறித்துக் குறிப்பிட்டு வந்த – நூலாசிரியர் மனைவி ஆயிஷாவின் மாதவிடாய் மடியில் சாயந்தபடி நபிகள் குரான் ஓதிய தகவல் குறிப்பையும் தருகிறார்.

மொழி அரசியல் என்னும் பகுதியில் ரசூல் விவாதிக்கிற விஷயம் புரட்சிகரமானது. தாய் மொழியில் வழிபாடு, தமிழ்வழித் தொழுகை என்பதைக் கேட்ட மாத்திரத்தில் உலமாப் பெருமக்களும், அடிப்படைவாதிகளும் பத்வா கொடுக்கத் தயாராக இருப்பர். இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியாவில் 1966 – வாக்கில் தான் குரான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் இப்படியானால் குரானின் தமிழ் மொழி பெயர்ப்பு வருவதற்கோ நீண்ட காலம் பிடித்தது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மொழி பெயர்ப்பில் குரான் திரிந்து விடுமென ஆழமாக நம்பினர். அதன் காரணமாகவே மொழி பெயர்ப்பைத் தள்ளிப்போட்டனர். மேலும் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டால் பாமரனும் புரிந்து கொள்கிற பிரதியாகிவிடும். பிறகு ரசூல் குறிப்பிடுவதைப் போல புனித நூலைக் காரணம் காட்டி அவர்கள் இஷ்டம் போல முதுகு சொறிந்து கொள்ள முடியாது – என்னும் சதியுமாகும். இதை முறியடிக்கிற விதமாகவே குரான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைக்கு அது மாற்று மதத்தினர் அதிகம் பேரால் விரும்பி வாசிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருவதைக் காண முடிகிறது.

அரபு எல்லோரும் சுலபமாகப் படித்தறியக் கூடிய மொழி அல்ல. அதற்கு இணங்க இளமையிலிருந்தே நாவை வளைத்துப் பழக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் குரான் ஓதிப்பழகாத முஸ்லிம்களே அதிகம். இதற்கு மொழிவழித் தடையும் ஒரு காரணமாகும். வீதிக்கு வீதி பள்ளிவாசல்கள் எழும்பி நிற்கின்ற காலத்தில் பாங்கோசை கேட்டவுடன் தொழுகைக்கு நிற்பவர்களை விரல் கொண்டு எண்ணி விடலாம். (வெள்ளிக்கிழமை ஜூம் ஆ தொழுகை வேறு விஷயம்)

இன்றளவும் பயான் எனப்படுகிற பிரசங்கம் தமிழிலேயே நிகழ்த்தப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் துஆக்கள் நல்ல தமிழில் கேட்கப்படுகின்றன. தொழுகை முறையும் தாய் மொழிக்கே மாறிவிடும் பட்சத்தில் பொருளறிந்து மனமுருகி இறைவனை வழிபட அது பெருவாய்ப்பாக அமையும். இணை வைக்காமல் இறைவனை எப்படி அழைப்பது என்பது தான் மொழி சார்ந்த பிரச்சனை என்று ரசூல் கேள்வி எழுப்புகிறார். ஆண் தன்மையும், பெண் தன்மையும் அற்ற என் அல்லாவை எப்படி நான் அழைப்பேன் என் தமிழில் என்று அவர் கவிதை வாயிலாக எழுப்பிய கேள்வியு மாகும் இது. மொழி கடந்த, இனம் கடந்த என் அல்லாவிற்கு இப்பொழுது வேண்டும் ஒரு மொழி என்ற அவரின் கவிதைக் கோரிக்கையே மொழி அரசியல் என்னும் தலைப்பில் சற்று விரிவாக – இந்நூலில் எழுப்பட்டுள்ளது.

