விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். CPIM

ஊடக அறிக்கை:

விஷவாயு தாக்கி பொதுமக்கள் மரணமடைந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்க!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்தல்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் மரணமடைந்துள்ளனர், இருவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சரியாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில்லை என்பது நீண்டகாலமாக மக்களின் கருத்தாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம் புதுச்சேரி முழுவதும் செயபடுத்தப்பட்டு வருகிறது. அதில் நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியேற வழிவகை செய்திருக்க வேண்டும். பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏற்படாத வண்ணம் முழுமையாக கண்கானித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாததன் விளைவாக அடைப்புகள் ஏற்பட்டு விஷவாயு வெளியேற வழில்லமல் வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறி 15 வயது சிறுமி செல்வராணி, 75 வயது மூதாட்டி செந்தாமரை அவரது மகள் காமாட்சி ஆகியோர் கழிவரையை பயன்படுத்தியபோது விஷவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முதல் துறை அமைச்சர் வரை அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியில்  ஈடுபட்டிருந்த 5 அண்டை மாநில தொழிலாளர்கள் பக்கவாட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழிந்ததையும்  அதற்கு முன்பாக முத்தியால்பேட்டை சிறுமியின் மரணம் புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்படுத்திய கலங்கத்தையும் எளிதாக கடந்துவிட முடியாது. புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆட்சியாளர்கள் பதவி வெறிபிடித்து ஊழலில் நாட்டம்கொண்டு கண்காணிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டிய அரசு துறைகளை செயல்படுத்த தவரியதும், இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளுமே இந்த மரணங்களுக்கு காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறது.

நடைபெறும் மரணங்களுக்கு இழீபீடு வழங்கிவிட்டு பிரச்சினைகளை சரி செய்யாமல் இருப்பது சரியான போக்காக இருக்க முடியாது. எனவே இறந்த குடும்பகளுக்கு தலா 50 லட்சம் வழங்கவேண்டும், அந்த பகுதி முழுவதும் மக்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை நடத்திட வேண்டும், இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய விசாரணைக்குழு அமைத்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடைகள் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

இவண்,
இரா.ராஜாங்கம்,
மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
புதுச்சேரி.

Leave a Reply