தமிழ்ச்செல்வனின்
நூல் வெளியீட்டு விழா – பாராட்டு விழா

புதுச்சேரியில் இரு பெரும் விழா தோழர் தமிழ்ச்செல்வனின்
நூல் வெளியீட்டு விழா – பாராட்டு விழா

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வனின், “திருப்பியடித்த வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவும், பாராட்டு விழாவும் புதுச்சேரியில்  02.05. 2026 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு சார்பில், புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்,

தஞ்சை மண்ணில் நிலப் பிரபுக்களை எதிர்த்து வீரம் செறிந்த அரசியல் சித்தாந்த போராட்ட வரலாறுகளை  தொகுத்து, ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இரண்டு பாகமாக இந்த நூலை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஆவணமாக தயாரித்துள்ளார்.

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி நில உடமையை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கங்கள், ஜாதிய தீண்டாமை கொடுமைகளையும் ஒழித்து மனிதனாக உயர்த்தியது, குத்தகை விவசாயிகளுக்கு நில உரிமை கிடைத்தது,  நில உடமையாளர்களிடம் கையேந்தும் நிலை மாற்றப்பட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் வெறும் சட்டத்தால் மட்டும் நடைபெறவில்லை. 50 ஆண்டுகால செங்கொடி இயக்கத்தின் தியாகம் நிறைந்த போராட்டத்தால் நிகழ்ந்தது.

இந்தப் போராட்டங்களை தமிழ்ச்செல்வன்  பதிவு செய்திருக்கிறார். கடந்த 1940 -50 களில் இருந்தது போன்ற இயக்கங்கள் இப்போது இல்லையே என்று சலிப்படைவது அர்த்தமற்றது. இந்த வரலாறுகளின் மூலம் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான முழக்கங்களை நாம் உருவாக்க வேண்டும். கடந்த கால வரலாறுகளை நாம் அறிந்து கொள்வது எதிர்கால இயக்கங்களுக்கு நாம் திட்டமிடுவதற்கு தான் என்ற புரிதலோடு நாம் பணியாற்ற வேண்டும்.

நமது முன்னோர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள தமிழ்ச்செல்வனின் இந்த ” திருப்பி அடித்த வரலாறு”  நூல் நமது கட்சித் தோழர்களுக்கு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.இன்னும் எத்தனையோ தியாக வரலாறுகளை நாம் தொகுக்க வேண்டி உள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் இந்தியாவில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறுகளை வெளிக்கொண்டு வர வேண்டிய கடமை நம் முன் உள்ளது. கிழக்கு தஞ்சை டெல்டா மட்டுமில்லாமல், புதுச்சேரி, தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடந்த வீரஞ்செறிந்த செங்கொடி இயக்கத்தின் போராட்ட வரலாறுகளை நாம்  வெளிக்கொண்டு வரவேண்டும். 

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள், மாற்று முகாமில் இருந்தாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். இது கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை யாராலும் மறுக்க முடியாது என்பதற்குச் சான்று.கம்யூனிஸ்டுகள் வரலாற்றை படைப்பவர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.    இதை யாராலும் மறுத்து பேச முடியாது.   எனவேதான் வரலாற்றை பேசுபவர்களாக நாம் இருந்துவிடக் கூடாது, வரலாற்றைப் படைப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

தஞ்சையின் நிலவுடைமை கோட்டைகளை தகர்த்திருந்தாலும், எண்ணற்ற தியாகங்களை செய்திருந்தாலும் தற்போது முதலாளித்துவ கட்சிகளால் இடதுசாரி இயக்கங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது? பாசிச பா.ஜ.க.வை தமிழ் மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அணி சேருவது தற்காலிகமானது. போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதும், ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நமது இயக்கம் விரிவான அளவில் கட்டப்பட வேண்டும். அதற்கு இந்த வரலாற்று ஆவண நூல் பயன்படும். நிறைவாக, இந்நூல்  இந்தியாவில் பிற மாநிலங்களில் போராடக்கூடிய இயக்கங்களுக்கு பயன்பெறும் வகையில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டும் என்றார்.

