சாதிவாரி கணக்கெடுப்பை நிராகரிப்பது பாஜகவின் நயவஞ்சக அரசியலே

2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை செய்வது இயலாது என செப்டம்பர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு ‘விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு’ என்பதையும் அரசு தெளிவு படுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நட வடிக்கையின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பரவலாக எழுந்துள்ள கோரிக்கையை நிராகரித்திட ஒன்றிய அரசு முன் வைத்துள்ள காரணங்கள் ஆதாரமற்றவையாகவும், அற்பமானவையாகவும் உள்ளன. உண்மையில், இந்துத்துவா வகுப்புவாத அரசியலின் உண்மையான இயல்பை சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் அம்ப லப்படுத்துவதை சங் பரிவாரத்தினர் விரும்பவில்லை என்பதே இத்தகைய கணக்கெடுப்பை ஒன்றிய அரசு ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கான காரணமாகும்.

பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த விவரங்களை சேகரிப்பது என்பது ‘நிர்வாக ரீதியாக கடினமானதும், சிக்கலானதும் ஆகும்’; ‘சேகரிக்கப்படும் புள்ளிவிவ ரங்களின் முழுமையான நிலை மற்றும் பிழையின்மை’ குறித்து எந்தவொரு உத்தரவாதமும் இல்லை; மேலும், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்க ளுக்கான தகவலுக்கான ஆதாரமாக’ இந்த புள்ளிவிவ ரங்களை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த இயலாது என ஒன்றிய அரசு தனது வாக்குமூலத்தில் குறிப்பிட் டுள்ளது. இத்தகைய வாதங்கள் உண்மையின் அடிப்ப டையிலானவை அல்ல என்பதை சாதிவாரி புள்ளிவிவ ரங்களை சேகரிக்க இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை கூர்ந்து கவனித்த எவரும் புரிந்து கொள்வர். போதுமான அரசியல் உறுதி இருந்தால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள இயலும். தேச விடுதலைக்கு முன்னர், 1881 முதல் 1941ஆம் ஆண்டுவரையிலான காலங்களில் ஒவ்வொரு பத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதி தொடர்பான விவரங்கள் சேரிக்கப்பட்டன. சொல்லப்போனால் 1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட விவரங்களையே இன்ன மும் நாம் சார்ந்திருக்கிறோம். ஏனெனில், அதன் பின்னர் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு களின்போது சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெற வில்லை என்பதே இதற்குக் காரணமாகும் (இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ஆம் ஆண்டு மேற்கொள் ளப்பட்ட கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்பட்ட சாதி குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு, வெளியிடப்பட வில்லை). பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் சதவிகிதத்தை 52% என இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவ ரங்களின் அடிப்படையிலேயே மண்டல் கமிஷன் மதிப்பீடு செய்தது. தங்களது சமூக அமைப்பு சார்ந்த உத்திகளை செழுமைப்படுத்த இந்த புள்ளிவிவரங்க ளையே பல முதலாளித்துவ கட்சிகள் பயன்படுத்து கின்றன.

இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அரசு

மோடி அரசு குறிப்பிடுவதைப் போல, தேச விடுதலைக்குப் பின்னரும் கூட சாதி தொடர்பான விவ ரங்களை சேகரிப்பது என்பது கைவிடப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 1968ஆம் ஆண்டில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, சாதி தொடர்பான விவரங்களை முழுமையாகவும், அறிவியல்பூர்வமா கவும் சேகரித்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவ ரங்களை ஏழை மக்களுக்கான தனது சமூக-பொரு ளாதார, நலஉதவித் திட்டங்களை வடிவமைக்கவும், இடஒதுக்கீடு எத்தகைய முறையில் செயல்படுத்துவது என்பதை முடிவு செய்யவும் இஎம்எஸ் அரசு பயன் படுத்தியது. அப்போதிலிருந்து பல அரசு முகமைகள் ஆய்வுகள் மூலம் சாதி தொடர்பான விவரங்களை அவ்வப்போது தொடர்ந்து சேகரித்து வருகின்றன. தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்), தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு மற்றும் விவசாயக் குடும்பங்களின் நிலை குறித்த மதிப்பீடு போன்றவை இதற்கான சில உதாரணங்க ளாகும். பல அரசுகள் தங்களது தலையீடுகளை வடிவ மைக்க இத்தகைய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துகின்றன.

1.2 விழுக்காட்டு பிழைகளே.

