மாமேதை காரல் மார்க்ஸ் – லெனின்

மார்க்ஸ்வாழ்க்கை

காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் ட்ரையர்நகரில் 1818 மே 5-ம் தேதியன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். மேற்படிப்பிற்காக முதலில் பான், பின்பு பெர்லின் நகர்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தந்தையின் விருப்பத்திற்காக சட்டம் படிக்கத் தொடங்கிய மார்க்ஸ் வரலாறு, தத்துவம் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கற்றார். தத்துவ மேதை எபிக்யூரஸ் பற்றிய ஆய்வை சமர்ப்பித்து  முனைவர் பட்டம் பெற்றார்.

இளம்பருவம்

மாணவப் பருவத்தில் அவர் ஒரு பேராசிரியராக விரும்பினார். எனினும் அன்றிருந்த பிற்போக்கு அரசின் கொள்கை அன்றைய முன்னணி இடதுசாரிகளான லுத்விக்ஃபாயர்பாக், ப்ரூனோபாயர் போன்ற பேராசிரியர்களை பல்கலைக்கழகங்களில் நுழைவதைத் தடுத்தது. எனவே ஆசிரியர் கனவைத் துறந்து “புதிய ரைனிஷ்” என்ற செய்தித்தாளில் ஆசிரியராகச் சேர்ந்து 1842-ஆம் ஆண்டு அக்டோபரில் அதன் முதன்மை ஆசிரியராக உயர்ந்தார்.

அவரது பொறுப்பில் இந்த இதழ் பெருமளவிற்கு புரட்சிகரமான, ஜனநாயக எண்ணங்களைத் தூண்டுவதாக வளர்ந்து வந்த நிலையில், அரசாங்கம் அதை தினமும் மூன்று முறை தணிக்கை செய்யத் தொடங்கியது. 1843 ஜனவரி -1 அதை முற்றிலுமாக முடக்கிவிட அரசு திட்டமிட்டிருப்பதை அறிந்த மார்க்ஸ் பத்திரிக்கையை காப்பாற்றுவதற்காக அதற்கு முன்பே ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். இருப்பினும் அந்தப் பத்திரிக்கை முற்றிலுமாக நின்று போனது.

அரசியல் வாழ்க்கை

கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவ சிந்தனை கொண்டவரான ஆர்னால்ட்ரூஜ் என்பவருடன் சேர்ந்து ஜெர்மன்-பிரான்ஸ் தொகுப்பு என்ற இதழை பாரீஸ் நகரில் இருந்து கொண்டு வர திட்டமிட்டு அங்கு சென்றார். முதல் இதழோடு அது நின்று போனது. அவ்வாறு வெளியான முதல் இதழ் மார்க்ஸ்-எங்கல்ஸ் ஆகியோரின் கட்டுரைகளைக் கொண்டதாக இருந்தது. அந்த கட்டுரைகள் பொருள்முதல்வாதம், கம்யூனிசம் போன்ற  கொள்கைகளை விளக்குவதாக அமைந்தன. மார்க்சிய தத்துவம் உருவாகத் துவங்கிய காலம் அது. சமூகத்தில் இருந்த அனைத்தையும் இரக்கமேயின்றி விமர்சிப்பதாகவே மார்க்சின் எழுத்துகள் இருந்தன.

1844 செப்டம்பரில் பிரடரிக் எங்கல்ஸ் பாரீஸ் நகரில் தங்கியிருந்த சில நாட்களில் மார்க்ஸ்-எங்கல்ஸ் இருவருக்குமிடையே துளிர்விடத் தொடங்கிய நட்பு, வாழ்நாள் முழுவதும் நீடித்தது. பாரீஸ் நகரில் அப்போதிருந்த பல்வேறு உயர் நடுத்தர  வர்க்கத்தினர் பேசி வந்த, போலியான சோசலிச கருத்துகளை எதிர்த்து இருவரும் கடுமையாகப் போராடி வந்தனர். 1845-ல் பயங்கரமான புரட்சியாளர் என அறிவிக்கப்பட்ட மார்க்ஸ் பாரீஸ் நகரிலிருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார். பெல்ஜியம் நாட்டின் தலைநகரான ப்ரசெல்ஸ் நகரில் சென்று தங்கினார்.

1847-ல் மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ்ட் லீக் (கம்யூனிஸ்ட் கழகம்) என்ற ரகசிய பிரச்சாரக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தனர். அந்த ஆண்டு  லண்டனில் நடைபெற்ற அதன் இரண்டாவது காங்கிரசில், கம்யூனிச கொள்கைகள் பற்றிய பிரசுரம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மார்க்ஸ்-எங்கல்ஸ் இணைந்து உருவாக்கி, 1848 பிப்ரவரியில் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையானது சமூக வாழ்க்கை பற்றிய புதிய உலகக் கண்ணோட்டம் அந்த அறிக்கையில் இருந்தது.சமுகம் எப்போதும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் வந்துள்ளது என்ற இயங்கியல் பார்வை அதில் இருந்தது. இயற்கையின் பொருள்கள், சமுகம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய முழுமையான, ஆழமான தத்துவமான இயங்கியல் பொருளாதாரம் அதில் இருந்தது. சமூகங்களில் உள்ள வர்க்கங்களின் போராட்டமே வரலாற்றை உந்தித் தள்ளுகிறது என்ற கருத்தினை அது கொண்டிருந்ததது. புதியதொரு கம்யூனிச சமூகத்தைப் படைக்கவிருக்கும் வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் வரலாறுரீதியான, புரட்சிகரமான பாத்திரத்தை எடுத்துக் கூறும் இலக்கிய நயமிக்க ஆவணமாக “கம்யூனிஸ்ட் அறிக்கை”  திகழ்ந்தது.