அடுத்து தர்கா கலாச்சாரம் எடுத்த எடுப்பில் இதை வஹாபின் ஷிர்க் (இணை வைத்தல்) என்று ஒதுக்குவதும் கூட அபத்த மானதாகும். தமிழக முஸ்லிம் கிராமங்களில் ரம்ஜான் விசேஷ தொழுகையை ஆற்றங்கரையில் அடர்ந்த தோப்புகளுக்கு நடுவே குத்பா பள்ளி என ஒன்றை நிறுவி அங்கே நிறைவேற்றுகிற வழக்கம் இருந்து வருகிறது. இயற்கையுடன் இயைந்து வழிபடுவதன் மூலம் உள்ளத்தில் நிறைவானதொரு நிலையை அடைய முடிகிறது. இந்த குத்பா பள்ளியை பெண்களும் பயன்படுத்திக் கொள்வதுண்டு. அருகிலுள்ள ஆற்றில் நீராடுவதும், தோப்பு தொறவுகளில் இயற்கையை ரசித்தவாறு நடப்பதும் அவர்களின் மன இறுக்கத் தைப் போக்குவதற்காக முன்னோர்களே செய்து கொடுத்த ஏற்பாடாகும் இது. மாற்று மதப் பெண்களுடன் அளவளாவ முஸ்லிம் பெண்களுக்கு சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கிறது தர்கா சந்திப்பு. இதனாலேயே வழிபாடுகளில் அந்நிய மதக்கலப்பு ஏற்பட்டு விட்டதாக வஹாபிகள் கொதிக்கின்றனர். இவ்விதக் கெடுபிடிகளின் மூலமாக இந்தியாவை அரபு தேசமாகக் கற்பனை செய்து பார்க்கிற விபரீத முயற்சிகளில் வஹாபிகள் இறங்கியுள்ள தாகவே தோன்றுகிறது. தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது மத நம்பிக்கை எவ்வளவு ஆழமானதாக இருந்த போதிலும் அவர்களது பண்பாட்டு வாழ்க்கை தமிழ்வேர்களோடு தொடர்புடையதாகவே இருந்து வந்திருக்கிறது என்னும் மனுஷ்ய புத்திரனின் கூற்றை (தினமணி பெருநாள் மலர் 2002) இந்நேரத்தில் நாம் கருத்தில் கொள்ளலாம். வேர்களுடனான தொடர்புகளை துண்டிப்பதன் மூலம் வஹாபிகள் ஒரு நிழல் அரபு வாழ்க்கையை நிறுவத் துடிக்கிறார்கள் என்றும் கருத வேண்டியிருக்கிறது.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை பிரச்சனைகளில் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை வலியுறுத்துவதும், கிரிமினல் குற்றங்களுக்கு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை பின்பற்றக் கோருவதுமான ஆதிக்க முஸ்லிம்களின் இரட்டை வேடத்தை ரஜ்ம் – சடங்கன் புனைவும் வாழ்வின் பிரதியும் அத்தியாயத்தில் நூலாசிரியர் அம்பலப்படுத்துகிறார்.

மது அருந்துதல், திருட்டு, விபச்சாரம், வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்கு நாயகம் காலத்தில் நடைமுறையிலிருந்த கடுமையான தண்டனைகளை அறியும் பொழுதே ஆதிக்க முஸ்லிம்கள் எத்தனை சாமர்த்தியமாக இந்தியாவில் தங்களுக்கேற்ப சட்டத்தை வளைத்துக் கொள்கின்றனர் என்பதும் நமக்குப் புலனாகிறது.

இந்தியா உள்ளிட்ட வாழ்வியல் சூழல்களில் அதிகாரத்தின் ஆளுமைகளால் நசுக்கப்படுகிற பலவீன நிலையில் உள்ள இஸ்லாமியப் பெண்களுக்கே அதிக அளவு சொத்துப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குரானிய கருத்தாக்கத்தில் சொல்லப்படாத அர்த்தமாகவும் விரிவடைகிறது என்னும் கருத்து இமாம் அபூஹனியா ஆண் பலகீனமானவனா? பெண் பலகீனமானவளா? என்று எழுப்பும் கேள்விகளிலிருந்தும், இமாம் ஜாபர் அதற்கு பதிலளிப்பதுமான நிகழ்விலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