2011ஆம் ஆண்டில் அகில இந்திய அளவிலான ‘சமூக-பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு’ மேற்கொள்ளப்பட்டது. எனினும், இது பொதுவான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட வில்லை. 118 கோடி மக்களிடையே இந்த கணக்கெ டுப்பு மேற்கொள்ளப்பட்டது. புள்ளிவிவரங்கள் சேகரிக் கப்பட்டு, தொகுக்கப்பட்டன. கண்டறியப்பட்ட பெரும் பாலான பிழைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உத வியோடு சரிசெய்யப்பட்டன. இதில் 1,43,00,000 (ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சம்) பிழைகள் மட்டுமே இன்னமும் சரிசெய்யப்பட வேண்டியுள்ளன. மொத்தம் சேகரிக்கப்பட்ட விவரங்களில் இது வெறும் 1.2% மட்டுமே யாகும். எனினும், இந்த புள்ளிவிவரங்களை முதலில் காங்கிரஸ் அரசும், பின்னர் பாஜக அரசும் வெளியிட வில்லை. 2014ஆம் ஆண்டு வரை ஆட்சியதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு இந்த புள்ளிவிவரங்களை வெளியிடாமல் இருந்தது. 2014ஆம் ஆண்டில் ஆட்சி யதிகாரத்திற்கு வந்த பாஜக தலைமையிலான மோடி அரசு, சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு என்பது 5000 கோடி ரூபாய் செலவில் செய்து முடிக்கப் பட்டதாக அறிவித்து, புள்ளிவிவரங்களை வெளியிடாது குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தது. இவ்வாறாக, சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நல்ல துவக்கம் பெரும் வீண்செலவாக முடிந்தது.

சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் 98 சதவீதமானவை பிழைகள் ஏதுமில்லாதவையாக உள்ளன என இந்திய பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் 2016ஆம் ஆண்டு கிராமப்புற வளர்ச்சிக் கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்தார். தற்போது இந்த புள்ளிவிவரங்களை வெளியிடவும், சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் மறுக்கிற தனது நிலைபாட்டை நியாயப்படுத்திட இந்த புள்ளி விவரங்களை தரமற்றவை என மோடி அரசு முத்திரை குத்துகிறது. பிழையோடு உள்ள 2 சதவீத புள்ளிவிவ ரங்களும் கூட எந்தவொரு மக்கள்தொகை கணக்கெடுப் பிலும் காணப்படும் பிழைகளின் சதவிகிதத்தைவிட கூடுதலானவை அல்ல. இதுவரை கிடைத்துள்ள அனுப வங்களை பயன்படுத்தி, தொழில்நுட்ப ரீதியிலான குறைபாடுகளை சரிசெய்து, மக்கள்தொகை கணக்கெ டுப்பு பணியாளர்களுக்கு முறையான பயிற்சியை அளித்து, நவீன தகவல் தொழில்நுட்பங்களையும், பெரிய தரவு பகுப்பாய்வுகளையும் பயன்படுத்தி இத்த கைய சிறிய அளவிலான பிழைகளையும் கூட எதிர் காலத்தில் தவிர்த்திட இயலும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கையை நிராகரித்திட ஏற்றுக் கொள்ள இயலாத பொய்யான வாதத்தை மோடி அரசு முன்வைக்கிறது.

பாஜகவின் நயவஞ்சக அரசியல் நிலைபாடு

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக வேறு சில ஆட்சேபணைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒரே சாதி வெவ்வேறு மாநிலங்களில் வேறுவேறு பட்டியல்க ளில் வகைப்படுத்தப்பட்டிருப்பதால் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் குறித்த விவரங்களை சேகரிப்பது மிகவும் சிரமமானது என்பது இவர்கள் முன்வைக்கும் கார ணங்களில் ஒன்றாகும். மாநிலங்களின் பட்டியல்களுக் கும், ஒன்றிய அரசின் பட்டியல்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகளை வகைப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது. எந்தவொரு சாதியையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது என்பதில் தெளிவு இல்லை என்பன போன்ற காரணங்க ளும் முன்வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் தீர்க்க முடியாதவை அல்ல. வேறுபட்ட மதக்கோட்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்திருப்போர் இடையே நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளை வகைப் படுத்துவது, எந்தவொரு மதத்தையும் ஏற்றுக் கொள்ளா தவர்களை வகைப்படுத்துவது என்பன போன்ற பிரச்ச னைகள் பொதுவான மக்கள் தொகை கணக்கீட்டின் போதும் எழுகின்றன. மதம் சார்ந்த இதுபோன்ற தகவல் களை சேகரிக்கும்போது பிரச்சனைகள் இல்லை யென்றால், அதேபோன்று சாதிவாரி கணக்கீட்டிலும் எந்த பிரச்சனைகளும் இருக்காது. மதம் சார்ந்த தகவல் களை சேகரிப்பதை எதிர்க்காத பாஜக, சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பது அதனுடைய நயவஞ்சக மான அரசியல் நிலைபாட்டை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது.

