கேலிக்கூத்தான பேருந்து நிலைய திறப்பு  விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(மார்க்சிஸ்ட்)
 புதுச்சேரி மாநில அமைப்பு குழு.
 *பத்திரிக்கை செய்தி*
புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி பெயரில் செயல்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையம் பொலிவுறு திட்டத்தின் கீழ், ரூ 29.5 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்து விட்ட நிலையிலும்,புதிய பேருந்து நிலைய திறப்பு விழா பலமுறை தள்ளிப் போடப்பட்டு வந்தது.
தற்காலிகமாக செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் அன்றாடம் அல்லல் பட்டு வரும் மக்கள் குறித்த கவலை ஆட்சியாளர்களுக்கு இல்லை.
ராஜீவ் காந்தி பெயர்
ஒருவாறாக ஒரு சில நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 30 அன்று, ராஜீவ் காந்தி பொலிவுறு பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெறுமென அறிவிப்பு வெளிவந்தது. அழைப்பும் அச்சிடப்பட்டு, அதற்குரிய தயாரிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் திடீரென துணை நிலை ஆளுநர், “தனக்கு நேரமில்லை” என்றார். ராஜீவ் காந்தி பெயர் அவரது ஆர். எஸ். எஸ். அரசியலை உறுத்தி இருக்கிறது போலும். திறப்பு விழாவை தவிர்த்து இருக்கிறார். இது முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதலாகவும் சித்தரிக்கப்பட்டது. அச்சிடப்பட்ட அழைப்பிதழ் ராஜீவ் காந்தி  பெயர் ஆளுநரை தடுத்திருக்கிறது. அதன் வெளிப்பாடு திறப்பு விழா ஊடக விளம்பரங்களில் ராஜீவ் காந்தி பெயர் நீக்கப்பட்டது.
திறப்பு விழா கல்வெட்டுகளில் ராஜீவ் காந்தி பெயர் இல்லாமல் போனது. இருப்பினும் பேருந்து நிலையம் நுழைவு வாயில் வளைவில் மின்னொளியில் ராஜீவ்காந்தி ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.
திறப்பு விழா” கேலிக்கூத்து ”

ஒரு விதமாக மே இரண்டாம் தேதி திறப்பு விழா நடந்தது அழைப்பிதழில் பேருந்து நிலைய திறப்பாளர் துணைநிலை ஆளுநர் திருமிகு கைலாசநாதன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மாண்புமிகு முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், துணைநிலை ஆளுநர் மூவரும், மூன்று கத்தரிக்கோலுடன் திறப்பு விழா திறப்பு விழா மேடையில் காட்சியளித்தனர். முதல்வரும், சபாநாயகரும் ரிப்பனை வெட்டித் திறந்தார்கள். துணைநிலை ஆளுநர்……?.
மூன்று திறப்பாளர்கள், மூன்று கத்தரிக்கோல்கள்… அரசு விழாவில் புதிய ஏற்பாடுகள்… இவர்களின் கோமாளித்தனமான நடவடிக்கை கள் புரியாத புதிராக மக்களிடம் கேலிப் பொருளாக உள்ளது.
இதற்கிடையில் மூன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பேருந்து நிலையத்திற்கு, “நரேந்திர மோடி” பெயர் வைக்க வேண்டும் என்று போராட்டமும் அன்றைய நாளிலேயே அப்போதே நடந்து கொண்டிருக்கிறது. கோரிக்கை வைக்க  ஜனநாயக நாட்டில் இடம் உண்டு. ஆனால் இச்ச சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல் தனக்கென இடத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய மலிவு அரசியலையும் பார்க்க முடிந்தது. அரசு விழாக்களில் இச்செயலபாடுகள் மிகவும் கேவலமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதற்கிடையில் மாண்புமிகு முதல்வர் வேறொரு இடத்தில், புதிய பேருந்து நிலையம் கட்டுவோம். அதற்கு அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் வைப்போம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஊழல் விசாரணை வேண்டும் 
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பா.ஜ.க. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது. துணை நிலை ஆளுநரின் செயல் நடைமுறை மாநில மக்களுக்கு எச்சரிக்கை உணர்வை தந்துள்ளது. பாஜகவின் அப்பட்டமான அரசியலை முன்னெடுப்பதில் ஆளுநர் கைதேர்ந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவரது பதவியின் கண்ணியத்திற்கு இது அழகல்ல. பேருந்து நிலைய திறப்பு விழா தள்ளிப்போனதில் கட்டுமானப் பணிகளில் கோடிக்கணக்கில் நடந்த ஊழலும் ஒரு காரணமாகும். அண்மையில் நடந்த தலைமை பொறியாளர் கைது, ஜாமீன், சி.பி.ஐ. நடவடிக்கை ஆகியவற்றிற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. மேலும் பாஜக என் . ஆர்.காங்கிரஸ் ஆட்சியாளர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இந்நிகழ்வுகள் தக்க சான்றுகளாகும். புதுவை மாநிலத்தில் கொலை கொள்ளைகள் அன்றாட நிகழ்வுகளாகின்றன. சட்ட ,ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. நிர்வாக ஊழல்களின் உச்சகட்டம், துறைகளின் தலைமை பொறுப்பிலி ருப்பவர்கள் கைதாகி சிறைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடத் தயாராக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இச்செய்தியினை தங்கள் ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி
 இப்படிக்கு
 எஸ். ராமச்சந்திரன்
செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி
புதுச்சேரி

Leave a Reply