என்றென்றும் வழிகாட்டும் பொன்மலை தியாகிகள் போராட்டம்

1946 ஆம் ஆண்டானது வீரஞ்செறிந்த போராட்டங்கள் பலவற்றை நாடு கண்ட ஆண்டாகும்.வங்காளத்தில் பல இலட்சக்கணக்கான விவசாயிகள்பங்கெடுத்த மாபெரும் தேபாகா இயக்கம், திருவாங்கூரின் புன்னப்புரா – வயலார் பகுதிகளில் மக்களின் எழுச்சி, தெலுங்கானாவில் விவசாய மக்களின் ஆயுதமேந்திய போராட்டம், மகாராஷ்டிராவின் ஒர்லி பகுதியில் ஆதிவாசிகளின் எழுச்சி இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் நடைபெற்ற கப்பற்படை எழுச்சி போன்ற அலை நாடு முழுவதிலும் எதிரொலித்தது. இந்த அலை தான் ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில்பிரதிபலித்தது. ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்த வாக்கெடுப்பு மே மாதம் 1946-ல் பெரும் எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் நடைபெற்றது.

இப்படிப்பட்ட அகில இந்திய ஒற்றுமை எழுச்சி முன்னெப்பொழுதும் ஏற்பட்டதில்லை. வேலை நிறுத்த வாக்கெடுப்பு துவங்கியநாளிலிருந்தே ஆங்கிலேய நிர்வாகம் பொங்கி வரும் தொழிலாளர் ஒற்றுமையைக் கண்டு அஞ்சியது. அதனால் தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் மார்க் முறையைஒழித்து கொண்டு வரப்பட்ட விசாரணை உரிமையின் மீது கை வைத்தது. விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யும் அதிகாரம் வழங்கும் பிரிவுகளை விசாரணை சட்டத்தில் சேர்த்தது மட்டுமல்ல, நடைமுறையிலும் தாக்குதலைத் தொடங்கியது. வேலை நிறுத்த வாக்கெடுப்பில் தீவிரப்பங்காற்றியதற்காக பொன்மலை பணிமனை பிட்டர் கொளந்தை வேலு, விருத்தாச்சலம் பயர்மேன் ராமசாமி, தஞ்சாவூர் ரயில்வே எழுத்தர் நாராயணசாமி அய்யர், பொன்மலை பெயிண்ட் ஷாப் தொழிலாளிகள் பாண்டியன், ஹமீத்கான், ஆழ்வார்சாமி, மாரிமுத்து, விழுப்புரம் லோகோ எழுத்தர் வேலாயுதம் பிள்ளை, செங்கல்பட்டு கிளைச் செயலாளர் கோவிந்த வாரியர்ஆகியோரை பணி நீக்கம் செய்தது.

வேலை நிறுத்தவாக்கெடுப்பு நடத்துவது என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் உரிமையாகும். அதுமட்டுமல்ல 9 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமையைப் பறிப்பது என்பது தொழிலாளர் மத்தியில் குமுறலை ஏற்படுத்தியது. நிர்வாகமானது ஜுலை 22 ஆம் தேதியன்று சில அற்ப காரணங்களை வைத்து பொன்மலை பெயிண்டிங் பிரிவின் ஏழு தொழிலாளர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்தது.இதை எதிர்த்து அப்பிரிவின் தொழிலாளர்கள் அனைவரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் துவங்கினர். இதன்தொடர்ச்சியாக காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை துவங்கினர். தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். தண்டனை வழங்கும்முன் சாட்சிகளை அழைத்து விசாரிக்க வேண்டும் போன்றகோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். IRF உடன் உடன்படிக்கை ஏற்பட்ட காலத்தில் ரயில்வே போர்டு, தென்னிந்திய இரயில்வே நிர்வாகத்தை SIRU சங்கத்தோடு தனியே பேசி இப்பிரச்சனையை தீர்க்கும்படிகூறியிருந்தது. அந்த அடிப்படையில் சங்கத்தின் தலைவர்எம். கல்யாணசுந்தரமும், பொதுச் செயலாளர் அனந்தன்நம்பியாரும் தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேலாளரான எப்.சி.ரெனால்ட்ஸ் என்பவரை சந்தித்துப் பேசினர். ஆனால் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

வேறு வழியின்றி ஜூலை 31 ஆம் தேதியன்று கூடிய சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு ஒரு கோரிக்கைப் பட்டியலை முன்வைத்து ரயில்வே நிர்வாகம் அதைத் தீர்த்து வைக்கவில்லையென்றால் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் பொது வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவு செய்தது. பெயிண்ட் பிரிவில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஏழு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்தல், போதுமான பஞ்சப்படி, மலிவுவிலைதானியக் கடைகளைத் தொடருதல், ஊதிய அமைப்பைமுற்றாக மாற்றியமைத்தல், ஆட்குறைப்பு செய்வதைநிறுத்துதல், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல், யுத்தக் காலத்தில் திணிக்கப்பட்ட வேலைப்பளுவைக்குறைத்தல், வார ஓய்வு, போதுமான விடுப்புகள், ஒழுங்குநடவடிக்கை எடுக்கும் முன்பு முறையான விசாரணை, குற்றம் சுமத்தப்பட்டவர் தன் தரப்பை எடுத்துக் கூற அனைத்து பாதுகாப்புகளும் தருவது என்பவையே அக்கோரிக்கைகளாகும்.

