புதுவைத் தொழிலாளிக்குக் கோவைத் தொழிலாளியின் கடிதம்! – கவிஞர் தமிழ் ஒளி

Thamizholiபுதுவையை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆண்டுகொண்டிருந்த போது 1936 ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாலைத் தொழிலாளர்களும் இதரர்களும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் படியும் , உழைப்புக் கேற்ற ஊதியம் கேட்டும் போராடினர்.

ஜூலை 30 ஆம் நாள் போராட்டக்காரர்கள் மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் போலிஸ் படையை ஏவி தாக்குதல் தொடுத்தது .துப்பாக்கிச் சூடு நடத்தியது. 12 தொழிலாளர்கள் உயிர்ப் பலியாகினர். அதே புதுச்சேரியில் சிலர் தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் விளைக்க எட்டப்பர் ஆகியதும் வரலாறு .இது கண்டு கொதித்து எழுந்து கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதை .

ஆண்டு தோறும் இந்நாள் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது . 1949 ஆம் ஆண்டு ”முன்னணி” ஏட்டில் கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதை பிரசுரமானது . அன்றைய அரசியல் சூழலோடு இணைந்த இக்கவிதை வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறது .தொழிலாளி வர்க்க உணர்வு ஊட்டுகிறது.

தோழனே, 1936 ஜூலையில் –
கார் கடலும் வாயடங்க, காற்றும் விசை குறைய
ஊர் முழுவதும் உன்னுடைய உத்வேகப் போராட்டம்!
அன்று,
‘சங்காரம் செய்திடுவேன்’ என்றெழுந்த சர்க்காரை
சிங்கப் படைபோலே சீறி யெதிர்த்தடித்து
ரத்தப் புனல்சிந்தி நாளெல்லாம் போர்செய்தாய்
யுத்தக் கடைசியிலே உன்னுடைய வெற்றியொலி!
உனது தியாகத்தால்,
பெற்ற உரிமையின்று பேடிகளின் சூழ்ச்சியினால்
குற்றுயிராய்ப் போகும் கொடிய நிலைகண்டு
நெஞ்சு கொதித்து நிலைகுலைந்து சோகித்தாய்!
அஞ்சாத உள்ளம் அயர்வில் விழலாமோ?
நாங்கள்,
முப்பதுநாள் முப்பதுநாள் முப்பதுநாள் போர் தொடுத்தோம்!
அப்பன் இறந்தான்; அமுதனைய தாய் மடிந்தாள்!
கன்னத்தில் பாலூறும் தேனூறும் கைக்குழந்தை
தன்னைக் கொலை செய்தார் தாயின் விழி முன்னே!

அன்றைக்கு,
எங்கள் குடிசைகளில் எமன் கூத்து! சாக்காடு!
வெங்குருதி வெள்ளம்! மரண வெடியோசை!
சூழ்ந்த இருளில், தியாகச் சுடர் எடுத்தோம்!
சூழ்ந்த இருள் தன்னைச் சுட்டெரித்தோம் தியாகத்தால்!
சங்கம் அளித்திருந்த சாகாத ஒற்றுமையால்
அங்கத்தில் ஊற்றெடுத்த ஆற்றல் பெருக்கால்
குடிசைகளைக் கோட்டைகளாய்க் கொத்தளமாய் மாற்றி
ஒடித்தோம் பகையெலும்பை! உண்மைப் புகழ் பெற்றோம்!

எனினும்,
தோல்வியெனும் பள்ளத்தைத் தோண்டி வைத்தார், வஞ்சகர்க்கு
வால்பிடித்துப் போட்டி வளர்க்கின்ற பாதகர்கள்!

அதனால்
எண்ணற்ற துன்பங்கள் இன்னும் தொடர்ந்தனவே!
கண்ணீர் உலரவில்லை! காயங்கள் ஆறவில்லை!
ரத்தம் சொரிந்த உடல் இன்னும்நல மாகவில்லை!
முத்தம் பொழிந்து, முதுமையென்றால் வேண்டாத
கசப்பாய் வெறுக்கவைத்த காதல் மனைவி
தசைகிழித்த குண்டு தாக்குதலால் மண்சுவர்கள்
வாய்பிளந்து நின்ற வடுவின்னும் மாறவில்லை!
வாய்விட்டுச் சொல்லாத சோகவடிவம் இவை!

