டூரிங்குக்கு மறுப்பு நூல்

மாமேதை ஏங்கெல்ஸ் எழுதிய உலக புகழ் பெற்ற ‘டூரிங்குக்கு மறுப்பு’ நூல் ஜூலை 7ந் தேதி 1878 அன்று வெளியிடப்பட்ட நாள் இன்று.

The fundamental guide to scientific socialism. -Lenin

மார்க்சியத் தத்துவம் பற்றிய ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தை இந்த நூலில் எங்கெல்ஸ் டூரிங்கின் கருத்துகளைத் தகர்த்ததோடு மட்டுமின்றி, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிக் கூறியுள்ளார்.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்திலும் அதற்குப் பின்பும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் மார்க்சியக் கல்வி வகுப்புகளில் மார்க்சியத் தத்துவத்தின் பாட நூலாக இந்நூல் பயிலப்பட்டு வந்துள்ளது.

இந்த நூலை அடியொற்றியே, பின்னாளில் லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்ற நூலை எழுதினார்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சிய உள்ளடக்கக் கூறுகளான தத்துவம், அரசியல்,  பொருளாதாரம், சோசலிசத்தை கடுமையாக விமர்சிக்கும் டூரிங்கின் எழுத்துகளால் ஜெர்மன் சமூக  ஜனநாயகக் கட்சியினர் கவரப்பட்டனர். இவருடைய குட்டி முதலாளித்துவக் கருத்துகளுக்கு எதிரான ஒரு கருத்துப் போரை நடத்தும் விதமாக மார்க்ஸ் யோசனையின்பேரில் தொடர்ச்சியாக எங்கெல்ஸ் எழுதிய விமர்சனங்களின் முழுத் தொகுப்புதான் ‘டூரிங்குக்கு மறுப்பு’.

முகவுரையில் இயக்கவியலின் தோற்றம் முதல் நவீனப் பொருள் முதல்வாதம் வரை விளக்கப்படுவதுடன், தவிர்க்க முடியாத முதலாளித்துவ உற்பத்தி முறையும் அதன் வீழ்ச்சியும் விவரிக்கப்படுகின்றன.

முதல் பகுதியில் டூரிங்கின் தத்துவக் கோட்பாடுகளை விமர்சிக்கும் எங்கெல்ஸ், சமத்துவம், சுதந்திரம் என்கிற கருத்துகள் வரலாற்றுரீதியாக எவ்வாறு வளர்ச்சி பெற்றுவந்துள்ளன என்றும் விளக்குகிறார்.

இரண்டாம் பகுதியில் பொருளாதார உற்பத்தி நிலைமைக்கு ஏற்றவாறே அரசியல் அதிகாரம் அமைகிறது என்பதை விரிவான ஆய்வுகளுடன் உறுதி செய்கிறார்.

மூன்றாம் பகுதியில் சோசலிச கட்டமைப்பு பற்றி விரிவாகப் பேசும் எங்கெல்ஸ், டூரிங்கின் பல்வேறு கருத்துகளை வலுவாக  மறுதலிப்பதுடன், அரசு, மனித சுதந்திரம், மதம், குடும்பம், கல்வி, பால் உறவு, காதல், விபசாரம் தொடர்பான அவருடைய கருத்துகளையும் விமர்சிக்கிறார்.

வர்க்கங்கள் இருப்பது நீதிக்கும் சமத்துவத்துக்கும் முரணாகும் என்று மனிதர்கள் உணர்வதாலோ அல்லது இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டுமென வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியம் ஆகாது. மாறாக, குறிப்பிட்ட பொருளாதார நிலைமைகள் எட்டப்பட்ட பிறகே சாத்தியம் ஆகிறது.
உற்பத்தி குன்றியிருப்பதே வர்க்கங்கள் நிலவக் காரணம். வர்க்கங்கள் குறையுற்பத்தியின் தவிர்க்கவியலா விளைவு. மொத்த உற்பத்திப் பொருள்களும் மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய அளவைக் காட்டிலும் மிகச்சொற்ப அளவே அதிகமாய் இருக்கும்வரை, இதனால் பெரும்பான்மை மக்கள் முழுநேரமும் உழைக்க வேண்டிய தேவை இருக்கும்வரை இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாய்ப் பிளவுபட்டிருக்கும். நவீன உற்பத்திச் சக்திகளின் முழு வளர்ச்சியால் வர்க்கப் பிரிவினைகள் துடைத்தெறியப்படும்.

உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்பட, வரலாற்று வழியிலான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட அளவு [முன்னேறி] இருப்பது முன் நிபந்தனை ஆகும்.
சோசலிச சமூக அமைப்பில் சரக்கு உற்பத்திக்கு முடிவு கட்டப்படும். உற்பத்திப் பொருள் உற்பத்தியாளரை அடிமைப்படுத்துவது ஒழியும். சமூக உற்பத்தியில் ஒழுங்கின்மை ஒழிக்கப்படும். தனிமனிதனின் வாழ்வுக்கான போராட்டம் மறையும். மனிதனை ஆட்சி செய்த வாழ்நிலைமைகள் மனிதனின் ஆதிக்கதுக்கு உட்படும். மனிதன் முதன்முதலாய் இயற்கையின் மெய்யான அதிபதி ஆவான். சமூக ஒழுங்கமைப்பை ஆட்சிபுரியும் அதிபதி ஆவான். வரலாற்றை ஆளுகை செய்த புறநிலைச் சக்திகள் நேரடியாய் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மனிதன் உணர்வுடன் தன் சொந்த வரலாற்றைத் தானே படைப்பான். சமுதாய நோக்கங்கள் எண்ணிய விளைவை எண்ணியாங்கு எய்தும். அவசியத்தின் ஆட்சி சுதந்திரத்தின் ஆட்சியாய் மலரும்.

மார்க்சிய இலக்கியத் தொகுப்பிலுள்ள தத்துவம், அரசியல் பொருள்முதல்வாதம், விஞ்ஞான சோஷலிசம் பற்றிய அடிப்படை விவரங்கள் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற இந்நூலில் ஒருங்கிணைந்த வடிவில் தொகுப்பாய் நமக்கு கிடைத்திருக்கிறது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

https://thamizhbooks.com/product/turinguku-maruppu/

டூரிங்குக்கு மறுப்பு – ஃபிரடெரிக் எங்கெல்ஸ் (தமிழில் – மு. சிவலிங்கம்);  பக். 552; ரூ. 540;  பாரதி புத்தகாலயம், சென்னை – 18; ✆ 044- 24332424.

Leave a Reply