மின்துறை தனியார் மயத்தை கைவிடும் வரை போராட்டம் மதசார்பற்ற கட்சிகள் அறிவிப்பு

மதச்சார்பற்ற கட்சி தலைவர்களின் ஆலோசணைக்கூட்டம் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் புதன்கிழமை (செப்-28) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான ஆர்.சிவா, காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவர் சுப்ரமணி, நிர்வாகி வைத்தியநாதன்,எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம், நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி தனராசு, மதிமுக மாநில தலைவர் கபிரியேல், சிபிஐ எம்எல் கட்சி தலைவர் பாலசுப்பரமணியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாமுகமது, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சி தலைவர் முகமது உமர்பாரூக் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு பிறகு கூட்டாக தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலம் அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் சமீபகாலமாக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடத்தில் மதத்தின்பேரால் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதை ஏற்றுகொள்ளமுடியாது. பிளவுவாத சக்திகளை புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும். மகாத்மா காந்தியை கொன்றவர்கள் காந்திஜெய்ந்தியை கொண்டாடுவார்களா? எனவே தான் அக்டோபர் 2ல் புதுச்சேரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெறும் மனிதசங்கிலி இயக்கம் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் நடைபெறுகிறது.புதுச்சேரி அண்ணாசாலை, காமாராஜர்சாலை ஆகிய முக்கிய சாலைகளில் இந்த இயக்கம் நடைபெறும்.
மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து
புதுச்சேரி அரசின் கட்டுபாட்டில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் வேலையை திட்டமிட்டு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு தீவிரம் காட்டி வருகிறது. புதுச்சேரி மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலையாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இம்முடிவை எதிர்த்தும், அரசு கட்டுபாட்டிலேயே மின்துறை நீடிக்க வலியுறுத்தி செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும்.
காவல்துறைக்கு கண்டனம்
இந்துமுன்னணி அறிவித்த (செப்-27) முழு அடைப்பின் போது புதுச்சேரியி பல்வேறு பகுதிகளில் வன்முறையை கட்டவிழ்த்து உள்ளனர். தமிழக அரசு பேருந்துகளை கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது. அன்றைய தினம் புதுச்சேரி அரசின் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை. பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை உறுதிபடுத்த வேண்டிய அரசே, போக்குவரத்தை தடுத்து இருப்பது கண்டனத்திற்குறியது. மேலும் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் முன்பே அராஜக வேலையை இந்துமுன்னணியினர் அரங்கேற்றி இருப்பது,காவல்துறை இதனை கைகட்டி வேடிக்கை பார்த்திருப்பது கண்டனத்திற்குறியது என்றார். இவ்வாறு கூறினார்கள்.

Leave a Reply