சிரியா மீது கை வைக்காதே அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக சிபிஎம் -சிபிஐ போராட்டம்

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த முனையும் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக்குழுக்கள் வன்மையாக கண்டிக்கின்றன.

“பேரழிவு ஆயுதங்கள்” இருப்பதாகச் சொல்லி 2003 ஆம் ஆண்டு இராக் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னா பின்னப்படுத்தியது போன்ற முயற்சியை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே சிரிய அரசாங்கத்தை எதிர்த்து கலகம் செய்பவர்களுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்து வருகின்றனர். சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.

எனவே, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உத்தேசித்துள்ள சிரியா மீதான தாக்குதலை எதிர்த்து 05.09.2013 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறலைக் கண்டித்து குரலெழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் வேண்டுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் எதிர்ப்பு : சிரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு எதி ராக நாடு முழுவதும் எதிர்ப்பியக்கத்தில் ஈடுபடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

Leave a Reply