பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (அகில இந்திய விவசாய சங்கத்துடன் இணைக்கப்பட்டது)

தேதி-05.12.2022

பத்திரிக்கைசெய்தி

புதுவை மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன இதில் முதன் முதலில் (பதிவு எண் பி 1) ஆரம்பிக்கப்பட்டது புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும். ஆரம்பித்ததில் இருந்து இலாபகரமாக இயங்கி வந்த இந்த சங்கம் தற்போது படிப்படியாக சரிவை நோக்கி உள்ளது. பாண்டெக்ஸ், பான் பேப், கான்பெட், அமுதசுரபி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்கோ ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் கைவரிசையால் நஷ்டத்தை தழுவி இன்று மூடு விழாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று பாண்லே நிர்வாக திறமையின்மையால் ஊழலில் திளைத்து கொண்டு இருக்கிறது. இதை புதுவையின் பால் உற்பத்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. புதுச்சேரியில் 103 கிராமப்புற பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இன்று இந்த சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வாராவாரம் பான்லேயின் மருத்துவ குழுவந்து கால்நடைகளுக்கு இலவசமாக சினை ஊசி போடுவதிலிருந்து வைத்தியமும் பார்க்கப்படும். அது படிப்படியாக இன்று நின்று விட்டது. பான்லேயின் கால்நடை தீவனப் பிரிவு தட்டாஞ்சாவடியில்கால்நடை மருத்துவர்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு இயங்கி வந்தது தற்பொழுது மூடுவிழா செய்யப்பட்டு விட்டது.

இதனால் உறுப்பினர்களுக்கு கால்நடை தீவனம் கிடைக்காமல் அதிக விலையை(ரூ1500) கொடுத்து வெளி மார்க்கெட்டில் வாங்கும் அவல நிலை. குறும்பா பேட் பால்பண்ணையின் பின்புறம் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்ட பசும் புல் மற்றும் விதைக்குருணை மானியத்தில் உள்பட வழங்கப்பட்டு வந்தது. அதையும் ஊற்றி மூடி விட்டார்கள். ஆரம்ப காலத்தில் கிராமபுற பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் பாலை ஒன்றியமே அதாவது தனது செலவில் வாகனத்தை அனுப்பி பாலை சேகரித்து பால்பண்ணைக்கு கொண்டு சென்றது. ஆனால் இன்று அனைத்து கிராமப்புற சங்கங்களும் அருகாமையில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு தனது செலவிலே எடுத்துச் சென்று கொடுத்து விடுகின்றன. இதற்கு பான்லே நிர்வாகம் சங்கங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு லிட்டருக்கு ஒரு பைசா என்று நிர்ணயித்து கொடுக்கிற மிக படுபாதக செயல் நடக்கிறது. இதன் மூலம் கிராமப்புற சங்கங்களை உறிஞ்சி பாண்லே கொழுக்கிறது.

புதுவை அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் வலுப்பெற கொடுத்த ஷேர் கேப்பிட்டலை பாண்லே வைத்துக் கொண்டு ஈவுத் தொகையையும் கொடுப்பதில்லை இப்படியான அரசு மானியத்தில் கறவை மாட்டுக் கடன் வழங்கி பால் உற்பத்தியினை பெருக்குவதற்கு பதிலாக அண்டை மாநிலங்களில் இருந்து ஒரு லிட்டர் பால் ரூபாய் 47 க்கு கொள்முதல் செய்து ரூபாய் 42 க்கு விற்பனை செய்கிறோம் என கூச்சம் இல்லாமல் அரசு சொல்கிறது.

உற்பத்தியை பெருக்காமல் வெளி மாநில பாலை கொள்முதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதன் மூலம் என்ன நடக்கிறது.

என மக்கள் முடிவுக்கு விட்டு விடுவோம். தமிழகத்தில் பால் விலை தற்பொழுது உயர்ந்திருக்கக் கூடிய நிலையில் புதுவையில் பால் விலையை உயர்த்த வேண்டும் என நமது முதலமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தால் சரியான பதில் இல்லை. உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் ஆர்ப்பாட்டம் என முடிவெடுக்கும் பட்சத்தில் சட்டசபையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தி லிட்டருக்கு கொள்முதல் விலையில் ரூபா மூன்றும் விற்பனை விலையில் ரூபாய் எட்டும் உயர்த்தலாம் என உத்தேசிக்கிறோம் என்கிறார். இந்த போக்கு சரியில்லை தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ளது பசும்புல் தீவனம் தேவையான அளவு கிடைக்கவில்லை. பராமரிப்பு செலவு அதிகமாகி கொண்டே போகிறது இதில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஒன்றிய நிர்வாக குழு தேர்தலை உடனே நடத்தவும், ஒன்றியத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

அந்த வகையில் எதிர்வரும் 07.12.2022 புதன்கிழமை காலை 10 மணிக்கு புதுவை அண்ணா சிலை பழைய பேருந்து நிலையம் அருகில் புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்களைக் கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை இந்த கூட்டு அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

சீ.பத்மநாபன்,தலைவர். 9442563510 இரகு. அன்புமணி ,செயலாளர் 9843233631

Leave a Reply