புதுச்சேரியின் ‘நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2025, ஏப்ரல் 26 -27 தேதிகளில் கொள்ளை போகும் நீராதாரத்தை பாதுகாக்க, தென்பெண்னை ஆற்றோர கிராமங்களில் நடை பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. நீராதாரத்திற்கு வரக்கூடிய ஆபத்தை முன்னுணர்ந்து, விவசாயிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக பிரச்சாரத்தை தொடர்ந்து, “நீர் எங்கள் உரிமை, பறிபோகும் எங்கள் வாழ்வாதாரம்” எனும் தலைப்பில் வருகிற, 14.05.2025 அன்று, பாகூரில் திறந்த வெளிக் கருத்தரங்கை நடத்தவுள்ளது.
நீராதாரத்திற்கு வந்திருக்கும் பேராபத்து
புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில், கடந்த 2025, பிப்ரவரி 16 அன்று, துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், புதுச்சேரி நகரத்திற்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகக் கூறி, பிரெஞ்சு வளர்ச்சி முகமையிடமிருந்து (French Development Agency) ரூ. 534 கோடி கடன் பெற்று நிறைவேற்ற இருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரினோம். இதே போன்ற திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமல்படுத்த முயற்சித்த போது, பாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. தற்போது பாகூர் மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் ‘ஒப்புதல்’ அளித்ததாக அமைச்சர் சொல்வது உண்மையல்ல.
மேலும் இத்திட்ட நடைமுறை அறிவியல் பூர்வமானது இல்லை என்பதோடு, இத்திட்டத்தை அதிகாரிகள், ஆட்சியாளர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். பெரிய அளவில் கமிஷன் தொகை கை மாறி இருக்கிறது. பாகூர் பகுதியும், புதுச்சேரி மாநிலமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய வரலாறு உண்டு. ஏரிகள், நீர்நிலைகள் ஆகியவற்றை பராமரித்த ‘குடிமராமத்து முறை’ வழிமுறைகளை பின்பற்றி வந்த சமூகம் இதுவாகும். புதுச்சேரி மாநிலத்திற்கான நீராதாரம் நிலத்தடி நீர் மட்டுமே. நிலத்தடி நீருக்கான ஆதாரங்கள் தென்பெண்ணை, சங்கராபரணி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட சிற்றாறுகளும் அதன் படுகைகளுமே ஆகும். இவை புதுச்சேரிக்கு மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த கடலூர், விழுப்புர மாவட்டங்களின் பகுதிகளும் இதை நம்பியுள்ளது. இந்த ஆற்றுப்படுகைகளின் நிலத்தடி நீர் அம்மாவட்ட விவசாயிகளுக்கும் சொந்தமானதாகும்.
புதுச்சேரி அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, உள்ளூர் சமூகங்களை ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. இது இயற்கை வளங்களை எளிதாக சூறையாடும் திட்டமேயாகும். எதிர்கால தலைமுறை பற்றி கவலைப்படாமல், குறுகிய சுயநலவாதிகளின் வணிக நோக்கத்திற்காக, செயல்படத் துடிக்கும் அதிகார வர்க்கத்திற்கு ஆட்சியாளர்கள் இரையாகக் கூடாது.
மேற்கண்ட திட்டத்திற்கு எவ்வளவு நிலத்தடி நீரை உறிஞ்சப் போகிறீர்கள்? 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal) அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தப் போகிறீர்களா? போன்ற கேள்விகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எழுப்பி உள்ளது. மேலும் துணை நிலை ஆளுநருக்கு அளித்திருக்கக்கூடிய அக்கடிதத்தில் முன் வைத்துள்ள கோரிக்கைகளில் சில…
- இத்திட்டத்தின் நிதிச் செயல்பாடுகள், பயனாளிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- இத்திட்டத்தின் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர், தற்போது முதல்வர் அறிவித்திருக்கும் 6 சாராய ஆலைகளுக்காகவா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது, அதற்கு உரிய விளக்கம் வேண்டும்.
- முழுமையான மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை தேவையான முன்னறிவிப்புடன் நடத்த வேண்டும்.
- பொதுப்பணித்துறையில் முழுமையான, ஆக்கபூர்வமான நீர் மேலாண்மை துறையை செயல்படுத்த வேண்டும். அவைகள் உள்ளூர் பஞ்சாயத்து, சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
- நீர்நிலைகளை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் உள்ளூர் சமூக அமைப்புகளை அனுமதிக்க வேண்டும். அவைகளே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நீர்நிலைகளை பாதுகாத்து, பராமரித்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை அதிகாரிகள் உணர வேண்டும்.
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொய்யான பதில் மனுக்கள் (False affidavit) தாக்கல் செய்து நிலத்தடி நீர் ஆணையத்தையும், உள்ளூர் மக்களையும் தவறான தகவல்கள் அளித்து தொடர்ந்து ஏமாற்றி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தின் நீராதாரத்திற்கு கேடு விளைவிக்கும் எனவே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இக்கடிதத்தை பற்றியோ, உள்ளூர் மக்களின் உணர்வுகளையோ புரிந்து கொள்ளாமல் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எத்தனிக்கிறார்கள். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் பகுதிக் குழு போராட்டக் களத்தில் இறங்கி உள்ளது. விவசாயிகளும், சமூக அறிவு ஜீவிகளும் கட்சியின் நிலைபாட்டிற்கும், போராட்ட அறிவிப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி நீராதாரங்களின் வரலாறு
புதுச்சேரிக்கு தென்பெண்ணை, சங்கராபரணி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட சிற்றாறுகளே நீராதாரங்களாகத் திகழ்கிறது. இவை தவிர நீரை தேக்கி வைக்கும் நீர்நிலைகளாக 84 ஏரிகள் உள்ளன. இதில் மிகப்பெரிய ஏரிகளாக ஊசுட்டேரியும், பாகூர் ஏரியும் இருக்கின்றன. புதுச்சேரி மாநிலத்தின் விவசாயத்தையும், குடிநீர் தேவைகளையும் இவைகளே பூர்த்தி செய்கின்றன. இந்த ஏரிகளே நிலத்தடி நீருக்கான ஆதாரமாகவும் திகழ்கிறது.
இந்த ஏரிகள் 12ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களாலும், விஜயநகர ஆட்சிக் காலத்திலும் வெட்டப்பட்டு பராமரிக்கப்பட்டன. அவைகளின் நீர்வரத்து வாய்க்கால்கள், ஏரிகளை தூர் வாருதல், கரைகளில் மரங்களை நடுவது, போன்ற அனைத்தையும், உள்ளூர் சமூகங்களே குடி மராமத்து முறையில் பராமரித்து வந்தது. நீர்வரத்து வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஏரிக்கரையோரங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு வழியில்லை. பிரஞ்சு ஆட்சியர் காலத்திலும் இத்தகைய நடைமுறைகள் தொடர்ந்தன.
1910 ஆம் ஆண்டு முதன்முதலாக பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் பாளையத்திலிருந்து, சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. முத்தரையர் பாளையத்தில் ‘ஆயி’ என்ற நாட்டியமங்கைக்கு சொந்தமான குளத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டதால் அந்த மங்கையின் பெயரால் புதுச்சேரி பாரதி பூங்காவில் ஒரு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த மண்டபமே புதுச்சேரி அரசின் இலச்சினையாகத் திகழ்கிறது.
1960 இல் தமிழ்நாடு அரசு, 88. 90 லட்சம் செலவில், சங்கராபரணி ஆற்றில் வீடூரில் அணையைக் கட்டியது. இதற்கு புதுவை அரசு ரூ 25. 31 லட்சம் அளித்தது. இந்த அணையிலிருந்து ஊசுட்டேரிக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் தண்ணீரை பத்துக்கண்ணு மதகுகளுடன் இணைக்கப்பட்டு ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளது.
1966இல் தென்பெண்ணை ஆற்றில் சொர்ணாவூர் அணை கட்டப்பட்டு, வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பாகூர் ஏரிக்கு வருகிறது. குடி மராமத்து முறையில் தண்ணீர் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும், கிராமத்து மக்கள் அனைவருக்குமான பொதுச் சொத்தாக இருந்தது.
சொத்து கைமாறிய அவலம்
இடையில் ஆட்சியாளர்களின் சுயநலத்தாலும், கொள்கைகளாலும் தனியாரின் வணிகப் பொருளாக தண்ணீர் மாறி இருக்கிறது. விவசாயக் கொள்கைகள் மாறியதால் நிலத்தடி நீரும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உறிஞ்சப்பட்டு வருகின்றது.
1954இல் புதுச்சேரி விடுதலை அடைந்த போது ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை 200. ஆட்சியாளர்களின் தவறான விவசாயக் கொள்கைகளாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், சட்ட விரோதமாகப் பெருகிப் போன ரசாயன தொழிற்சாலைகளின் எண்ணிக்கையாலும், 2000வது ஆண்டில் இதன் எண்ணிக்கை 8000ஆக அதிகரித்தது. தற்போது ஆழ்துளை கிணறுகளின் ஆழமும் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்திருக்கும் வாய்ப்புள்ளது.
காலநிலை மாற்றத்தால் மழையின் அளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் புதுச்சேரியின் சராசரி மழை அளவு, இந்தியாவின் சராசரி மழை அளவைவிட கூடுதலாகும். இந்தியாவின் சராசரி மழை 1200 மி.மீ. ஆக உள்ள போது, புதுச்சேரியின் சராசரி மழையளவு 1700 மி.மீ ஆகும். ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், நேர்த்தியான திட்டமிடலும், பராமரிப்பும் இல்லாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் மழை நீர் வீணாகிக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. இயற்கை எப்போதும் ஏமாற்றுவதில்லை. மனிதர்கள் தங்களுடைய சுயநலத்தால், எதிர்காலத் தலைமுறை குறித்து, கவலை இல்லாமல் இயற்கையைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனுடைய விளைவு, புதுச்சேரியில் 1956 இல் விவசாய நிலங்களின் பரப்பளவு 56000 ஹெக்டேர். 2000 இல் 48000 ஹெக்டேராகவும், 2016இல் 27,247 ஹெக்டேராகவும், 2022-இல் 18,000, தற்போது 10000 ஹெக்டேராகவும் குறைந்து விட்டது. இது அரசினுடைய புள்ளி விவரங்கள். இவ்வாறு குறைந்து போனதற்கு தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும், சட்ட விரோதமான ரசாயன தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுமே காரணமாகும். விவசாயத்திற்கு பயன்பட்ட நீரின் அளவுடன் பன்மடங்கு நிலத்தடி நீராக உறிஞ்சப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. புதுச்சேரியின் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதியில் கடல் நீர் உட்பகுந்து நிலத்தடி நீரிருடன் கலந்து உப்பு நீராக மாறியிருக்கிறது. பல கிராமங்களுக்கு தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் அவலம் தொடர்கிறது. பொதுச்சொத்து வியாபாரிகளின் சொத்தாக மாறத் தொடங்கியது. புதுச்சேரி தண்ணீருக்கு தன்னிறைவாக இருந்த நிலைபோய், தற்போது, ‘தண்ணிக்கு…?’ புகழ் பெற்றதான நிலை உருவாக யார் காரணம்?