‘திருப்பி அடித்த வரலாறு” நூலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் சுதா சுந்தரராமன், வெ.பெருமாள் திரைப்பட இயக்குனர் சிவகுமார் மோகனன்ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நூலை பெற்றுக் கொண்ட தோழர் அ.மு.சலீம் தனது உரையில்

இந்தியாவில் முதல் கம்யூனிஸ்டு கட்சிகிளை தொடங்கப்பட்டபோது, பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட வீரர், முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர்கள் வ.சுப்பையா,    பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், சீனிவாசராவ் ஆகியோர்கள் இருந்ததையும் நினைவு கூர்ந்து, தஞ்சை வரலாற்றுடன் புதுச்சேரி பிரதேசமான காரைக்கால் வரலாறும்  பிணைந்து இருக்கிறது.

மேலும் கம்யூனிஸ்டுகள் பொருளாதாரக் கோரிக்கைக்காக போராடுவார்கள் என்பதை பொய்யாக்கி, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஜாதியைக் கொடுமை, தீண்டாமை கொடுமைக்கு எதிராக பண்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள். கூலித் தொழிலாளி தோளில் துண்டு போடுவதற்கான உரிமையும் பெற்று தந்தது செங்கொடி இயக்கம். பண்பாட்டுப் போராட்டத்திலும் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் களே முன் நின்றனர்.

நூலினை பெற்றுக்கொண்ட திரை இயக்குனர் சிவகுமார் மோகனன்

“நம்பிக்கையும், உணர்வுகளும் உழைப்பின் மூலமே அர்த்தம் பெறும் என்ற செக் நாட்டின் பிரதமர்  எழுத்தாளர் வேஸ்லவ்  ஹேவல் கூற்றை நினைவு கூர்ந்தார். தோழர் தமிழ்ச்செல்வன் தனது எழுத்தாற்றலை இயக்கத்திற்காக அர்ப்பணித்தவர். அவரது புனைவுகள் அதிகம் வெளிவருவது தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் என்றார்.

முன்னதாக, திருப்பி அடித்த வரலாற்றின் வாசிப்பு அனுபவங்களை இளம் தோழர் வந்தனா சங்கர்   செயற்குழு உறுப்பினர் தோழர் கொளஞ்சியப்பன் ஆகியோர் பதிவு செய்தனர்.வெண்மணி நிகழ்வு, அதை யொட்டிய  மைதிலி சிவராமன் அவர்களின் பதிவு,  பெரியார் ஈ.வெ.ரா. வின் கொள்கை முரண், தஞ்சை வட்டார வழக்குச் சொற்கள்,  கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாக வாழ்க்கை, வாழ்வு முறைகள் போராட்ட அனுபவங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர்.

திருப்பி அடித்த வரலாற்று நூலை அறிமுகம் செய்த, த.மு.எ.க.ச.  பொதுச் செயலாளர் தோழர் களப்பிரன்

இந்நூலில் தஞ்சை மாவட்ட கட்சி வரலாற்றுடன் புதுச்சேரி மாநில காரைக்கால் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.1976 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவு நாளில், கட்சித் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற தோழர்களுக்கு மாவட்ட குழுவின் சார்பில் சுற்றறிக்கை விடப்படுகிறது. அவ்வறிக்கையில் வாசிப்பு அனுபவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கட்சித் தலைவர்களின் தியாக வரலாற்றையும், தத்துவ நூல்களையும் வாசிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது . படிக்காமல் இருப்பதற்கு எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கட்சியின் மாவட்டச்  சுற்றறிக்கையை சுவாரசியமாக விவரித்தார்.

கம்யூனிஸ்டுகளின் நில மீட்பு போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உருவாக்கப்பட்ட பூதான இயக்கம், கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் தலைமையில் நடந்த இயக்கங்கள், விவசாயிகளின் போராட்டத்தால் நிலச்சு வான்தார்களுக்கு உருவாகியிருந்த மனமாற்றத்தையும்  தோழர் ஜி.வீரையன் அவர்கள் போராட்டத்தில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் இந்நூல் எவ்வாறு விவரிக்கிறது? மேலும் கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்காத மக்களையும் நேசித்த தோழர் வீரையன் அவர்களது பதிவையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார்.

