ஆதார் எண்

ஆதார் எண்ணை ஏன் வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது

ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக கட்சியின் சார்பில் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் என்பது தேர்தல் ஆணையத்தால் தயார் செய்யப்பட்டு வருடாவருடம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் ஆதார் பட்டியலை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் தயார் செய்கிறது. அடிப்படையில் இரண்டுமே மனிதர்கள் தேவைப்படும் இடத்தில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க உதவக்கூடும். வாக்காளர் அடையாள அட்டை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுவது, ஆனால் ஆதார் அடையாள எண் இந்தியாவில் 6 மாதங்களுக்கு மேல் வசிக்கும் எவரும் பெறக்கூடிய ஒன்று. வெளிநாட்டவரும் இந்தியாவில் 6 மாதங்களுக்கு மேல் தங்கினால் ஆதார் எண்ணை பெற்றுவிடலாம். எனவே ஆதார் குடியுரிமைக்கான சான்று இல்லை.

ஆதார் அடையாள எண்ணை வாக்களர் அடையாளத்துடன் இணைக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் எவ்வித விவாதமும், கலந்தாய்வும் இல்லாமல் அவசர அவசரமாக கடந்த வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திருத்ததின் படியே ஒருவரால் ஆதார் அடையாள எண்ணை கொடுக்க முடியாமல் போனால் அரசாங்கம் வழங்கியுள்ள பல்வேறு அடையாள ஆவணங்களை சமர்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, ஒருவரின் வாக்குரிமை பறிக்கப்படாது என்று தெளிவாக சட்டம் கூறுகிறது.

Screenshot of the tweet made by Election Commission of India clarifying that it is not mandatory to disclose one's Aadhaar number

அப்படியிருக்க, “ஆதார் எண்ணை கொடுக்கவில்லை என்றால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும்” என்று தேர்தல் துறை அலுவலர்கள் பொதுமக்களை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கண்க்கில் வெளிவந்த தகவலை உங்கள் பார்வைக்கு இங்கே வைக்கிறோம். இதன்படி படிவம் 6B-ல் ஆதார் எண்ணை பூர்த்தி செய்வது கட்டாயமல்ல, இதன் காரணமாக ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் துறையிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காகவே ஆதார் எண்ணை இணைக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் பட்டியல் சரியானது (அல்லது) பிழைகள் இல்லாதது என்ற கருத்தே இதற்கு அடித்தளமாக விளங்குகிறது. ஆதார் பட்டியலில் ஒருவர் தன்னை ஒருமுறைதான் பதிந்துக்கொள்ள முடியும், மறுமுறை வேறு தகவல்களை கொடுத்து பதிய முற்பட்டால் அவரது கைவிரல் ரேகைகளும், கண்விழியும் காட்டிக்கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஆதார் ஆணையம் நேரடியாக மக்களை தங்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை, மாறாக பல்வேறு இடைதரக முகவர்கள் மூலமே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களின் தகவல்களை பட்டியலில் சேர்க்கிறது. இவ்வாறு ஆதார் பட்டியலில் ஒரு நபரை பதிந்தால் ஒரு முகவருக்கு ரூ.50/- சன்மானமாக ஆதார் ஆணையம் வழங்குகிறது.
இவ்வாறு இயங்கும் சில இடைதரக நிறுவனங்கள் / குழுக்கள் 2016-2017 ஆம் ஆண்டில் பல்வேறு போலி அடையாளத்தையும், Ghost அடையாளத்தையும் இதில் பதிவேற்றியுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் இதுபோல் செய்த ஒரு குழு சிக்கியது தொடர்பான செய்திகள் ஊடகத்தில் வெளிவந்தன. (https://www.indiatoday.in/mail-today/story/aadhaar-card-fake-biometric-id-up-stf-uidai-1042016-2017-09-11 ).
தங்கள் லாபத்தை பெருக்கிக்கொள்ளவே சில குழுக்கள் போலி அடையாளங்களையும், Ghost ID-க்கைளையும் ஆதார் பட்டியலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இரண்டு நபர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒருவரின் வலது கை விரல்களையும், இடது கண்விழியையும், மற்றொருவரின் இடது கை விரல்களையும், வலது கண்விழியையும் பதிந்து, போலியான பெயர், முகவரி, ஆவண சரிபார்ப்பின்றி இவ்வுலகில் தோன்றாத ஒருவரின் அடையாளத்தை பதிவு செய்வதே Ghost ID. இந்த நபரின் அடையாள எண்ணை யாராவது தவறாக பயன்படுத்தினாலும் இந்த நபரை கண்டுபிடிக்க முடியாது, காரணம் இப்படி ஒரு நபர் இல்லவே இல்லை.
இது ஒருபுறம் இருக்க, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆதார் எண்ணை வாக்களர் எண்ணுடன் இணைத்து போலிகளை நீக்குகிறோம் என்ற முயற்சியில் பல தகுதியுள்ள சரியான நபர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆதார் பட்டியல் பலருடைய வாக்குரிமையை இல்லாமலாக்கியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றால வாக்குரிமையை பறிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்ககூடாது.
புதுச்சேரி மாநிலத்தின் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது வாக்களர்களின் கைபேசி எண் பாதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளதும், அதனை அவர்கள் பயன்படுத்தி பூத் வாரியாக வாட்சப் குழு அமைத்து வாக்களர்களை அதில் சேரும்படி குறுஞ்செய்தி அனுப்பியதும் தேர்தல் துறைக்கு தெரியும். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எவ்வாறு பா.ஜ.கவுக்கு வாக்களர்களின் கைபேசி எண் கிடைத்தது என்பது இன்னும் விடைதெரியாமலே உள்ளது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் சர்வர்களின் பாதுகாப்பு தொடர்ந்து உடைக்கப்பட்டு தகவல்கள் கசிவதும், திருடப்படுவதும் அரங்கேறிவரும் சூழலில், தேர்தல் துறை வாக்களர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது சரியல்ல. ஏற்கனவே ஆதார் பட்டியல் பல இடங்களில் இணையத்தில் கசிந்துள்ள போது, வாக்காளர் பட்டியில் ஆதார் எண் இருக்குமாயின், ஆதார் பட்டியலை தன்வசம் வைத்திருக்கும் எவரும் எளிமையாக வாக்களர் பட்டியலுடன் ஒப்பிட்டு ஒருவரின் முழு தகவல்களையும் எடுத்துவிடும் அபாயம் தோன்றுகிறது.
இந்தியாவில் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வராத சூழலில் தனிநபர் தகவல்களை பொதுமக்களின் கருத்துக்களை அறியாமலே ஆதார் ஆணையமும் தேர்தல் ஆணையமும் பங்கிட்டுக் கொள்வது ஜனநாயக போக்காகாது என்று நாங்கள் கருதுகிறோம். எனவே வாக்களர் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் முயற்சியை தீவிர ஆலோசனை, கலந்தாய்வு, பரந்த விவாதத்திற்கு பிறகே பரிசீலிக்க வேண்டும்.

Leave a Reply