இடையில் ஒரு வெளிச்சம்
1998 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் ஏரிகள் மறு சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனுடைய முக்கிய நிபந்தனையாக, உள்ளூர் சமூகத்தை திட்டத்தில் இணைப்பது, அதை தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டியது. அதன் விளைவாக 64 ஏரிகள் செப்பனிடப்பட்டன. ஏரிகள் சங்கங்கள் உருவாகின. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. உப்பு நீர் வடிந்தது. குறிப்பாக பாகூர் பகுதிகளில் விவசாயிகள் மத்தியில் இத்திட்டத்திற்கு ஆதரவு இருந்தது. அவர்களுக்கும் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்க அதிகார வர்க்கம் அனுமதிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், திட்டத்தை கைவிட்டது. நாங்களே திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்று, அதிகார வர்க்கம் அத்தனை நெறிமுறைகளையும், காற்றில் பறக்க விட்டு ஊழலில் திளைத்து மீண்டும் உப்பு நீர் புகுவதற்கு நிலத்தடி நீரை நாசம் செய்யத் தொடங்கியது. அதனுடைய உச்சகட்டம் தான் தற்போது நகரத்திற்கு 24 மணி நேரம் குடிநீர் தருகிறோம் என்று கூறிக்கொண்டு புதுச்சேரி மாநிலத்தை பாலைவனமாக்கத் துடிக்கிறார்கள். இப்பொழுது நகரத்திற்கு நாள்தோறும், மூன்று தவணையாக வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்தையும், வரக்கூடிய காலத்தில் கேள்விக்குறியாக்கி விடுவார்கள். இத்திட்டம் செயல்பட்டால் புதுச்சேரி நகரம் உள்பட அனைத்துப் பகுதிகளும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும். இப்பொழுதே பல பகுதிகளில் தண்ணீரை மக்கள் விலை கொடுத்து வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். நல்ல குடிநீரை இந்த சமூகத்திற்கு கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தங்களது கையாலாகத்தனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய மக்கள் விரோத திட்டங்களை எதிர்கொள்ள நீதிமன்றங்கள், அறிக்கைகள், கையெழுத்து இயக்கங்கள், பேரணிகள் அனைத்தும் நடத்தலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஆட்சியாளர்களின் கொடூர திட்டங்களைத் தடுக்க வேண்டுமானால், வலுவான மக்கள் இயக்கங்கள்தான் சரியான விடையாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் பகுதிக் குழு இந்த கொடியத் திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மக்களைத் திரட்டி செயலாற்றி வருகிறது. முதல் கட்டமாக இத்திட்டத்தின்படி ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படக்கூடிய தென்பெண்ணை ஆற்றில் 40, சங்கராபரணியில் 14, மலட்டாறு, குடுவையாறு, கிளிஞ்சலாறு பகுதிகளில் 30 ஆக 84 ஆழ்துளைக் கிணறுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கிணறுகளின் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் முழுமையான வணிக நோக்கங்களைக் கொண்டது.
தண்ணீர் மக்களின் வாழ்வாதாரம். பொதுச் சொத்து, வணிகப் பொருள் அல்ல. இத்திட்டம் ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் எதிரானது. கடுமையான விளைவுகளை உருவாக்கும். இத்திட்டத்தை தடுத்து நிறுத்த முதல் கட்டமாக, ஏப்ரல் 26 -27 ஆகிய நாட்களில், நடத்திய நடை பயணப் பிரச்சார இயக்கம், அதை தொடர்ந்து மே 14 ஆம் தேதி திறந்தவெளி கருத்தரங்கமும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், எதிர்காலத் தலைமுறையினர் மீது அக்கறையுடன் மக்கள் இயக்கங்களை நடத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரங்களைச் சீர்குலைத்து, சாராய ஆலைகளையும், ரெஸ்டோ பார்களையும் திறப்பதற்கு ஆட்சியாளர்கள் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த மாநிலம் தழுவிய இயக்கத்திற்கு, மக்களை அறைகூவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.
நிறைவாக எந்த விவசாயியும் விதை நெல்லை விற்க மாட்டான். சமூகத்தின் விதைநெல் என்பது நீராதாரங்களே. எச்சூழலையிலும் அதை இழக்க, அதை வணிகப் பொருளாக்க அனுமதிக்க கூடாது.
கட்டுரையாளர் சு. ராமசந்திரன்
மாநிலச்செயலாளர் சிபிஎம், புதுச்சேரி