தமிழ்ச்செல்வன் சிறுகதை எழுத்தாளராக இருப்பதால், தஞ்சை விவசாயிகளின் போராட்டத்தை பதிவு செய்த எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் உள்ளிட்ட பலரின் சிறுகதை பதிவுகளையும் இந்நூல் விவரிக்கிறது.
தோழர் தமிழ்ச்செல்வனின் கடுமையான உழைப்பு, அவர் சேகரித்த தரவுகள் இதுபோன்ற இன்னும் நான்கு நூல்களை எழுத முடியும்.  இந்நூலுக்காக அவருடைய உழைப்பு, வாசிப்பு பாராட்டத்தக்கது என்று நிறைவு செய்தார்.

தோழர் தமிழ்ச்செல்வன்  சாகித்திய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டுரை வழங்கிய எழுத்தாளர் மாதவராஜ்

தோழர் தமிழ்ச்செல்வன் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக, இரண்டு சிறுகதை தொகுப்புகளை வழங்கிய, அப்போது பலராலும் பேசப்பட்ட சிறுகதை எழுத்தாளர். அந்தச் சிறுகதைகளில் வந்த பெரும்பாலான பாத்திரங்கள் அவரே ஆகும்.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இயக்கங்களில் அவர் பணியாற்றினார். களச் செயல்பாட்டாளராகவும், இயக்கங்களின் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார். அவர் பெற்ற அனுபவங்களை, பயன்களை தனது எழுத்தின் மூலம் பிறருக்கு கடத்திக் கொண்டே இருந்தார். அது மட்டுமல்ல காலத்திற்கு தேவையானதை எழுத்துக்கள் மூலம் பதிவு செய்தார். வ.உ.சி, இந்திய விடுதலைப் போராட்ட பொன்விழா, தொழிற்சங்க வரலாறு, அறிவொளி  இயக்க செயல்பாடு தன்னுடைய வாழ்நாள் அனுபவங்களை, நிகழ்வுகளை எல்லாம் இயக்கங்களுக்காகவும், அனைவரும் பயன்பெறவும் எழுத்தாக்கினார்.

நாம் பேசிக் கொண்டிருக்க கூடிய தஞ்சை மாவட்ட வரலாறு ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள், போராட்டங்கள் அனைத்தையும் வரலாற்று ஆவணமாக பதிவு செய்வதற்கு நீண்ட உழைப்பை செலுத்தி இருக்கிறார். சாணிப் பாலும் சவுக்கடி கொடுமையும் நடந்த போது அங்கே வாழ்ந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னணி பேராசான்களாக கருதக்கூடியவர்கள் பதிவு செய்யவில்லை. அதைப் பதிவு செய்வது  வரலாற்றாக்குவது தான் சார்ந்த இயக்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்று தோழர் தமிழ்ச்செல்வன் உணர்ந்ததால் ‘திருப்பி அடித்த வரலாறு’ உருவாகி இருக்கிறது.

அவர் படித்த ஆயிரக்கணக்கான சிறுகதைகள், சிறுகதை ஆசான்களின் வரலாறு, அவர்களிடமிருந்து தான் பெற்ற உணர்வு அத்தனையும் இணைந்து உருவானது தான் சிறுகதைத் தடங்கள். அதற்கு சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டிருக்கிறது. தோழர் தமிழ்ச்செல்வன் பெற்ற விருது அனைவருக்குமானது. நமக்கானது.  எனவே நாம் அவரைக் கொண்டாடுவோம் என்றார்.

பாராட்டுரை வழங்கிய பேராசிரியர் பா.ரவிக்குமார்

தோழர் தமிழ்ச்செல்வனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற “தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்”நூல் ஆய்வு மாணவர்களுக்கு உரியது. இதில் இடம் பெற்றிருக்க கூடிய 52 எழுத்தாளர்களின் சிறுகதைகள் குறித்த ஆய்வுகள் மூலம்அவர்கள் வாழ்ந்த காலங்களில் சமூக வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும்.

பல பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுப் புலங்களிலும் விவாதிக்க வேண்டிய மிகச்சிறந்த நூல். இந்த நூல் பல ஆய்வு மாணவர்களை உருவாக்குவதற்கான ஆய்வுத் தரவுகள் பொதிந்து கிடக்கின்றன. இதை வருங்காலத் தலைமுறை மாணவர்களிடம் கொண்டு செல்வது நமது கடமை என்றார்.