இத்தனையும்,
கண்டு மலைத்தோமா? கையலுத்துப் போனோமா?
பண்டுதொட்டுப் பாட்டாளி வர்க்கப் படையெதுவும்
தோல்விப் படுகுழியில் தூர்ந்தொழிந்து போனதுண்டோ?
கால் தடுக்கி நின்றதுண்டோ? காரியத்தில் தாழ்ந்ததுண்டோ?
குகைக்குள் அகப்பட்ட கோவை முதலாளி
தொகையாக எம்மைத் தொலைக்க ‘ஆள்குறைப்பு’
‘வேலைப்பளு’ வென்று வேட்டுக் கிளப்புகிறான்!
ஆலைக் கரும்பெனஎம் அங்கம் பிழிகின்றான்!

அவன் தலைக்கு மேல்,
வெடித்துவிட்ட பாறை விழுந்தருணம்! மற்றோர்
அடியெடுத்து வைக்குமுனம் ஆள்நிலைமை என்னாமோ?
புதுவை முதலாளி போக்கிவிட்ட தூதர்
எதுகண்டு போய்ச் சொல்ல இங்கு வருகின்றார்!
சாவோலை கொண்டு செல்ல தந்தி, தபால் உண்டு!
பாவோலை தீட்டுதற்குப் பத்திரிகை பக்கமுண்டு!
பின்னர் எதற்கந்தப் பேதையர்கள் இங்குற்றார்?
தின்னும் புலையெச்சில் சோற்றுக் கடன்தீர்க்கும்
நன்றியெண்ணி வந்தனரோ நாய்போன்ற தன்மையினால்?

நன்று நன்று தூதுவரே! நாமுரைத்தல் கேளுங்காண்;
யாருக்கு நீங்கள் பிரதிநிதி? அஃதன்றி
யாருக்கு நீங்கள் அமைத்திட்ட சங்கங்கள்?
போட்டியிடச் சங்கம் வைத்தால் பொல்லா எமதூதன்
போட்டியிடும் வழக்கம் பூதலத்தில் உண்டன்றோ!

இந்த சரித்திரம் தெரியாதா?
நீங்கள் படித்ததெல்லாம் சோற்று நிகண்டுகளும்
வாங்குகின்ற லஞ்சம் வளர்க்கும் சரித்திரமும்

அதுவுமன்றி,
தேசீயக் காங்கிரஸூம் சோஷலிச தீரர்களும்
பேசியதைக் கேட்டும் பெரிய ‘குபேர்’ துரையின்
‘செல்வாக்கை’க் கண்டும், சிரத்திற்கு மேல்தொங்கும்
கல்பாறை தன்னைக் கவனிக்க நேரமின்றி
ஆடைகுலைய அவசரமாய் ஓடிவந்தீர்!
‘பாடைகுலையாதோ? பாவி அவன் மாளானோ?’
என்ற அமங்கலச் சொல் எங்கும் ஒலிக்குங்கால்
நின்றுதான் வந்தீரா? நேர்வதையார் கண்டார்கள்?
வந்த வழிபார்த்துச் செல்லுங்காண்! வையத்தில்
எந்த மனிதர்க்கும் துன்பம்வரில் இப்படித்தான்!”

புதுவைப் பாட்டாளி வர்க்கமே!
உன்னுடைய கைகளிலே எஃகின் உரமுண்டு!
மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு!
சோஷலிசம் பேசிச் சுரண்டலுக்குக் கால்பிடிப்போர்
வேஷங் கிழித்தெறியும் வீரமுண்டு; வன்மையுண்டு!
அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக!
இன்றைக்கே போர் முரசம் எண்டிசையும் கேட்கட்டும்!

நாங்கள்,
இங்கு வருகின்ற எண்ணற்ற தாக்குதலை
சங்காரம் செய்வோம்! ‘ஜயங்கொண்டார்’
ஆகிடுவோம்!ஆகையால் நீ தளர்வுறாதே
முன்கை எடுத்திடுவாய்! முன்னேறித் தாக்கிடுவாய்!
நின் பெருமை வாழ்க! நிலைபெறுக சோஷலிசம்!

Leave a Reply