சீத்தாராம் யெச்சூரி மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும் செயலாற்றலும் ஒருசேரப் பெற்றவர்!

30 Sitaram Yechury“இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி தில்லி மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி பேரிடியாக வந்துள்ளது. சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி  சக்திகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையான சவால் களை எதிர் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், ஆழ்ந்த  மார்க்சிய அறிவும்,  தத்துவத் தெளிவும், முனைப்பான செயலாற்றலும் ஒருசேரப்  பெற்றிருந்த தோழர் சீத்தா ராம் யெச்சூரியின் இழப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களோடு பழகி, பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற சீத்தாராம் யெச்சூரி, 2005-ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக பணியாற்றியவர். மாநி லங்களவை உரையில், நவ தாராளமயக் கொள்கை களின் சீரழிவையும், வகுப்புவாத சக்திகளால் ஏற் பட்டுள்ள பேராபத்து நிகழ்வுகளையும் நாட்டின்  கவ னத்துக்கு எடுத்துக் கூறியவர்.

மாணவப் பருவத்தில் தொடங்கி, இறுதி மூச்சு வரை இடைவிடாது பணியாற்றிய தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி, செவ் வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது”.

– சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்

அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடு மைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக் காக பாடுபட்டவர்.

இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீத்தாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழி லாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்”

– தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற போராளி

“வகுப்புவாத சக்திகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடிய போராளி ஒருவரை நாடு இழந்து விட்டது. 1996-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு உருவான போது, அதற்கான குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தைத் தயாரித்ததில் சீரிய பங்களிப்பு செய்தவர். 2004-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 60 மக்களவை இடங்களை வென்றபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு அவரது அழுத்தம் காரணமாக இருந்தது.

2015-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற தற்குப் பிறகு, பாஜக அரசின் வகுப்புவாத செயல் திட்டங்களை சமரசம் இல்லாமல் எதிர்த்துப் போராடி னார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிச தாக்குதலை எதிர்த்தவர்கள் எல்லாம் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்திலும் அச்சமின்றி மோடி அரசின் அடக்குமுறையைத் துணிச்சலாக எதிர்த்துப் பேசிய வர். இந்தியா கூட்டணி உருவாகப் பாடுபட்டவர். விடுதலைச் சிறுத்தைகளின் ‘வெல்லும் ஜனநாயகம்’-திருச்சி மாநாட்டில் பங்கேற்று, இலட்சக்கணக்கான இளைஞர்களை வகுப்புவாத அரசியலை எதிர்த்து இப்படித் திரட்டுவது மிகப்பெரிய சாதனை என எங்க ளைப் பாராட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு இடதுசாரிக் கட்சிதான், நாம் இணைந்து செயல்படு வோம் என்று எங்களை ஊக்கப்படுத்தினார்.

எனவே, தோழர் யெச்சூரியின் மறைவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும். அவருக்கு எமது நெஞ்சார்ந்த செவ்வணக்கங்களைச் செலுத்துகிறோம்”

-விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. 

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இழப்பு

“தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு, கடும் அதிர்ச்சி அடைகி றோம். இந்த நெருக்கடியான தருணத்தில் அவரது இறப்பு  ஜனநாயகம், கூட்டாட்சி கட்டமைப்பு மற்றும் கலாச்சார பன்மைத்துவம் ஆகியவற்றிற்காகப் போரா டும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், சிபிஎம் கட்சி தோழர்களுக்கும், எமது ஆழ்ந்த இரங்கல்கள்!” .

– சிபிஐ(எம்எல்) தமிழ்நாடு மாநில குழு
செயலாளர் ஆசைத்தம்பி

இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் அளப்பரிய பங்காற்றியவர்!

“தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பல்வேறு போராட் டங்களை நடத்தவும் பெரும் துணையாக இருந்த வர் சீத்தாராம் யெச்சூரி. காங்கிரஸ் தலைவர்களி டையே, குறிப்பாக தலைவர் ராகுல் காந்தியிடம் மிகுந்த நெருக்கமான தோழமையைக் கொண்டிருந்தவர். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் அளப்ப ரிய பங்காற்றியவர். அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமன்றி மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

– காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ

27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு துணை நின்ற தலைவர்!

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீத்தாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது.

27 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27 சதவிகித இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்”.

– பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ்

போராளித் தலைவருக்கு வீரவணக்கம்!

“சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தி னார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடி-அதன் காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டவர் சீத்தாராம் யெச்சூரி. அவரது அறிவார்ந்த ஆங்கிலக் கட்டுரைகளும், நூல்களும், தீக்கதிர் ஏட்டில் பொதுச்செயலாளர் மேசையிலிருந்து என்ற பகுதியில் வெளிவரும் கருத்துக்களும் இவரின் எழுத்தாற்றலுக்குச் சான்றாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்குச் சிந்தனை யாளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது தன்னலமற்ற இயக்கப் பணிக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரைப் பிரிந்த துயரில் உள்ள தோழர்களுக்கும் ஆறு தலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”

– மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்திய அரசியலின் ஜாம்பவான் தோழருக்கு பிரியாவிடை!