எழுத்தாளர் தோழர் ச .தமிழ்ச்செல்வன் தனது ஏற்புரையில்,
திருப்பி அடித்த வரலாறு நூல் எழுதிய அனுபவத்தை விட, ஒரு நூற்றாண்டு தியாகவரலாற்றை வாசித்த அனுபவங்களே என்னிடம் இருந்தது. இந்த நூல் நமது கட்சி அணிகள் அனைத்தும் வாசிக்க வேண்டும்.
இதற்கு முக்கிய காரணம் தஞ்சை வரலாற்றின் மூலம், பல்வேறு தியாகங்களை செய்த தலைவர்கள் கூட, தாங்கள் ஏற்றுக் கொண்ட தத்துவத்திலிருந்து எவ்வாறு விலக முடிந்தது? காலம் முழுவதும் எந்த நோக்கத்திற்காக தங்களது வாழ்க்கையை இழந்தோமோ! யாரை எதிர்த்து சமர் புரிந்தோமோ? அவர்களிடமே எப்படி இணைய முடிந்தது. இதைப்பற்றி என்னுடைய கருத்தை நான் சொல்லாமலேயே, இவையெல்லாம் வரலாறுகள் என்று நான் பதிவு செய்திருக்கிறேன். காலத்திற்கு ஏற்றவாறு முழக்கங்களை உருவாக்குவது, அதற்காக திட்டமிடுவது போன்ற அனுபவங்களை இந் நூலில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் மூலம் நாம் பெற முடியும். இந்நூலை கட்சித் தோழர்கள் அனைவரும்  வாசிப்பது பொருத்தமாக இருக்கும். இடையில் எனக்கு கிடைத்த, சாகித்திய அகாடமி விருது ஒரு புறம் இருக்க, ‘திருப்பி அடித்த வரலாறு’ நமது கட்சி அணிகளுக்கு சென்று சேர்வதும், அதை வாசிப்பு இயக்கமாக தொடர்வதுமே பொருத்தமாக இருக்கும் என்று நிறைவு செய்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற கட்சியின் மாநிலச் செயலாளர்,
எஸ் .ராமச்சந்திரன் தனது உரையில்

தோழர் தமிழ்ச்செல்வனின் எழுத்து அதற்கு கிடைத்த அங்கீகாரம் அத்தனையும் அவரது எழுத்திலும், படைப்புகளிலும் உள்ள நேர்மையே ஆகும். அவரது ஒவ்வொரு எழுத்திலும் அவரது வர்க்கப் பார்வை துல்லியமாக வெளிப்படும். தான் சார்ந்த இயக்கத்தையோ கொள்கையோ எந்த படைப்பிலும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவரது திருப்பி அடித்த வரலாறு அனைவரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டிய நூல். நிலவக்கூடிய அரசியல் சமூகச் சூழலில் மட்டுமல்ல. காலம் முழுவதும் பொதுவுடமை இயக்கம் எதிர் வர்க்கங்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பாசிசத்தை வீழ்த்த நாம் பல்வேறு இயக்கங்களுடன் அணி சேர வேண்டி இருக்கிறது. இவை அனைத்தும் தற்காலிகமானது. தமிழக  இந்தியச் சூழலில் உழைக்கும் மக்களின் உரிமைகளை , வாழ்வாதாரத்தை பாதுகாக்க இடதுசாரி இயக்கங்களே தீர்வு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியையும், அதன் வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களை கட்டுவதுமே நிரந்தர தீர்வாகும்.அதற்கு தோழர் தமிழ்ச்செல்வனின் இந்த வரலாற்று ஆவணம் நமக்கு கை கொடுக்கும் என்றார்.


சாகித்திய அகாடமி விருது பெறுவதற்கும் இயக்கங்கள் நடத்த வேண்டியிருக்கிறது. தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு விருது வழங்கி,சாகித்திய அகாடமி  பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

முன்னதாக சிபிஎம் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி விழாவில் பங்கேற்றவர்களை வரவேற்றார். விழாவில் விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மாவட்ட தோழர்கள் சுப்பிரமணியன் சங்கர் ரமேஷ்பாபு மற்றும் புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நாரா. கலைநாதன்  வ. சுப்பையா  வழக்கறிஞர் ஜீவானந்தம்,   சிபிஎம் மாநில செயற்குழு தோழர்கள் ஆர்.ராஜாங்கம்,  ஜி.சீனிவாசன், த.தமிழ்செல்வன்,சத்தியா , மற்றும் கட்சியின் மூத்த தோழர்கள், மாநில குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply