புதுச்சேரி கடற்கரை ஒழுங்குமுறை மண்டல திட்ட அறிவிக்கை 2019 மீனவர் நலன்களை பாதுக்காக்க அல்ல – சிபிஎம்

பெறுதல்.

உயர்திரு செயலர் அவர்கள்
புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம்
சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை
தலைமைச்செயலகம், புதுச்சேரி.

உயர்திரு இயக்குனர் அவர்கள்
புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை.
அண்ணா நகர் புதுச்சேரி.


பொருள் : சட்டவிரோத கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவு குறித்த மார்ச் 15 கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்திட கோருதல் தொடர்பாக.

வணக்கம். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 ( Coastal Regulation Zone, 2019) வெளியிடப்பட்டு 4 நான்கு ஆண்டுகள் கடந்தபின்பு தங்கள் துறையால் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு இதனை உறுதிப்படுத்த எதிர்வரும் 15.03.2023 கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தபோவதாக அறிவித்து உள்ளீர்கள்.

கடலரிப்பால் வாழ்விடம் இழப்பு, சாம்பல் – ரசாயனக் கழிவுகளால் மீன் வளக்குறைவு. நிலத்தடி நீர்பாதிப்பு, பொது சுகாதாரச் சீர்கேடு, சமுதாய மக்களிடையே உள் முரண்பாடு என பல இடர்களை புதுச்சேரி கடற்கரை மக்கள் சந்திக்கின்றனர். பெரும் தொழில் நிறுவனங்களின் வேட்டைக் காடாக புதுச்சேரி கடற்கரை மண்டலம் மாறியுள்ளதால் அந்நிலத்தில் இருந்து மக்கள் அந்நியப்படுவதும் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ள பவளப்பாறைகள், அலையாத்தி காடுகள், கழிமுகங்கள், மணல் குன்றுகள், பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடங்கள், மீனவர்கள் தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகக் கருதி இவ்விடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று பல்வேறு சட்டங்கள் இருக்கும்போது அவற்றைப் பாதுகாக்கப் புதுச்சேரி அரசும் தங்கள் துறையும் தொடர்ந்து தவறி உள்ளன.

கடற்கரை மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கி வந்த “1991 மற்றும் 2011 இன் CRZ அறிவிப்புகள் 38 முறை திருத்தப்பட்டன அதுவும் யாருக்காக என்றால் சுற்றுலா மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மட்டுமே கடற்கரையை சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக ஒருபோதும் இல்லை. இதே நோக்கதோடுதான் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019யும் வெளியிடப்பட்டது. அப்போதே எங்கள் கட்சி நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு இயக்கங்களையும் நடத்தியதோடு புதுச்சேரி அரசும் CRZ 2019தை ஏற்று கொள்ள கூடாது என்றும் கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் தங்கள் துறையின் சார்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள வரைபடம் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணைக்கு விரோதமாகவும் புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு விரோதமாக உள்ளது. குறிப்பாகக் கடற்கரையை சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வுரிமை மற்றும் கடற்கரை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் முதலீடு மற்றும் சுற்றுலா திட்டங்களை மையப்படுத்தியே வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே கடல் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச் சூழலையும் பாழ்படுவதும் புதுச்சேரி அரசும் தங்கள் துறையும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிப்பானை 2019 முழுவதுமாக ரத்து செய்வதோடு வரும் 15.03.2023 அன்று நடத்த உள்ளக் கருத்துக் கேட்புக் கூட்டத்தைத் தள்ளி வைத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
இரா.இராஜாங்கம் (மாநில செயலாளர்)

Leave a Reply