கம்யூனிஸ்ட் கேப்டன் தோழர் லட்சுமி.

முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை –
நேதாஜியின் ராணுவத் தளபதி கேப்டன் லட்சுமி 10வது நினைவு தினம் இன்று

நாடு போற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி ரெஜி மெண்ட் படைப்பிரிவின் கேப்டனாக தீரத்துடன் போராடிய வீராங்கனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான கேப்டன் லட்சுமி செகால் நினைவு தினம் இன்று.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர்

1914ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சென்னையில் பிரபல வழக்கறிஞர் டாக்டர் எஸ்.சுவாமிநாதன் – பிரபல சமூகசேவகி அம்முகுட்டி சுவாமிநாதன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த லட்சுமி, தனது இளம் வயது முதலே சமூக சிந்தனையும், உழைக்கும் மக்களின் பால் பேரன்பும், இதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கொள்கை மீது ஈர்ப்பும் கொண்டவராக வளர்ந்தார். ரஷ்யப் புரட்சியும் அதைத் தொடர்ந்து மக்கள் எழுச்சியும் லட்சுமியை வெகுவாக ஈர்த்தன.

இந்தச் சிந்தனைகளோடு கல்வியில் கவனம் செலுத்திய லட்சுமி, 1938 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று மருத்துவரானார்.

இதைத்தொடர்ந்து மருத்துவச் சேவைக்காக 1940ம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற அவர், இந்திய விடுதலை இயக்கத்தின் மகத்தான போராளிகளில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அழைப்பின்பேரில், அவரது தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவுக்கு கேப்டனாக வீரம்செறிந்த போராட்டங்களை முன்னின்று நடத்திய கேப்டன் லட்சுமி, 1947ல் இதே படையின் வீரர் கலோனல் பிரேம்குமார் செகாலுடன் 1947ம் ஆண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு பிரேம்குமார் செகால்- லட்சுமி செகால் தம்பதியினர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தங்களது வாழ்வை துவக்கினர்.

1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்த லட்சுமி செகால் தனது இறுதிமூச்சுவரை செங்கொடியை உயர்த்திப்பிடித்த போராளி.

கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.

2002ம் ஆண்டில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்தவர்.

உடல் கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம். மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

Leave a Reply