தமிழகப் பள்ளி வாயில்களில் ஆண்களுடன் இணைந்து தொழுகை நடத்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாயகம் காலத்தில் அவரை இமாமாக் கொண்டு ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தியுள்ள சம்பவத்தை நூலாசிரியர் கோடிட்டுக்காட்டுகிறார். தவறான முறையில் பிறந்தவன், கிராமவாசி பருவமடையாதவன் கூட தொழுகை நடத்துவது கூடும் என்று புகாரி ஹதீஸ் கூறுவதையும், அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும் என்ற ஆயிஷா நாயகியின் அறிவிப்பின் படி, வேதம் நன்கு ஓதத் தெரிந்திருந்தால், பெண்களும் இமாமாக நின்று தொழுகை நடத்தலாம் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

2002 பிப்ரவரி 28 குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தை ஒட்டி நிகழ்த்தப்பட்ட வன்முறையில் கௌஸர்பானு என்னும் ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிற்றில் சூலாயுதம் பாய்ச்சி குழந்தையை வெளியேற்றிக் கொன்று தீயில் சிதைத்த கொடூரம், ஒரு இஸ்லாமியச் சிறுமியை பல காமுகர்கள் கூட்டு வன்புணர்ச்சி நடத்தியது போன்ற அடுக்கடுக்கான சம்பவங்கள், பாலஸ்தீன மற்றும் ஆப்கான் மக்கள் கொன்று குவிக்கப்படுவது, இராக்கை நிர்மூலமாக்கியது போன்ற அமெரிக்க சர்வதேச ரௌடியிசத்தின் பாசிச வன்முறைகளை வாசிக்கையில் வாசக மனம் பதைபதைப்புக்குள்ளாக்கும்.

சூஃபி ஞானிகள் இறைவனோடு ஒன்றிப்போய் தான் என்னும் நிலையை அழித்துக் கொள்கிற மகத்துவத்தை, இஸ்லாத்துக்காக தற்கொலைப் படையாகி தன்னை அழித்துக் கொள்கையையும் ரசூல் கண்டிக்கிறார்.

போஸ்னியாவில் இறங்கிய செர்பிய ராணுவவத்தின் பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான முஸ்லிம் பெண்கள் சுமந்த பாவக் கருக்களை வறுமையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்னும் குரான் மொழியைக் காட்டி கருவைச் சிதைக்கக் கூடாது என்று தீர்ப்பளித்த அரேபிய உலமாக்களின் கண்மூடித் தனத்தையும் ரசூலின் பேனா சாடுகிறது.

ஆதிக்கவாதிகளால் படர்ந்து விட்ட பாசி, பதர்களையும், திரைகளையும் களைந்து மாசு மருவற்ற பெண்கள் வாழ்வை இஸ்லாமியப் பெண்ணியம் நூலின் வாயிலாக முன் வைக்கும் ஹெச்.ஜி. ரசூல் உலகளாவிய அவதானிப்பும், நுட்பமான வாசிப்பும் கொண்டு இதைச் சாத்தியமாக்கியுள்ளார். புதுமையான மனோ நிலையும், துணிச்சலும், இவருக்கு கை கொடுத்துள்ளது. 200 பக்கங்களிலேனும் எழுதப்பட்டிருக்க வேண்டிய பிரதி நாற்பத்தெட்டே பக்கங்களில் செறிவாக வார்க்கப்பட்டிருப்பது நுலாசிரியர் வார்த்தைச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிற கவிஞர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

மைலாஞ்சி கவிதைத் தொகுப்பின் மூலமாக அவர் சில கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்ததை வாசகர்கள் அறிவர். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட படைப்பாளியை எதிர்ப்புகள் எதுவும் செய்துவிடாது. மாறாக அவன் முன்பிலும் தீர்க்கமாகக் களமிறங்கிச் செயலாற்றுவான் என்பதே ரசூலிடமிருந்து நாம் பெற்றுக் கொள்கிற செய்தியாகும். குரான் ஓதுதல், குரான் வாசித்தல், குரான் ஆய்தல் என்னும் மூன்று நிலைகள் அவசியம் என்பது இப்பிரதியின் மூலமாக நமக்கு கிடைக்கிற கருத்தியல் தரிசனமாகும். வேதம் கற்றவர்கள் புனித நூலை தமக்குத் தக்க மாற்றி மக்களை மேலாண்மை செய்கிற போக்கு இப்பிரதியின் மூலமாகத் தகர்க்கப்படலாம்.