1848 பிப்ரவரியில் புரட்சி வெடித்தெழுந்ததைத் தொடர்ந்து பெல்ஜியத்திலிருந்தும் மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பாரீஸ் சென்ற அவர் மார்ச்சில் அங்கு நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு ஜெர்மனியின் கோலோன் நகருக்குச் சென்றார். புரட்சி கருத்துகளுக்காக அவர் எந்த நாட்டிலும் இருக்க விடாமல் பிற்போக்கு அரசுகளால் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார்.

1848 ஜூன் 1 முதல் 1849 மே 19 வரையிலான காலத்தில் ‘புதிய ரைனிஷ் செய்தித்தாள்’ என்ற இதழின் முதன்மை ஆசிரியராக செயல்பட்டார். அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்ப்புரட்சி சக்தி மார்க்சின் மீது சதிவழக்கு ஒன்றை தொடுத்தது. 1849 பிப்ரவரியில் இந்த சதிவழக்கிலிருந்து மார்க்ஸ் விடுதலை செய்யப்பட்டபோதிலும் ஜெர்மனியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பாரீஸ் சென்ற மார்க்ஸ் 1849 ஜூன் 13-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து லண்டன் நகருக்கு குடிபெயர்ந்த மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வசித்து வந்தார்.

கல்லூரிப் பருவத்திலேயே அவரது சிறு பருவத் தோழியும் காதலியுமான ஜென்னியை திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டிருந்தது. மார்க்ஸ் 1843-ல் அவரை திருமணம் திருமணம் செய்து கொண்டார். ஜென்னி, அன்றைய பிரஷ்ய நாட்டின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்றைய அரசில் அவரது சகோதரர் உள்துறை அமைச்சராக இருந்தார். மேல்தட்டு குடும்பப் பின்னணி கொண்ட ஜென்னி, மார்க்சின் அனைத்துவகையான சமூக நடவடிக்கைகளிலும் உற்ற துணைவராய் அவருடனே இருந்து நாடு நாடாக அலைந்தார். இறுதியில், ஜென்னி 1881 டிசம்பர் 2-ல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

நிரந்தர வேலை ஏதுமின்றி வாழ்நாள் முழுவதும் அன்றைய பிற்போக்கு அரசுகளால் விரட்டியடிக்கப்பட்டு வாழ்ந்த மார்க்ஸ்-ஜென்னி தம்பதியருக்கு முதலில் பிறந்த குழந்தைகள் லண்டன் நகரில் சிறுவயதிலேயே உயிர் நீத்தன. வறுமைக்கிடையே வளர்ந்த அவர்களுடைய மூன்று மகள்கள் சமூக சிந்தனையுடன் மார்க்சின் பணிகளில் பங்கேற்றனர். இவர்கள் மூவருமே அன்றைய பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சோசலிஸ்டுகளை திருமணம் செய்தனர்.

எங்கல்சின் தன்னலமற்ற, தொடர்ச்சியான நிதியுதவி மட்டும் மார்க்சுக்கு கிடைக்காமலிருந்தால், அவர் தனது புகழ்பெற்ற நூல்களை பதிப்பிக்க முடிந்திருக்காது. அது மட்டுமல்ல; வறுமையின் விளைவாக, எண்ணற்ற நோய்களை எதிர் கொண்டு மிகச் சில ஆண்டுகளிலேயே மார்க்ஸ் உயிர் நீத்திருப்பார். மார்க்சும் எங்கல்சும் முதலாம் அகிலம் எனப்படும், சர்வதேச தொழிலாளர் சங்கத்தினை உருவாக்கி 1864-ம் ஆண்டிலிருந்தே அதன் உயிரும் உடலுமாய் செயல்பட்டு வந்தனர்.

மார்க்ஸ், தனது தத்துவார்த்த வாசிப்பு, எழுத்துப் பணிகளுக்கு மத்தியில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான கருத்துகளை இரக்கமேதுமின்றி எதிர்த்துப் போராடுவதிலும், பல்வேறு நாடுகளிலும் வளர்ந்து வந்த பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டுவதிலும் முன்னணியில் இருந்தார்.

1872-ல் உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் செழிப்புற்று வளர்ந்து வந்த நிலையில், மார்க்ஸ் தனது “மூலதனம்” என்ற மகத்தான  நூலினை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அரசியல் பொருளாதாரம் குறித்து பலநூல்களை படைத்தார். மனித சமூகத்தின் மேன்மைக்காகவே தன் வாழ்நாளெல்லாம் சிந்தித்து வந்த மார்க்ஸ் 1883 மார்ச் 14 அன்று நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

  1. மார்க்சியம் என்பது என்ன?

19ம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவற்றை இவ்வாறு குறிப்பிடலாம்.

  1. ஜெர்மன் தத்துவ ஞானம்,
  2. ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம்,
  3. பிரெஞ்சு சோசலிசம்

இந்த மூன்று துறைகளையும் ஆராய்ந்து இந்த மூன்றிலும் தனது சொந்த சிந்தனை பங்களிப்பினை செய்தார் மார்க்ஸ். அவரது  கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்தே நவீனகால விஞ்ஞான சோசலிசம் என்ற புதிய சமுகத்தை உருவாக்குவதற்கான தத்துவம் மலர்ந்தது.

 பொருள்முதல்வாதம்

1844-45 ஆண்டுக் காலத்தில் மார்க்சின் கருத்துகள் உருவம் பெற்றன. அக்காலம் முதல் அவர் ஒரு பொருள்முதல்வாதி;

அண்டம் அனைத்தும்  பொருட்களாலேயே ஆனது, பொருளே அனைத்துக்கும்  ஆதாரம்; அனைத்து இயற்கை  நிகழ்வுகள் பொருட்களுக்கிடையே நடக்கும் வினை, எதிர்வினைகளே என பொருள்முதல்வாதம் எடுத்துரைக்கிறது.

மார்க்ஸ் அன்று லுத்விக்ஃபாயர்பாக் என்பவரின் பொருள்முதல்வாதத்தைப் பின்பற்றினார்.

ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட “பழைய” பொருள் முதல்வாதம்” அனைத்திலும்  பல குறைபாடுகள் உள்ளன என்று மார்க்சும் எங்கல்சும் கருதினார்கள். அவை வருமாறு;

(1) இந்தப் பொருள்முதல்வாதம் இயந்திரத் தன்மை கொண்டது. பொருளைப் பற்றி வளர்ந்து வந்த  வேதியியல் துறை, உயிரியல் துறை, பிறகு வளர்ந்த  மின்சாரத் துறை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கிற மிகமிக நவீனமான முன்னேற்றங்களை அது கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகிறது;

(2) பழைய பொருள் முதல்வாதத்தில்  வரலாற்று வளர்ச்சி  பற்றிய சரியான புரிதல் இல்லை. பொருளின் வளர்ச்சி பற்றிய கண்ணோட்டம் அதில் முழுமை பெறவிவில்லை;

(3) “மானுட சாரம்” எனப்படுவது, சகல “சமுதாய உறவுகளின் ஒரு “தொகுதியே” என்று அது கருதவில்லை; உலகத்தை “மாற்றியமைப்பதே முதன்மையான வேலை. ஆனால் , பழைய பொருள் முதல்வாதத்தில் உலகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து விளக்குவதோடு  நின்றுவிட்டது. உலகை மாற்றி அமைப்பதற்கான, “புரட்சிகரமான நடைமுறைச் செயல்பாட்டின்” முக்கியத்துவத்தை அது புரிந்து கொள்ளவில்லை.

இயக்கவியல்

மார்க்சிற்கு முந்தைய தத்துவ மேதை ஹெகல் ஆவார். அவரது, தத்துவஞானத்தின் புரட்சிகரமான அம்சத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு அதை மேலும் வளர்த்தார். ஹெகலுடைய இயக்கவியலானது வளர்ச்சியைக் குறித்த மிகவும் முழுமையான, உள்ளடக்கத்தில் மிகமிக வளம் நிறைந்த, மிகுந்த ஆழமுள்ள போதனை. அந்த இயக்க இயலைக் காப்பாற்றி அதனை இயற்கை பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தினைக் உருவாக்கியவர்கள் மார்க்சும், எங்கல்சும்தான்.

எங்கல்ஸ் எழுதுகிறார்: “அப்படி அப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாக உலகத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது, இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இயக்கப் போக்குகளின் தொகுதியிலே மாற்றம் அடையாதவை போல் பார்வைக்குத் தோன்றுகிற பொருட்களும், அதே போல் அவை பற்றி மூளைக்குள்ளே நிழலாடுகிற சிந்தனை பிம்பங்களும், கருத்துருவங்களும், தோன்றியபடியும் மறைந்தபடியும் இருக்கும்படியான இடையறாத மாறுதலுக்கு உட்படுகின்றன – இது மகத்தான அடிப்படைக் கருத்தாகும். ”

“இயக்க இயல் வகைத் தத்துவஞானத்துக்கு இறுதியானதோ, உயர்வானதோ, புனிதமானதோ எதுவுமே கிடையாது. எல்லாவற்றின் தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்குள்ளேயுமுள்ள தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. உருவாகிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கிற, கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு முடிவில்லாமல் ஏறிச் சென்றபடியேயிருக்கிற, இடையறாத இயக்கப் போக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் நிலைத்து நிற்க முடியாது. “

சமுகம், பொருள் வளர்ச்சியைப் பற்றிய அதிக வளம் பொருந்திய தத்துவமாக இயக்கவியல் திகழ்கிறது. அதன் இயல்புகளில் சிலவற்றை பின்வருமாறு தொகுக்கலாம்:

  • வரலாற்றில் ஏற்கெனவே கடந்துவிட்ட கட்டங்களே திரும்ப வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், அந்தக் கட்டங்கள் வேறு வகையில், முந்தியதை விட உயர்ந்த நிலையில், திரும்ப வந்து கொண்டிருப்பதான வளர்ச்சி நிகழ்கிறது. இது “நிலை மறுப்பின் நிலை மறுப்பு” எனப்படும்.
  • வளர்ச்சி எனப்படுவது, நேர்கோடாக இல்லாமல் சுழலேணி போன்று சுழன்று சுழன்று மேலேறும்.
  • திடீர்ப் பாய்ச்சல்கள், பெருவிபத்துகள், புரட்சிகளின் மூலம் வளர்ச்சி ஏற்படும்;அளவு மாற்றம் பண்பு மாற்றமாக  உருமாறுதல்;
  • குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட நிகழ்வு, குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் செயல்படுகிற பல்வேறு சக்திகள், போக்குகள் அனைத்தும் உள்ளுக்குள் முரண்பாடுகள் மோதல்கள் கொண்டவை; அவையே  வளர்ச்சிக்கான உள்தூண்டுதல்கள்;
  • எந்தவொரு நிகழ்வும், அதன் எல்லா அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று, ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு கொண்டிருக்கின்றன.

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்

பழைய பொருள்முதல்வாதத்தின் முரண்பாடுள்ள தன்மையையும், முழுமையற்ற தன்மையையும், ஒரு சார்பான தன்மையையும் உணர்ந்து கொண்ட பிறகு மார்க்ஸ் “சமுதாயத்தைப் பற்றிய விஞ்ஞானத்தை… பொருள்முதல்வாத அடிப்படைக்கு இணக்கமாகக் கொண்டுவந்து அந்த அடிப்படை மீது அதை மீண்டும் அமர்த்துவது” அவசியம் எனக்கண்டார்.

வரலாறு  என்பது எண்ணற்ற வேறுபாடுகளையும் பல்வகை முரண்பாடுகளையும் கொண்டுள்ள  ஓர் இயக்கப் போக்காக உள்ளது. அவை  திட்டவட்டமான விதிகளால் இயங்குகிற  ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையில் பயில்வதற்கு மார்க்ஸ்  வழி காட்டினார்.

மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனார். ஆனால் மனிதர்களின், மக்கள் பெருந்திரளின் செயல் நோக்கங்களை நிர்ணயிப்பது எது? மனிதனின் வரலாற்று நடவடிக்கை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது பொருளாயத(Material) வாழ்வின் உற்பத்தி, மற்றும் முதலாளி தொழிலாளி போன்ற உற்பத்தி உறவுகள்தான்.

அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற தனது நூலின் முன்னுரையில் மனித சமுதாயத்தையும் அதன் வரலாற்றையும் பற்றிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறித்துப் பின்வரும் சொற்களில் மார்க்ஸ் ஒரு முழுமையான வரையறுப்பைத் தருகிறார்:

“மனித வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய உற்பத்தியில் திட்டமிட்ட உறவுகளில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை; மனிதர்களின் விருப்பத்தின்படி அமையாமல் சுதந்திரமாக அமைபவை. இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருளாயத உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கு பொருத்தமாக அமைகின்றன. “இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக, உண்மையான அடித் தளமாக அமைகிறது. அதன் மீதுதான் சட்டம், அரசியல் வகைப்பட்ட மேல் கட்டுமானங்கள் எழுகிகின்றன.

“அந்த அடித்தளத்துக்குப் பொருத்தமாகவே சமுதாய உணர்வின் சில குறிப்பிட்ட வடிவங்கள் உருவாகின்றன… மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்நிலையை வரையறுப்பதில்லை; அதற்கு மாறாக, அவர்களுடைய சமுதாய வாழ்நிலைதான் அவர்களின் உணர்வை வரையறுக்கிறது.

“சமுதாயத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினுடைய வடிவங்களாக இருந்தஉற்பத்தி உறவுகள், அந்த உற்பத்திச் சக்திகளுக்கே விலங்குகளாக மாறிவிடுகின்றன. அதன் பிறகுதான் சமுதாயப் புரட்சியின் சகாப்தம் துவங்குகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன் கூடவே பிரம்மாண்டமான மேல்கட்டுமானம் முழுவதும் ஏறத்தாழ விரைவாக மாற்றமடைகிறது.

“இத்தகைய மாற்றங்களைக் கவனிக்கும் போதெல்லாம், உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பொருளாயத மாற்றத்தையும் – இதை இயற்கை விஞ்ஞானத்தினால் துல்லியமாக வரையறுக்க முடியும் – சட்டம், அரசியல், மதம், அழகியல் அல்லது தத்துவஞானம் போன்றவற்றில் – சுருங்கச் சொன்னால், எந்தச் சித்தாந்த வடிவங்களில் மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து போராடித் தீர்க்கிறார்களோ, அந்தச் சித்தாந்த வடிவங்களில் – ஏற்படும் மாற்றத்தையும் வேறுபடுத்திக் காண வேண்டும்.

வர்க்கப் போராட்டம்

திகைப்பூட்டும் புதிர் போல், குழப்பமானதாகத் தோன்றும் மாற்றங்கள் இடையறாது நிகழ்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கும் விதிகள் என்னவென்பதைக் கண்டுபிடித்து  ஒரு வழிகாட்டுகிறது மார்க்சியம்.

வர்க்கங்களாக சமுகம்  பிளவுண்டிருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒரு செயல்படுகிற பாத்திரம் உள்ளது.  சமுகத்தில் வர்க்கங்கள் வகிக்கும் நிலைமை, வாழ்க்கை முறை, ஆகியவற்றால்  வேறுபாடுகள் பல  ஏற்படுகின்றன. இதனால்  ஒன்றோடொன்று முரண்படும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, முதலாளிக்கு மேலும் மேலும் இலாபம் தேவை; , தொழிலாளிக்கு ஊதியம் உயர்வது முக்கியம்; இது போன்ற மாறுபட்ட வேட்கைகள் உள்ளதால் மோதல்கள் உருவாகின்றன.

“இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார்.

ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டவர்களாக மாறுகின்றனர். சில நேரங்களில் மறைவாகவும் சில நேரங்களில் பகிரங்கமாகவும், இடையறாத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதும் புரட்சிகரமாக மாற்றி புதிய அமைப்பினை உருவாக்குகிறது. ”பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவச் சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே தவிர வேறில்லை. ”

“இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவென்றால் வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் ஒட்டுமொத்தமாய் மேலும் மேலும் பெரும்பகை கொண்ட இரு முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் – முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் – பிளவுண்டு வருகிறது. “

வரலாற்று மாற்றங்கள், வளர்ச்சி பற்றிய மார்க்சின் இந்த கண்டுபிடிப்புகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் உழைக்கும் மக்களுக்கு விடுதலைக்கான பாதையை காட்டுகிறது. அடித்தட்டு பாட்டாளி மக்கள் உன்னதமான வாழ்க்கை வாழ்வதற்கான சோசலிச சமுகத்தை அமைத்திட மார்க்சியம் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது.

மார்க்சின் பொருளாதாரப் போதனை

வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வது – இதுதான் மார்க்சின் பொருளாதாரப் போதனையின் உள்ளடக்கம்.

மதிப்பு

பண்டம் என்பது, முதன் முதலாக மனிதத் தேவையை நிறைவு செய்யும் ஒரு பொருளாகும். இரண்டாவதாக, அது இன்னொரு பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளத்தக்க பொருளுமாகும். ஒரு பொருளின் பயனுடைமை அதை பயன் மதிப்பு கொண்டதாக ஆக்குகிறது.

பொருட்கள் ஒவ்வொன்றும் வேறு வேறானவையும் ஒன்றுக்கொன்று ஒப்பிட முடியாதவைகளாகவும் இருக்கின்றன. அதாவது பயன்மதிப்புவெவ்வேறு கொண்டவை. பரிமாற்ற மதிப்பு என்பது எல்லா வகையான பயன் மதிப்புகளை, முற்றிலும் வேறுபட்ட  பயன் மதிப்புகளைக் கூட  ஒன்றுடன் ஒன்று சமப்படுத்துகிறது. இதனை அன்றாட அனுபவம் நமக்குக் காட்டுகிறது.

ஒன்றோடொன்று எப்போதும் சமப்படுத்தப்பட்டு வரும் இந்தப் பொருட்களுக்குப் பொதுவாயுள்ள அம்சம் எது? அவற்றின் பொது அம்சம் என்னவென்றால் அவை எல்லாம் உழைப்பினால் உருவான உற்பத்திப் பொருட்களாக இருப்பதுதான்.

குறிப்பிட்ட பயன் மதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்குச் சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டுதான், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான், அம்மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

 உபரி மதிப்பு

பண்ட உற்பத்தி வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பணம் மூலதனமாக மாறுகிறது. பண்டப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் பின்வருமாறு: C (பண்டம்)- M (பணம்)- C (பண்டம்); அதாவது ஒரு பண்டத்தை வாங்குவதற்காக மற்றொரு பண்டத்தை விற்பது என்பதுதான். இதற்கு மாறாக, மூலதனத்தின் பொதுச் சூத்திரம் M – C – M ; அதாவது (இலாபத்துக்கு) விற்பதற்காகவே வாங்குவது என்பதாகும்.

புழக்கத்திற்குக் கொண்டுவரும் பணத்தின் ஆரம்ப மதிப்பில் ஏற்படுகிற அதிகரிப்பை மார்க்ஸ் உபரி மதிப்பு என்று அழைத்தார்.

பண்டப் புழக்கத்திலிருந்து உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில், பண்டப் புழக்கம் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் மதிப்புகளின் பரிமாற்றத்தைத் தான் கண்டிருக்கிறது.

விலையைக் கூட்டிவிடுவதிலிருந்தும் உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனென்றால்  வாங்குபவர்கள், விற்பவர்களுடைய பரஸ்பர நஷ்டங்களும் இலாபங்களும் ஒன்றையொன்று சமமாக்கிச் சரி செய்துவிடும்.

“மதிப்பைத் தோற்றுவிக்கும் ஆதாரமாய் அமையும் சிறப்பு இயல்புடைய பயன் மதிப்புள்ள ஒரு பண்டத்தைச் சந்தையில்தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” அப்படிப்பட்ட பண்டம் ஒன்று உண்டு. அது தான் மனிதனின் உழைப்புச் சக்தி. உழைப்பு மதிப்பைப் படைக்கிறது.

பணத்தின் சொந்தக்காரன் உழைப்புச் சக்தியை அதன் மதிப்புப்படி வாங்கிக் கொள்கிறான், மற்ற ஒவ்வொரு பண்டத்தின் மதிப்புப் போலவே இந்த மதிப்பும் இதன் உற்பத்திக்கு வேண்டிய, சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது (அதாவது, அது அந்தத் தொழிலாளியும் அவனது குடும்பமும் பிழைத்திருப்பதற்கு வேண்டிய செலவு).

உழைப்புச் சக்தியை வாங்கிய பணச் சொந்தக்காரருக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுண்டு: அதாவது, அந்த உழைப்புச் சக்தியை நாள் முழுவதும் பன்னிரண்டு மணி நேரம் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். வேலை வாங்க அவருக்கு உரிமையுண்டு. இருந்தாலும், ஆறு மணி நேரத்தில் (“அவசியமான” உழைப்பு நேரம்) தொழிலாளி தனது பிழைப்புச் செலவைச் சரிக்கட்டுமளவுக்கு உற்பத்திப் பொருளைச் செய்கிறார். அடுத்த ஆறு மணி நேரத்தில் (“உபரி” உழைப்பு நேரம்) “உபரி” உற்பத்திப் பொருளை அல்லது உபரி மதிப்பைச் செய்கிறார். இதற்கு முதலாளி அந்தத் தொழிலாளிக்குப் பணம் கொடுப்பதில்லை, எனவே உற்பத்தியின் இயக்கப் போக்கிலிருந்து பார்க்கையில் மூலதனத்தில் காணக்கூடிய இரண்டு பகுதிகளை வேறுபடுத்துவது அவசியமாகும்;

(இயந்திரங்கள், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் முதலிய) உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவாகிற நிலையான மூலதனம்; இதன் மதிப்பு கொஞ்சமேனும் மாறுபடாமல் (ஒரே மொத்தமாகவோ பகுதியாகவோ) தயாரான உற்பத்திப் பொருளின் பால் மாற்றப்படுகிறது; அடுத்தது, மாறுபடும் மூலதனம்: இது உழைப்புச் சக்திக்காகச் செலவழிக்கப்படுகிறது. இந்த மூலதனத்தின் மதிப்பு ஒரு நிலையாக இருப்பதில்லை; உழைப்பின் இயக்கப் போக்கில் அது உபரி மதிப்பைப் படைத்த வண்ணம் வளர்கிறது.

மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகள் உள்ளன.  முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவிய வேண்டும். அதே சமயம் பண்டங்களின் உற்பத்தி ஒப்பீட்டு அளவில் முன்னேறியிருக்க வேண்டும். (உற்பத்தி முறையில் வளர்ச்சி)

இரண்டாவதாக, இரண்டு அர்த்தங்களில் “சுதந்திரமான” உழைப்பாளி இருக்க வேண்டும். அதாவது, தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், நிலத்திலிருந்தும், பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும். யாருடனும்,எதனோடும் இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாதவராக  “பாட்டாளி” இருக்க வேண்டும். இரண்டு அடிப்படையான முறைகளின் மூலமாக உபரி மதிப்பை அதிகப்படுத்த முடியும்; வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பது.

சார்புநிலை உபரி மதிப்பின் உற்பத்தியைப் பகுத்தாராய்கையில் மார்க்ஸ், மூன்று வரலாற்றுக் கட்டங்களையும் பரிசீலிக்கிறார்.அவை: 1) சாதாரணக் கூட்டுறவு; 2) உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும்; 3) இயந்திரங்களும் பெருவீதத் தொழிலும்.

மிக மிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத்தின் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது; உபரி மதிப்பை முதலாளிசொந்தத் தேவைகளையோ, மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது.

உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறு படும் மூலதனத்துக்கு ஒரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில்) – இதில் மாறுபடும் மூலதனம் அதாவது உழைப்பாளிக்கு கொடுக்கப்படும் பங்கினை விட, நிலையான மூலதனத்தின் பங்கு அதிகமாக்கப்படுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானது. அது சோசலிசத்தை நோக்கிய மாறுதலுக்கான இயக்கப்போக்கிலும் உயர் முக்கியத்துவம் பெறுகிறது.

மூலதனத்தின் திரட்சியானது தொழிலாளர்களுக்குப் பதிலாய் இயந்திரங்களைக் கொண்டு வேலைகளை முடித்துக் கொள்ளும் போக்கை விரைவுபடுத்தி, ஒரு கோடியில் செல்வத்தையும் இன்னொரு கோடியில் வறுமையையும் உண்டாக்கி ” தயார் நிலையில் உள்ள தொழிலாளர்களின் படை” (வேலையில்லாப் பட்டாளம்) என ஒன்றைத் தோற்றுவிக்கிறது.

மேற்கண்ட நிலைமை, உற்பத்திச் சாதனங்களை வளர்த்தெடுக்கும் மூலதனத் திரட்சி மற்றும் கடன் ஆகியவை மூன்றும் – முதலாளித்துவ நாடுகளில் அவ்வப்போது ஏற்பட்ட மிகை உற்பத்தி நெருக்கடிகளின் காரண காரியங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

இந்த நெருக்கடிகள் முதலில் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு வந்தன; பின்பு, இதைவிட நீண்ட, குறிப்பாகச் சொல்ல முடியாத கால இடைவெளியில் நிகழ்ந்தன.

முதலாளித்துவத்தின் கீழ் ஏற்படுகிற மூலதனத் திரட்சி வேறு; புராதன மூலதனத் திரட்சி என்று சொல்லப்படுவது வேறு என்பதை இங்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். புராதன மூலதனத் திரட்சி என்று சொன்னால் உற்பத்திச் சாதனங்களிலிருந்து உழைப்பாளியைப் பலாத்காரமாகப் பிரித்துவிடுவது; நிலத்திலிருந்து விவசாயிகளைத் துரத்திவிடுவது; சமுதாயப் பொது நிலங்களைத் திருடிக் கொள்வது; காலனிகள், தேசியக் கடன்கள், காப்பு வரிகள் முதலான பல ஏற்பாடுகள் புராதன மூலதனத் திரட்சியின் முனைப்புக் கூறுகளாகும். “புராதன மூலதனத் திரட்சி” என்பது ஒரு கோடியில் “சுயேச்சையான ” பாட்டாளியைத் தோற்றுவித்து, மற்றொரு கோடியில் பணத்திற்கான சொந்தக்காரனை, முதலாளியை, தோற்றுவிக்கிறது.

“முதலாளித்துவ மூலதனத் திரட்சியின் வரலாற்று வழிப்பட்ட போக்கை” மார்க்ஸ் விவரிக்கிறார்: “நேரடியான உற்பத்தியாளர்களின் சொத்தைப் பறிமுதல் செய்யும் வேலை, ஈவிரக்கமற்ற படு மூர்க்கத்துடன், மிகமிக வெட்கக்கேடான, மிக மிக ஆபாசமான, மிக அற்பத்தனமான, மிகமிக இழிவான, அருவருக்கத்தக்க வெறியுணர்ச்சிகளால் தூண்டப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. ”

அதாவது சுயேட்சையான உழைப்பாளி, உழைப்பினடிப்படையில் ஒன்றிணைந்து அதுவரை உருவாக்கிவந்த தனிச் சொத்து முறை  அகற்றப்படுகிறது. (விவசாயி, கைத் தொழில் செய்வோர் சொந்தமாகக் கொண்டிருந்த தனிச் சொத்து நீக்கப்பட்டு) அந்த இடத்தினை முதலாளித்துவ தனிச்சொத்து கைப்பற்றிக்கொள்கிறது.

இந்த முதலாளித்துவத் தனிச்சொத்து, பிறருடைய, பெயரளவில் சுயேச்சையான, உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்பொழுது யாருடைய சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றால் தனக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியல்ல; பல தொழிலாளிகளைச் சுரண்டிக் கொண்டிருக்கிற முதலாளிதான்.

வறுமையும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் இழிநிலையும் சுரண்டலும் மலைபோல் வளர்ந்திருக்கின்றன. எனினும், இதனோடு கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எப்போதும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேயிருக்கும் வர்க்கமாகும்; மேலும் முதலாளித்துவ உற்பத்திப் போக்கு என்ற  ஏற்பாட்டாலேயே அந்த வர்க்கம் கட்டுப்பாடும் ஒற்றுமையையும் ஒழுங்கமைப்பையும் பெற்று வளர்கிறது. எந்த உற்பத்தி முறை மூலதனத்தின் ஏகபோகத்துடன் கூடவே முளைத்து, அதனுடனேயே, அதன் அடியிலேயே தழைத்துச் செழித்ததோ, அந்த உற்பத்தி முறைக்கு மூலதனத்தின் ஏகபோகமே விலங்காகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடப்பதும், உழைப்பு சமுதாயமயமாகுவதும் இறுதியில் ஒரு நிலையை எட்டும்போது அவற்றிற்கும் அவற்றின் முதலாளித்துவ மேலோட்டுக்கும் பொருத்தமற்றுப் போய்விடுகிறது. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனிச்சொத்துக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. உடைமை பறித்தோர் உடைமை நீக்கம் செய்யப்படுகிறார்கள்” (மூலதனம், தொகுதி 1)

மூலதனத்தின் இரண்டாம் தொகுதியில் மொத்த சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தியைப் பற்றி மார்க்ஸ் செய்யும் பகுப்பாய்வு மிகமிக உயர்ந்த அளவிலே புதுமையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.