தனது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் நிலை பாட்டிற்கு மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதர வான நிலைபாட்டை பாஜக எடுக்கும் என நாம் எதிர் பார்க்க இயலாது. சொல்லப்போனால், சாதிவாரி கணக் கெடுப்பை எப்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்த்து வந்திருக்கிறது. இது பல்வேறு தருணங்களில் பல ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களால் தெளிவாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. மனுநீதியைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்டோர் சமூகநீதிக்காக முன்னிற்பார்கள் என எதிர்பார்க்க இயலாது. சாதிய அமைப்பு பலவீனப் படுத்தப்படுவதை இவர்களால் சகித்துக் கொள்ள இயலாது. இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் இந்துக்கள் மதரீதியாக அணி திரட்டப்பட வேண்டுமெ னில், தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகளும், சாதி அடிப்படையிலான ஒடுக்கு முறைகளும் வெளியே தெரியாது மூடி மறைக்கப்பட வேண்டும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்டால், இந்துத்துவா கொள்கையின் மிக முக்கியமான சாதிய நடைமுறையின் அருவருப்பான தன்மையை அம்பலப்படுத்துவதோடு, வகுப்புவாத அரசியலின் அடிப்படையிலான ஒற்றுமையை அது பலவீனப்படுத்தி விடும். தேசத்தின் வளங்கள் நேர்மையற்ற முறையில் பங்கீடு செய்யப்படுவது குறித்து இந்துக்களாக இருப்ப வர்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதியினர் கேள்வி எழுப்பத் துவங்கினால், அது வகுப்புவாத இந்துத்துவா திட்டத்திற்கு சேதத்தை ஏற்படுத்திவிடும். எனவேதான், சாதிவாரி கணக்கெ டுப்பு என்ற கருத்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு விருப்பமானதாக இல்லை.

ஜனநாயகத் தன்மையை அங்கீகரிக்க வேண்டும்

சாதிவாரி கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவ ரங்களின் உதவியோடு சாதிய உணர்வுகள் அதிக ரிக்கும் என்ற மற்றொரு கருத்து பரவலாகக் காணப்படு கிறது. இது ஓர் தவறான வாதமாகும். சாதி தனித்தன்மை, அடையாள உணர்வு என்பதெல்லாம் சாதிய அடுக்கின் உள்ளார்ந்த பண்பாகும். சாதிய முறை அழித்தொழிக் கப்படாதவரை இத்தகைய கருத்துக்களின் அடிப்படை கள் இருந்துகொண்டே இருக்கும். பல்வேறு காரணங்க ளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமலேயே கூட, நமது சமூகத்தில் சாதி அடையாள உணர்வு அதி கரித்துக் கொண்டே வருகிறது. தங்களது தேர்தல் ஆதா யங்களுக்காக முதலாளித்துவ அரசியல் கட்சிகள் இத்தகைய சாதிய உணர்வுகளை விசிறி விட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதி கரித்து வருவதால், சாதிய அடையாள உணர்வு அதிக ரிக்கும். ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான இத்தகைய சாதிய அடையாள உணர்வு குறுகிய கண்ணோட்டத்து டனானது என்றபோதும், அதில் அடங்கியுள்ள ஜனநாய கத் தன்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பதன் மூலம் சாதிய உணர்வை நம்மால் கட்டுப்படுத்த இயலும் என நினைப்பது தவ றான ஒன்றாகும். மாறாக, சாதிய நடைமுறைக்கு எதி ரான நமது போராட்டத்தின் மூலமே சாதிய உணர்வு களை நம்மால் அழித்தொழிக்க இயலும்.

இடஒதுக்கீடு தொடர்பான புதிய கோரிக்கைக ளுக்கும், தற்போது நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட் டில் மறுபகிர்வுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வழி வகுக்கும் என்ற வாதத்தை முன்வைத்து வேறுசிலர் இதனை எதிர்க்கின்றனர். இந்த வாதத்தில் சிறிதளவு உண்மை இருக்கிறது. எனினும், சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்படாதபோதும் இத்தகைய கோரிக்கை கள் எழுப்பப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள் ளப்பட வேண்டும். புதிய சாதிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட கமிஷன்கள் பரிந்துரைக்கின்றன- அரசி யல் கட்சிகளும் இத்தகைய இடஒதுக்கீடுகள் தொடர் பான வாக்குறுதிகளை அளிக்கின்றன. இத்தகைய இடஒதுக்கீடுகள் குறித்த முடிவுகளை அரசுகளும் எடுக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத போதும் கூட இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