ஒரு மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்துக்கு இஸ்லாம் உள்ளாக்கப்படவேண்டும் என அறவுலகவாதிகள் விரும்புகிற சூழலில் இந்த நூல் வரவேற்கத் தக்கதே. கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிற இஸ்லாமியப் பெண்கள் மீதான தடையும், கட்டவிழ்த்துவிடப்படுகிற வன்முறைகளையும் கூட (இப்பிரதியில் இல்லாதபோதும்) சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தமிழ்ச் சூழலில் சல்மா போன்று அபூர்வமாக எழுத வந்த முஸ்லிம் பெண்ணும் கூட சமூகம், குடும்பம் இரண்டின் அழுத்தமான அடக்கு முறைக்குள்ளானார்கள். தனக்கு நேர்ந்ததை – அல்லது தன்னளவில் பாதிப்புக்குள்ளான விஷயங்களை எழுத்தாக் கிய சல்மாவின் இலக்கியத்துக்கு ஆபாச வர்ணம் பூசப்பட்டது. உடல் மொழி சார்ந்து பெண்கள் எழுதியவற்றுக்கு எதிராக பெரிய சர்ச்சைகள் எழுந்தன. இதனால் பல பெண் படைப்பாளிகள் மன உளைச்சலுக்குள்ளாயினர்.

சமீபத்தில் நடந்து முடிவுற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் சல்மா தோல்வியடைந்ததற்குப் பின்னணியாக மதவாதிகளின் கைங்கர்யமுள்ளது. மருங்காபுரி தொகுதி முடிவு வெளிவந்த நேரத்தில் பள்ளிவாயிலுக்கு வெளியில் நின்று வார்த்தைகளாலும் பாவனைகளாலும் மகிழ்வை வெளிப்படுத்திக் கொண்டவர்களை நேரிடக் காண முடிந்தது. இவர்கள் கோபப்படுமளவு சல்மா என்ன செய்துவிட்டார்? என்று யோசிக்கையில் அவரின் எழுத்தின் நிஜம் இவர்களைக் கலங்கடித்திருக்கிற உண்மை புலனாகிறது.

Woman from Point Zero, Two women in one போன்ற உலகப் புகழ் பெற்ற புனிதங்கள் எழுதிய எகிப்து பெண் எழுத்தாளர் அல் – சாதவி தனது படைப்புகளுக்காகச் சிறை கண்டார். பெண்களின் காமவேட்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பெண்களின் பாலுறுப்பிலுள்ள முனையை வெட்டியெறிகிற (சிறு வயதிலேயே) எகிப்திய பழக்கத்துக்கு எதிரான கருத்தை தனது படைப்பில் முன்வைத்தவர் இவர். வங்க தேசப் பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் லஜ்ஜா நாவலுக்க சந்தித்த வன்முறைகளை அனைவரும் அறிவர். இவ்வாறு உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியப் பெண் படைப்பாளிகள் நசுக்கப்டுகின்றனர்.

இரானியப் படங்கள் குறித்து அறிவுலகமே கதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இரானிய பெண் இயக்குனர் தமினா மிலானி தன்னுடைய மறைக்கப்பட்ட பாதி (Hidden half) என்னும் புரட்சிகரமான படத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

ஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் இதேபோன்று பல்வேறு விதமான பெண்ணிய அடக்கு முறைகளையும் நம் சிந்தனைக்கு கொண்டு தந்து ஒரு கலகப் பிரதிக்கான சகல கூறுகளையும் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் கையிலும் இது இருந்தாக வேண்டிய அவசியத்தை படித்த ஒவ்வொருவருமே சொல்லக் கடமை இருக்கிறது.

 கீரனூர் ஜாகிர் ராஜா , நன்றி மார்க்சிஸ்ட்

Leave a Reply