இங்கேயும்கூட மார்க்ஸ் பொருளாதாரத்தின் ஏதோ ஒரு சிறு பகுதியை ஆராயாமல் அந்தப் பொருளாதாரம் முழுவதையுமே ஆராய்கிறார். சமுதாய உற்பத்தி முழுவதையும்: 1) உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி, 2) நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி என்று இரண்டு பெரும் பகுதிகளாக மார்க்ஸ் பிரிக்கிறார்.

மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு, இலாபத்தின் சராசரி விகிதம் அமையும் பிரச்சினையை மூலதனத்தின் மூன்றாம் தொகுதி தீர்த்து வைக்கிறது.

உபரி மதிப்பின் தோற்றத்தை மார்க்ஸ் முதலில் பகுத்தாராய்கிறார்; பிறகு அது இலாபமாகவும், வட்டியாகவும், நில வாடகையாகவும் பிரிவதைக் கவனிக்கப் புகுகிறார், இலாபம் என்பது உபரி மதிப்புக்கும், ஒரு தொழில் நிலையத்தில் போடப்பட்ட மொத்த மூலதனத்திற்கும் இடையேயுள்ள விகிதமேயாகும்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பொருட்களுடைய மதிப்புகளின் மொத்தத் தொகை பொருட்களுடைய விலைகளின் மொத்தத் தொகையோடு ஒத்திருக்கிறது; ஆனால், போட்டியின் காரணமாக, தனித்தனி தொழில் நிலையங்களிலும் தனித்தனி உற்பத்திக் கிளைகளிலும் அவற்றின் மதிப்புகளுக்குச் சமமாகப் பொருட்கள் விற்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அவற்றின் உற்பத்தி விலைகளுக்குச் சமமாகத்தான் விற்கப்படுகின்றன. இந்த உற்பத்தி விலை என்பது செலவழிக்கப்பட்ட மூலதனமும் சராசரி இலாபமும் சேர்ந்த கூட்டுத் தொகைக்குச் சமமானதாகும்.

இவ்வாறு விலைகளுக்கும் மதிப்புகளுக்குமிடையே வேற்றுமையுள்ளது, இலாபங்கள் ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன என்ற மறுக்கமுடியாத, அனைவருக்கும் தெரிந்த, உண்மையை மார்க்ஸ் மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக விளக்கிவிடுகிறார்; சந்தையால் மட்டுமே ஒன்று இணைக்கப்பட்டிருக்கிற தனித்தனி பண்ட உற்பத்தியாளர்களைக் கொண்ட சமுதாயத்தில், இந்த விதியானது சராசரியான, சமுதாய அளவிலான, பெரும்பாலும் வழக்கில் உள்ள விதியாகத்தான் வெளிப்பட முடியும் என்பது மிகமிக இயல்பானதொரு விசயமாகும்; (இவையல்லாமல், மூலதனம் நூலின் மூன்றாம் தொகுதியில் நில வாடகையின் தத்துவமும் விளக்கப்படுகிறது.)

“கிராமப்புற உழைப்பாளிகள் பரவலான பகுதிகளுக்குச் சிதறடிக்கப்படுவது இந்த உழைப்பாளிகளின் எதிர்ப்புச் சக்தியை உடைத்தெறிகிறது; ஆனால் நகரத் தொழிலாளர்களிடையே உள்ள குவியும் தன்மையோ அவர்களுடைய எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. நகரத் தொழில்களைப் போலவே நவீனகால விவசாயத்திலும் ஈடுபடுத்தப்படுகிற உழைப்பின் அதிகரித்த உற்பத்தித் திறனும் அளவும் உழைப்புச் சக்தியை வீணடித்து, நோய்நொடிகள் மூலமாக நாசப்படுத்தி உருவாக்கப்படுகின்றன. மேலும், முதலாளித்துவ முறையிலான விவசாயத்தில் ஏற்படும் முன்னேற்றமெல்லாம் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்ல; விளைநிலங்களைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படுகிற முன்னேற்றமாகும்.

ஆகவே, எல்லாச் செல்வங்களுக்கும் அசல் ஊற்றுக் கண்ணாயுள்ள விளைநிலத்தையும் உழைப்பாளியையும் உறிஞ்சிவிடுவதின் மூலமாக மட்டுமே முதலாளித்துவ உற்பத்தியானது தொழில் நுட்பத்தை வளர்க்கவும், பல்வேறு இயக்கப் போக்குகளை ஒரு சமுதாய முழுமையில் இணைத்து வைக்கவும் செய்கிறது. ” (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி. )

சோசலிசம்

மேலே சொன்னதிலிருந்து வெளிப்படையாகத் தெரிவது இதுதான். முற்றிலும் தனிச்சிறப்பான இன்றைய சமுதாயத்தின் பொருளாதார இயக்க விதியிலிருந்தே மார்க்ஸ், முதலாளித்துவச் சமுதாயம் சோசலிச சமுதாயமாக மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகும் என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த மாற்றத்திற்கு, அறிவுத் துறையிலும் அறநெறித் துறையிலும் உந்து சக்தியாக விளங்குவதும், நேரடியாக இருந்து இம்மாற்றத்தை நிறைவேற்றும் செயல்பாட்டாளர்களாக விளங்குவதும், பாட்டாளி வர்க்கமே. இந்த வர்க்கத்துக்கு முதலாளித்துவமே பயிற்சியளிக்கிறது. முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளிகள் நடத்துகிற போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது; அந்த வடிவங்களின் உட்பொருள் வளமும் மேலும் மேலும் அதிகரிக்கிறது; தவிர்க்க முடியாத முறையிலே இந்தப் போராட்டம் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் போராட்டமாக உருவெடுக்கிறது.

உற்பத்தி சமுதாய மயமாக்கப்படுவதன் விளைவாக உற்பத்திச் சாதனங்கள் சமுதாயச் சொத்தாக மாற்றப்படுவது, “இதுவரை பறித்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்வது” நிகழ்ந்தே தீரும். உழைப்பின் உற்பத்தித் திறனில் மகத்தான அதிகரிப்பு, வேலை நேரத்தைக் குறைப்பது, தொடக்ககால, சிதறிய நிலையிலுள்ள, சிறு அளவிலான உற்பத்தி அழிந்ததில் எஞ்சிக்கிடக்கும் மிச்ச சொச்சங்களை நீக்கிவிட்டு, கூட்டு முறையில் அமைந்த, மேம்படுத்தப்பட்ட உழைப்பை நிலைநாட்டுவது -இவையெல்லாம் இந்த மாற்றத்தினால் ஏற்படும் நேரடி விளைவுகளாகும். விவசாயத்திற்கும் தொழிலுக்கும் இடையேயுள்ள ஒட்டுறவை முதலாளித்துவம் இறுதியில் வெட்டிவிடுகிறது.

தன்னியல்பாய் வளர்ந்த, கொடிய முதலாளித்துவ வடிவத்தில் – உற்பத்தி வேலை முறைக்குத் தொழிலாளி இருக்கிறானே தவிர, தொழிலாளிக்காக உற்பத்தி வேலை முறையில்லை என்ற முதலாளித்துவ வடிவத்தில் – அது ஊழலுக்கும் அடிமைத்தனத்துக்கும், கேடு விளைவிக்கும் அபாயகரமான தோற்றுவாயாகிவிடுகிறது

தொழிலாளி வர்க்கம், “தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்”, தானும் “தேசியத் தன்மை” பெறாமல் அது பலம் பெற முடிவதில்லை; பக்குவம் பெற முடியவில்லை; உருவாக முடியவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசிய ரீதியான தடைகளை உடைத்தெறிகிறது; தேசியத் தனி வாழ்வை அழிக்கிறது; தேசியப் பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை உருவாக்குகிறது. எனவே, வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில், “தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது” என்பது முழுக்க முழுக்க உண்மையாகும்; மேலும், குறைந்தபட்சம் நாகரிகமடைந்துள்ள நாடுகளிலாவது இருக்கும் தொழிலாளிகளின் “ஒன்றுபட்ட போராட்டம்”. . . “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் தேவையான முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும்” என்பதும் முழுக்க முழுக்க உண்மை.

அரசு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட அடக்குமுறைக் கருவியாகும். சமுதாய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமரசப்படுத்த முடியாத வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுண்டபோது, வெளிப் பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலே நின்று கொண்டு, ஓரளவுக்குச் சமுதாயத்திலிருந்து விலகியும் இருக்கிற “அதிகாரம்” இல்லாமல் சமுதாயம் வாழ முடியாத போது, அரசு தவிர்க்க முடியாதபடி தோன்றியது.

அரசு என்பது, வர்க்க முரண்பாடுகளுக்கு உள்ளிருந்தே உதித்து, “மிகவும் வலிமை வாய்ந்த, பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற வர்க்கத்தின் அரசாக ஆகிறது; அந்த வர்க்கம், அரசின் மூலமாக, அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாக ஆகிறது; இவ்வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கி வைத்து, சுரண்டிக் கொண்டேயிருக்க அது புதிய சாதனங்களைப் பெறுகிறது. இவ்வாறுதான் பண்டைக் கால அரசு, அனைத்திற்கும் மேலாக, அடிமைகளை ஒடுக்கி வைத்திருப்பதற்காக அமைந்த அடிமை உடைமையாளர்களின் அரசாக இருந்தது; அதே போலத்தான் நிலப்பிரபுத்துவ அரசு என்பதும் பண்ணையடிமைகளாகிய விவசாயிகளையும் கொத்தடிமைகளையும் ஒடுக்கி வைத்திருப்பதற்காக அமைந்த பிரபு வம்சத்தினரின் அரசாக இருந்தது; அதே போலத்தான், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசும் கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கென அமைந்த கருவியாகும்.

முதலாளித்துவ அரசின் மிகமிகச் சுதந்திரமான, மிகமிக முற்போக்கான வடிவம் என்றுள்ள ஜனநாயகக் குடியரசும் கூட இந்த உண்மையை எந்த விதத்திலும் அழித்துவிடவில்லை, ஆனால் வெறுமனே அதன் வடிவத்தை மாற்றுகின்றவர்க்கங்களை ஒழிப்பதில் கொண்டு போய்விடுவதன் மூலம் சோசலிசமானது அரசை ஒழிப்பதிலும் கொண்டுபோய் விடும்.

சுருக்கமாக இங்கு விவரிக்கப்பட்ட மார்க்சின் கருத்துகளை மேலும் ஆழமாக பயில வேண்டும். மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துகளை வாசித்து உள்வாங்கிட வேண்டும். அப்போதுதான் மார்க்சிய லெனினிய தத்துவத்தை பயன்படுத்தி இந்தியாவில் சுரண்டல் இல்லாத சோசலிச சமுதாயத்தை படைக்க இயலும்.

இந்திய சமூகச் சூழல், பொருளாதார உறவுகள், காலனியம் இவை பற்றியெல்லாம் மார்க்ஸ் ஏராளமாக எழுதியுள்ளார். அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியின் கொடூரமான சுரண்டல் பற்றியும் ஏராளமான விபரங்களைச் சேகரித்து அவர் பதிவு செய்துள்ளார். இந்திய மக்கள் காலனி ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் அதுவே இந்தியச் சிக்கல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்று, இந்திய விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தவர் காரல் மார்க்ஸ்.

மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிச் செல்ல பாட்டாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்கள் ஜனநாயக   புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, உறுதியேற்போம்.

மார்க்சியம் வெல்க. !!

மக்கள் ஜனநாயகப் புரட்சி ஓங்குக!!

(இக்குறிப்பு   லெனின் எழுதிய “காரல்மார்க்ஸ்” என்ற அறிமுக கட்டுரையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. )

Leave a Reply