எனவே, பொன்மலை பணிமனைத் தொழிலாளர்களின் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை தென்னிந்திய ரயில்வே முழுவதும் ஒரு பொது வேலை நிறுத்தமாக விரிவுபடுத்துவது என்பதைத் தவிர சங்கத்திற்கு வேறு வழி இல்லாமல் போய் விட்டது. ஆகஸ்ட் 24 ஆம் தேதிமுதல் பொது வேலை நிறுத்தம் என்று சங்கம் பிரகடனம்செய்தது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும், தென்னிந்திய ரயில்வே முழுவதிலும் தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் இறங்கினர்.

தேச பக்த உணர்வும்,வர்க்க உணர்வும் கொண்ட அந்தத் தொழிலாளர்கள் ஆங்கிலேய ரயில்வே நிர்வாகத்துடன் ஒரு பெரும் மோதலுக்குத் தயாரானார்கள். இந்தப் போராட்டமானது ஆங்கிலேய ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டமே தவிர புதிதாக அமைந்துள்ள இடைக்கால காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்று சங்கத் தலைவர்கள் மாகாண காங்கிரஸ் அமைச்சரவைக்கு தெரிவித்தனர். ஆனால் அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர்களோ இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தங்களுக்கெதிரான தென்றும், அரசியல் நோக்கமுடையதென்றும் கருதிக் கொண்டு இந்தப் போராட்டத்தை உடைக்க சகலயுக்திகளையும் உருவாக்கத் தொடங்கினர். ஒடுக்குமுறையில் இறங்கினர்.

வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று துவங்கியது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட 430 ரயில் நிலையங்களில் 300 நிலையங்கள் இழுத்துமூடப்பட்டன. வாரக்கணக்கில் ஒரு வண்டி கூட நகரவில்லை.பொன்மலை பணிமனை முகப்பில் ஆயிரக்கணக்கானதொழிலாளிகளும், அவர்தம் குடும்பத்தினரும் அமைதியாகமறியல் செய்தனர்.

எதுவரினும் போராட்டத்தைக்கைவிடோம்என்ற உறுதி அவர்களிடம் மேலோங்கி நின்றது.வேலை நிறுத்தத்தை உடைத்திட ஆங்கிலேய ரயில்வே நிர்வாகம் ஆசைவார்த்தைகள் பல காட்டியது. 30 ரூபாய் வரை சம்பளம் வாங்குகிற தொழிலாளிகள் வேலைக்குத் திரும்பினால் அவர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு. 30 ரூபாய்க்கும் 622/3 சதவீத சம்பள உயர்வு. 100 ரூபாய்க்கும் 250 ரூபாய்க்குமிடையே சம்பளம் வாங்குபவர்களுக்கு 331/3 சதவீத உயர்வு 250 ரூபாய்க்கு மேலே சம்பளம் வாங்குபவர்களுக்கு 20 சதவீத உயர்வு என்று அறிவித்தது.

இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் தொழிலாளிகள் துச்சமாகக் கருதி வெறுப்புடன் நிராகரித்தனர். இது நிர்வாகத்தை மேலும் ஆத்திரமூட்டியது. எப்படியாவது ரயிலை ஓட்டிக் காண்பிக்கவேண்டுமென்ற வீம்புக்காக பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்து அழைத்து வந்து ரயில் பெட்டிகளில் உட்காரவைத்து ஓரிரு ரயிலை ஓட்டினர். அதுவும் கேலிக்கூத்தாக முடிந்தது. செப்டம்பர் 2 ஆம் தேதியன்று ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவை தில்லியில் பதவியேற்றது. ஆங்கிலேயரிடமிருந்து இந்திய மக்களுக்கு அதிகார மாற்றம் செய்யப்படுவதற்கான அடையாள நிகழ்ச்சியாகும் இது.

இந்தப் பதவியேற்பு முடிந்து சரியாக 71 மணி நேரத்திற்குப் பின் பொன்மலையில் கொடூரமான தாக்குதல் தொடங்கியது. செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு பொன்மலை சங்கத்திடலில் வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளிகளும் அவர்தம் குடும்பத்தினருமாக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து தலைவர்களின் உரைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பெரும் போலீஸ் படை சங்கத்திடலுக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர். தொழிலாளிகள் கலைந்து போக வேண்டுமென்று முன்னறிவிப்பு செய்யப்படவில்லை. கண்ணீர்ப்புகை வீசப்படவில்லை. எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு!. மலபார் சிறப்புக்காவல்படை துப்பாக்கிச்சூட்டை நடத்திக் கொண்டே மிருகத்தனமான தடியடி தாக்குதல்களையும் நடத்தியது. சங்கத்திடலின் நான்கு பக்கங்கள் பெரிய சுவராலும், முள்புதர் வேலிகளாலும் அடைக்கப்பட்ட நிலையில் வாலிபர்களைத் தவிரஇதரர்கள் தடியடியிலிருந்து தப்பிப்பது இயலாததாகிவிட்டது.

துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள், காயமடைந்தவர்களின் உடலிலிருந்து வழிந்த ரத்தம் மைதானத்தில் சிந்திக் கிடந்தது. சங்கம் தனது அரிய செயல் வீரர்கள் ஐவரை இந்த துப்பாக்கிச் சூட்டில் இழந்தது. 26 வயது தங்கவேலு, 28 வயது தியாகராசன், 26 வயது ராஜூ, 25 வயது ராமச்சந்திரன், 24 வயது கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து இளம் தோழர்கள் அதேஇடத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். சங்கக் கட்டிடத்திற்குள் நுழைந்த போலீஸ்படை, சங்கத்தின் பொதுச்செயலாளர் அனந்தன் நம்பியாரின் கைகால்களைக் கட்டி தடியால் அவரைத் தாக்கி குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது. துப்பாக்கி கூர்முனையினால் அவர் தலையில் இடித்து படுகாயப்படுத்தியது.

நம்பியார் இறந்துவிட்டதாகக் கருதி விட்டுச் சென்றது. 250க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். நம்பியாரின் வயது முதிர்ந்த தாயின் வலது கை அடித்து முறிக்கப்பட்டது. இவ்வளவு அட்டூழியங்களையும் புரிந்த ஆயுதப்படை, சங்கத்தின் சொத்துக்களையும் சூறையாடியது. நம்பியாரை முதல் குற்றவாளியாகக் கொண்டு 273 தொழிலாளிகள் மீது சதிவழக்கு போட்டது. துப்பாக்கிச் சூட்டைத்தொடர்ந்து பொன்மலை காலனியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தங்கள் குடும்பத்தலைவருக்கு என்னவாயிற்றோ, ஏதாயிற்றோ என்ற பதைபதைப்பில் தொழிலாளிகளின் குடும்பத்தினர் துடித்துக் கொண்டிருந்தனர்.

பொன்மலையில் நடைபெற்ற சம்பவங்களைக் குறித்து அறிந்ததும் அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனத்தின் அப்போதைய தலைவராக இருந்த. எஸ்.குருசாமி திருச்சிக்கு விரைந்து வந்தார். போலீஸ் தாக்குதல்களை நிறுத்தும்படியும், தொழிலாளிகளின் கோரிக்கைகளை ஏற்கும்படியும் அவர் நிர்வாகத்தை வற்புறுத்தினார். அரசாங்க அனுமதி பெற்று, திருச்சிமத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

தொழிலாளர்களின் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்திய பின்னருங்கூட அவர்களின் போராட்டஉணர்வு மழுங்கவில்லை என்பதையும், வேலைநிறுத்தம்தொடர்ந்து முழுவேகத்துடன் நடைபெறுவதையும் கண்ட ஆங்கிலேய ரயில்வே நிர்வாகம், எஸ்.குருசாமி மூலம் சில வாக்குறுதிகளை அளித்தது. தண்டனை வழங்கும் முன் விசாரிக்கப்பட வேண்டும்என்பது தொழிலாளிகளின் உரிமையாயிற்று.

இந்திய ரயில்வே தொழிலாளிகள் அனைவருக்கும் இது பயனளித்தது. வேலைநிறுத்த காலத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட முதல் ஊதியக்குழு, ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தது. அகவிலைப்படி என்பது கணிசமாக உயர்த்தப்பட்டது. ரயில்பாதை (ஓபன் லைன்) காங்கி ஊழியர், ஸ்டேஷன் மாஸ்டர், பாயின்ட்ஸ்மேன் போன்றஇதர பல பிரிவினருக்கும் 8 மணி நேர வேலை என்பது உறுதியாக்கப்பட்டது. இந்த வெற்றியானது தென்னகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் ரயில்வே தொழிலாளிகளின் கவுரவத்தையும், மதிப்பையும் வெகுவாக உயர்த்தியது.

273 பேர்களுக்கெதிராக போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.இந்த வெற்றியானது சாதாரண வெற்றியல்ல. பொன்மலை தியாகிகள் ஐவரும், அவர் தம் சகத் தோழர்களும், தலைவர்களும் சிந்திய ரத்தத்தில் கிடைத்த வெற்றியாகும். தியாகிகள் ஐவரின் தியாகம் ரயில்வே தொழிற்சங்க வரலாற்றில் என்றென்றும் மங்காது ஒளிவீசும்.

கட்டுரையாளர் தோழர் ஆர்.ராஜா

1 Comment

  • கல்யாணசுந்தரம் கல்யாணசுந்தரம் என்றொரு தலைவர் இருந்தாரே அவரைக் குறிக்காமல் தவிர்த்தது ஏனோ ?

Leave a Reply