பெண்களுக்கு வேலை நேர சலுகை அறிவிப்பு அரசியல் கபட நாடகம்.

பத்திரிகை அறிக்கை

புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமையில் இரண்டு மணி நேர பணி சலுகை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது கோரிக்கையை ஏற்று முதல்வர் தான் அனுப்பி உள்ள பெண்கள் வேலை நேர கோப்பில் கையெழுத்து இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனது முயற்சியில் பெண்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு உள்ளதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் துணைநிலை ஆளுநர். ஆனால் அது பெண் அடிமைத்தனத்தை மூடநம்பிக்கையை வளர்க்கும் RSS/BJP மதவெறி சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மேற்படி துணைநிலை ஆளுநரின் அறிவிப்பு சட்டபூர்வமானதா?
அரசு துறைகள் அனைத்திற்கும் பொருந்துமா? தனியார் துறைகளுக்கு விரிவுபடுத்த என்ன திட்டம் என்பதில் தெளிவில்லை.

மாதத்தில் மூன்று நாட்கள் 2 மணி நேர வேலை குறைப்பு பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன பலனை அளித்திடும் என்பது தெரியவில்லை.

12 மணி நேர வேலை சட்டத்தை துணைநிலை ஆளுநர் வேகவேகமாக ஆதரித்த போது, பெண்கள் மீதான அக்கறை எங்கே போனது?.

பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் 28.04.2023 தேதியிட்ட எம்.எஸ். நம்பர் 34 என்னுடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி அரசனையில் வழிபாடு மற்றும் பூஜை செய்வதற்காக வெள்ளிக்கிழமையில் காலை 8. 45 முதல் 10 .45 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் கல்வி, காவல், சுகாதாரத் துறைகளுக்கு பொருந்தாது என்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாமல் சுழற்சி முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்படவும் வழிவகை செய்கிறது.

இது ஆளுநர் கூற்றுப்படி வேலை நேர உழைப்பு அல்ல. அரசு நிர்வாகத்தில் நடைமுறையில் உள்ளதை வேலை குறைப்பாக பொதுவெளியில் குறிப்பிடுவது அரசியல் நோக்கம் கொண்ட செயலாகும்.

துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் பேட்டிகளில் வெள்ளிக்கிழமை வீட்டை சுத்தம் செய்வது, உள்ளிட்ட பணிக்காக என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அரசாணையில் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜைகளுக்காக என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து மத வழிபாட்டு உரிமை களை மதிக்கிறது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் மதிப்பளித்து தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது. இவைகள் எல்லாம் கவனத்தில் கொண்டதாக அரசின் உத்தரவு அமையவில்லை.

பெண்கள் குடும்பத்தில் பணியிடத்தில், சமூகத்தில் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறார்கள் .குழந்தை பேறு தொடங்கி குழந்தை பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு ஆகிய பணிச்சுமைகளோடு பொருள் ஈட்ட பணியிடங்களிலும் உழைக்க வேண்டி உள்ளது. ஏழைகளுக்கும், பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமையும் இல்லை. நாளும் கிழமையும் இல்லை.
இவ்வாறான குடும்பம் மற்றும் பணிச் சூழலில் பாரம்பரிய வழிபாடு மற்றும் பூஜைகளுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் இரண்டு மணி நேர முன் அனுமதி என்பது பெண்கள் நலன் சார்ந்ததாக அமையவில்லை இது உள்நோக்கம் கொண்ட அரசியல் செயலாகும்.

மாநில ஆளுநருக்கும், முதல்வருக்கும் பெண்கள் நலன், அவர்களின் ஆரோக்கியத்தில் உள்ளார்ந்த அக்கறை இருக்குமானால் ,பெண்களுக்கு வேலை நேரத்தை தினசரி 6 மணி நேரமாக குறைத்திட வேண்டும்.

தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் கடை மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து ஆலைகள் மற்றும் கடை நிறுவனங்களில் பெண்களுக்கு 6 மணி நேர வேலையை உறுதி செய்த வேண்டும்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலையிலான அரசு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்குவது போல புதுச்சேரியிலும் விடுமுறை வழங்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சட்ட உரிமைகளை செயல்படுத்த வேண்டும். மேலும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற பாலின சமத்துவம் ,பொது சுகாதாரம், அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதில் உரிய தலையில் செய்தது அதற்கு ஏதுவாக ரேஷன் கடைகளை திறப்பது, மதுபான கடைகளை படிப்படியாக குறைப்பது, மதுவிலக்கு செயல்படுத்துவது, போதைப் பழக்கத்தை ஒழித்திட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது .

ஆகவே மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசு ஆணையை ரத்து செய்து பெண்களுக்கு வேலை நேரத்தை 6 மணி நேரமாக அரசு மற்றும் தனியார் துறைகளில் செயல்படுத்த வேண்டும்.

இவைகளுக்காக அனைத்து உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்.
மேலும் மக்கள் ஒற்றுமையை சிதைக்கும், மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு மாநிலத்தில் இடம் அளிக்கக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுகிறது.

இப்படிக்கு
இரா. இராஜாங்கம்
மாநில செயலாளர்

Leave a Reply