சமூகநீதியை எட்டுவதில் அடைந்த தோல்வி அம்பலமாகும்

சொல்லப்போனால், ஒரு சில பிரிவினரின் இத்த கைய கோரிக்கைகளின் நியாயத்தன்மை குறித்து முடி வெடுக்கவும், வேறு சில பிரிவினரின் கோரிக்கைகளை நிராகரிக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு உதவிடக் கூடும். இடஒதுக்கீடு தொடர்பாக அரசுகள் எடுத்த முடிவுகள்,சரிபார்க்கத்தக்க தரவுகளின் அடிப்படை யில் எடுக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு சந்தர்ப் பங்களில் அம்முடிவுகளை நீதிமன்றங்கள் நிராகரித் துள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது, சட்டநுணுக்கங்களை முன்வைத்து நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளை தள்ளுபடி செய்ய இய லாது. மேலும், சமூக-பொருளாதார, கல்வி தொ டர்பான வளர்ச்சிக்கும் சாதிக்கும் இடையேயான இணைப்பை புரிந்து கொள்ளவும், நாளது தேதி வரை பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனுக்காக ஆளும் வர்க் கங்களின் கொள்கைகள் மற்றும் இடஒதுக்கீட்டின் தாக்கங்களை மதிப்பீடு செய்திட சாதிவாரி கணக்கெ டுப்பு உதவி செய்திடும். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் இன்னமும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் எஸ்சி, எஸ்டி மற்றும் சில ஓபிசி சாதிப் பிரிவினரின் உண்மை நிலை வெளிப்படும். ஆளும் வர்க்கங்களின் திவால் கொள்கைகளும், சமூகநீதியை எட்டுவதில் அவர்கள் அடைந்துள்ள தோல்வியும் அம்பலப் படுத்தப்படும்.

இருந்தபோதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடை முறையானது சமூகநீதியை எட்டுவதற்கும், ஒடுக்கப் பட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைக ளுக்கு தீர்வளிக்கும் மாமருந்து என ஒரு சில அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் முன்வைக்கின்றனர். இத்த கைய அணுகுமுறை குறித்து நாம் கவனத்தோடு இருக்க வேண்டும். நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, தங்களது சாதி/இனம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளபோதும் சமூக நீதியைப் பெறு வதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரின் அனுபவம் பரிதா பகரமாகவே உள்ளது. சமூகநீதிக்கு தீங்கிழைக்கும் கொள்கைகளின்பால் நமது கவனத்தை இது ஈர்த்திட வேண்டும்.

சமூக நீதிக்கான போராட்டத்தில் உதவும் ஆயுதமாகும்

நவீனதாராளவாத கொள்கைகளின் அமலாக்கத் திற்குப் பிறகு, குறிப்பாக மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னர், தனியார் மயம், பணமாக்கல், மானிய வெட்டு, நலத்திட்டங்க ளில் வெட்டு, நிலச்சீர்திருத்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது, ஏழை மற்றும் நடுத்தர விவசாயி களை திவாலாக்கும் புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் இதர இத்தகைய கொள்கைகள், இடஒதுக்கீட்டின் பயன் பாட்டை பெருமளவில் குறைத்ததோடு, நலத்திட்டங்க ளின் முக்கியத்துவத்தை வெட்டிச் சுருக்கியுள்ளன. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும்கூட இத்தகைய கொள்கைகளுக்கு எதிராகப் போராடாமல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்ற மாயையில் நாம் இருந்து விடக் கூடாது.

அதே நேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பால் எந்தவித பயனும் இல்லை என நாம் நினைக்கக் கூடாது. பல்வேறு சாதியினரின் நிலை குறித்த ஆதாப் பூர்வமான, அறிவியல்பூர்வமான தகவல்கள் கிடைப்பது அவர்களது உண்மை நிலையை நாம் உணர்ந்து கொள்ள உதவிடும். மேலும், சமூகநீதியை எட்டுவ தற்கான மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கவும் உத விடும். சாதிய அடையாள உணர்வின் குறைபாடுகளை யும், வர்க்க உணர்வை வளர்த்தெடுப்பதற்கான அவசி யத்தையும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் உணர்ந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் உதவிடும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத் தப்படுவதன் மூலம் அதிசயங்கள் ஏதும் நடந்துவிடும் என நாம் எதிர்பார்க்காதபோதும் கூட, மேற்கூறப்பட்ட காரணத்திற்காகவே நாம் இதனை கோருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் உண் மையான தரவுகளை சமூகநீதிக்கான நமது போராட் டத்தில் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள இயலும்.

இன்றைக்கும் கூட சொத்துக்களும், செல்வங்க ளும் மேலாதிக்க, உயர்சாதியினரின் கைகளிலேயே குவிந்துள்ளன. எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவின ரில் பெரும்பாலானோர் இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர். தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகின்ற னர். சாதிய ஒடுக்குமுறை இன்னமும் பரவலாக நடை முறையில் உள்ளது. நிலக்குவியலை உடைத்திடாம லும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்யாமலும் சமூகநீதியை நம்மால் எட்ட இயலாது.

பி.வி. ராகவலு தமிழில் : எம்.கிரிஜா

Leave a Reply