“இந்திய அரசியலின் ஜாம்பவான் சீத்தாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தி வருத்தமளிக் கிறது; மாணவர் ஆர்வலரிலிருந்து ஸ்டேட்ஸ்மேன் வரையிலான அவரது பயணத்தில், அரசியலில் தனது அழியாத முத்திரையை பதித்தார். அவரது குடும்பத்தி னருக்கும் எனது அனுதாபங்கள். பிரியாவிடை தோழர்”

– மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

பன்முகத் தன்மை கொண்ட தலைவர்

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியு மான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசி யல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாள ராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி அவர்களை இழந்துவாடும் உற வினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

– அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

பெரும் வேதனை

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொ துச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

– தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 

நெருக்கடியான நேரங்களில் செம்படையை வழிநடத்திய தீரர்!

தேசிய அரசியலில் எளிய மக்களின் பெரும் நம்பிக் கைக்குரிய இயக்கமாக திகழும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை நெருக்கடியான நேரத்தில் வழி நடத்திய தீரராக தோழர் சீத்தாராம் யெச்சூரி இருந்தார்.

2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு,  பிரதமராக மன்மோகன் சிங் பொ றுப்பேற்றபோது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை (CMP) வகுத்ததில் யெச்சூரியின் பங்களிப்பு மிக முக்கியமான தாக இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை அப் பொழுது நிறைவேற்றப்படுவதற்கு இவரது கருத்தியல்  அழுத்தம் மிக முக்கியமாக இருந்தது என்பதை நாடு நன்றி யோடு நினைவு கூறுகிறது.

பாசிச சக்திகள் அதிகார மிடுக்குடன் நாட்டை மிரட்டி வரும்  காலகட்டத்தில், அதை எதிர்த்து முன்களத் தலைவ ராக அவர் நின்றாடிய அரசியல் களம் அனலாக இருந்தது. பாசிசத்தை வீழ்த்திட செம்படையை ஜனநாயக வழியில் ஆற்றல் படுத்திய அவரது பணிகள் பாராட்டத்தக்கவை. கம் யூனிச இயக்கம் மேலும் வலுவாக நடைபோட வேண்டிய தருணத்தில், அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தோழர்களுக்கும், பொதுவுடமை உறவுகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை – ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்”.

– தலைவர் மு.தமிமுன் அன்சாரி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றவர். அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
– குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

சீத்தாராம் யெச்சூரி மறைவு வேதனை அளிக்கிறது. அவர் இடதுசாரி தலைவர்களில் முன்னணிஇடம் வகித்தார்.  அரசியல் அரங்கில் அனைவருடனும்சுமுக உறவை கடைப்பிடிக்கும் திறன் படைத்தவர். யெச்சூரி ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும்முத்திரை பதித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், இடதுசாரி கட்சி ஊழியர்களுடனும் உள்ளன.
– பிரதமர் நரேந்திர மோடி

சீத்தாராம் யெச்சூரி ஒரு நல்ல நண்பர்.  நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியா எனும் கருத்தாக்கத்தின் பாதுகாவலர். நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழக்கிறேன். இந்ததுயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
-மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

சீத்தாராம் யெச்சூரி மிகவும் அன்பான நண்பர். சுதந்திரமாகப் பேசிய அத்தகைய தலைவரை இந்தியா இப்போது இழந்து விட்டது. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே அவரது கருத்து. இன்று அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
– தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

நான் சீத்தாராம் யெச்சூரியை சந்திக்கும் பொழுதெல்லாம் அடுத்து என்ன செய்வது என்று மட்டுமே கேட்பார். சமகால அரசியலில் மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய புரிதல் யெச்சூரி போன்ற வெகு சிலருக்கே உள்ளது. ஆனால் அவரை நாம் இழந்துவிட்டோம். சீத்தாராம்யெச்சூரியாக மாறுவது அவ்வளவு எளிதல்ல.
-ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா

பல தசாப்தங்களாக நானும் யெச்சூரியும் இணக்க மாக செயல்பட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றாக வேலைசெய்தோம். பின்னர் யெச்சூரி சிபிஎம் பொதுச் செயலாளராகவும், நான் சிபிஐயின் பொதுச் செயலாளராகவும் ஆனதால், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த இணைந்து செயல்பட்டோம். சீத்தாராம் யெச்சூரிமறைவு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் இடதுசாரி இயக்கத்திற்கும் ஒரு பெரிய இழப்பு.-சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

சீத்தாராம் யெச்சூரியின் பங்களிப்பு கட்சியில் மட்டு
மல்ல, ஒட்டுமொத்த நாட்டின் அரசியலிலும் இருந்தது. அவரை அவரது கட்சி மட்டுமல்ல, முழு நாடும் இழந்துள்ளது. அவர் தனது சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தார். ஆனால் யாரையும் அவருக்கு
குறைத்து மதிப்பிடத் தெரியாது. ஒரு சிறந்த பேச்சாளர், ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் ஒரு அற்புதமான மனிதர். சீத்தாராம் யெச்சூரியை என்றும் மறக்க மாட்டோம்.
-காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

சீத்தாராம் யெச்சூரி மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல நண்பராகவும் இருந்தார். அவர் தனது முழுவாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார்.பாஜகவின் அரசியலும் சித்தாந்தங்களும் வேறு
பட்டிருக்கலாம். ஆனால் யெச்சூரி மனதில் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். இந்த இக்கட்டானநேரத்தில் அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரதுகுடும்பத்தினருக்கு தைரியம் அளிக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
– ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்

Leave a Reply