புதுச்சேரி விடுதலைப்  போராட்ட வீரர் தோழர் வ.சுப்பையா

வரதராஜிலு -ராஜபங்காரு தம்பதியரின் மகனாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கைலாச சுப்பையா என்பதாகும். இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர். தனது 14வது வயதில் இருந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொள்ள துவங்கினார். 1927ல் கடலூர் வந்த காந்தியை போய் பார்க்க தனது நண்பர்களோடு சைக்களில் புதுவை சென்றார் சுப்பையா அதன்பின் 16வது வயதில் சக காங்கிரஸ் தலைவர்களுடன் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு புதுவையில் இருந்து சென்றார்.  அவர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்தபொழுது மார்க்சிய சிந்தனையாளர் சிங்காரவேலர் எழுதிய நூல்களை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது ‘லெனின் வரலாறு’ போன்ற சிங்காரவேலரின் நூல்கள் சுப்பையா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதேபோன்று ரஷ்யப் புரட்சி போன்ற நூல்களும் அவர் மனதைக் கவர்ந்தன.   பாண்டிச்சேரியில் ‘பிரஞ்சிந்திய வாலிபர் சங்கம்’, ‘ராமகிருஷ்ண வாசகசாலை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி மாணவர்களையும், இளைஞர்களையும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக திரட்டி வந்தார்.

ஆரம்பகால அரசியல்வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார். 1934 பிப்ரவரி 17ந்தேதி அதே சுப்பையா காந்தியை அழைத்து வந்து புதுவையில் கூட்டம் நடத்தினார். இது அவர் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. “சுதந்திரம்” என்ற பத்திரிகை நடத்தி வந்தார். புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி இவர்.

கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கம்.

1933ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்ட தோழர் அமீர் ஹைதர்கான் முதலில் சென்னைக்கு வந்தார். மிகுந்த சிரமப்பட்டு பல இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மார்க்சியத்தை குறித்து எடுத்துக்கூறி கம்யூனிஸ்ட்டாக்கினார். அவர்களில் ஒருவர் பிரபல இளம் தேச பக்தர் பாஷ்யம் ஆவார். நள்ளிரவில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி தேசியக் கொடியை பறக்கவிட்டவர் அவர். அதற்காக கடுங்காவல் தண்டனை அனுபவித்தவரும் கூட.
இப்பொழுது அமீர் ஹைதர்கான் அவரிடம் தேசபக்தி மிக்க துணிச்சலான இளைஞர்கள் பற்றி கேட்டபொழுது அவர் பாண்டிச்சேரியில் உள்ள தன் நண்பர் வ.சுப்பையா பற்றி கூறியதும் அமீர் ஹைதர்கான் அவரை அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார்.

அமீர் ஹைதர்கான் கேட்டுக் கொண்டபடி தேச பக்தர் பாஷ்யம், சுப்பையாவை சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை ராயப்பேட்டை இந்திய ஊழியர் சங்க கட்டிடத்தில் அச்சமயம் அமீர் ஹைதர்கான் தங்கியிருந்தார். அங்கே சுப்பையா அவரை சந்தித்துப் பேசினார். அன்று முழுவதும் ஹைதர்கான் மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக திரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார்.

இது சுப்பையாவை மிகவும் ஈர்த்தது. மார்க்சியம் தான் மனிதகுலத்தை வாழ்விக்கும், உயர்த்தும் என்ற கருத்து சுப்பையாவின் மனதில் ஆழப்பதிந்தது. மார்க்சியத்தை மேலும் தெரிந்துகொண்டு தொழிலாளி வர்க்கத்தை திரட்டும் பணியில் உறுதியாக ஈடுபடுவதாக சுப்பையா ஹைதர்கானுக்கு உறுதியளித்தார்.
 
அமீர் ஹைதர்கானுடன் இருந்த இளம் கம்யூனிஸ்ட் நரசிம்மன் என்பவர் சுப்பையாவுக்கு ‘ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, ஜான்ரீடு எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ போன்ற நூல்களை கொடுத்தார். இவையும் சுப்பையாவை ஈர்த்தன.
 
மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட சுப்பையா 1934ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் ரகசியமாக கட்சிக்கிளையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். தென்னிந்தியாவில் முதலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை உருவாக்கப்பட்டது பாண்டிச்சேரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  அதன் பின்னர்தான் மலபாரிலும், சென்னையிலும், ஆந்திராவிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவாக்கப்பட்டன. பாண்டிச்சேரிக்கு வந்த சுப்பையா தொழிலாளர்களை திரட்டும் பணியில் இறங்கினார். 1935, 1936களில் புதுவையில் பிரெஞ்ச் முதலாளிகளால் நடத்தப்பட்ட பெரும்  பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும்  வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.

 

1936இல் எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகள் கோரி சவானா மில் ரோடியார் மில். கப்ளே மில் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் அமலோற்பவநாதன். ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன் சின்னையன், பெருமாள். வீராசாமி மதுரை, ஏழுமலை. குப்புசாமி, ராஜகோபால்   ஆகியோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் இந்தியாமட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தோழர் வ.சுப்பையா அவர்களே. அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6இல் பிரெஞ்சு – இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும்உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8  மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன் முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக் கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.

1954ல் புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்டன அப்போது அவரை நாடு கடத்தி வைத்திருந்தது பிரெஞ்ச் அரசாங்கம்.  1955ல் புதுவைக்கு வந்தார்  அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர். அதன்பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை எதிர்கட்சி தலைவர், கூட்டணி அமைச்சரவையில் 1969 முதல் 193 வரை விவசாயத்துறை மந்திரியாக என பதவி வகித்தார். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு என்கிற தலைப்பில் அவரே நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

தோழர் வ.சுப்பையா 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ந்தேதி மறைந்தார். அவருக்கு புதுவையில் ஆளுயுற சிலை வைக்கப்பட்டது. அவரது இல்லம் காட்சியகமாக அரசு மாற்றியது. மக்கள் தலைவர் என புகழப்படும் அவருக்கு அவரது நூற்றாண்டு விழா ஆண்டான 2011ல் அவரது உருவம் தாங்கிய தபால் தலை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது. இவரது மனைவி சர்ஸ்வதி அவரும் சுதந்திர போராட்ட காலத்தில் பெரிய போராட்டவாதியாக திகழ்ந்தார்.

 

Leave a Reply